samedi 29 juin 2019

மிறைக்கவி மேடை - 3



மிறைக்கவி மேடை - 3

துாசங்கொளல்
துாசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது.
அத்தி வரதா
கஞ்சி வரதரே காயும் கடுவெயிலுக்
கஞ்சிக் கிடந்தீரோ? நீர்க்குளத்தில் - மஞ்சன..நீர்
ஆட்டக் கரையேறும் அத்தி வரதாவுன்
காட்டா வடிவம்தான் காட்டு!
பாவலர் ஐயப்பன்
கண்ணுறக்கம் தண்குளத்துள் காண்பதுமேன்? பன்னாளாய்
மண்ணுறக்கம் இன்றி வதைகின்றேன்! - விண்ணுறக்கம்
நானுறும்..முன் வேண்டுகிறேன்! நாரணா உன்னுடைய
கானுறும் பூமுகம் காட்டு!

பாவலர் ஐயப்பன் பாடிய பாடலுக்கு நான் பாடிய துாசங்கொளல்.

பிரான்சில் நடைபெறும் யாப்பிலக்க வகுப்பில் மாணவர்களுக்கு மிறைப்பா நடத்தினேன்.  மாணவ மாணவியர் பாடிய வெண்பாவுக்குத் துாசங்கொளல் பாடினேன்.

நாவினிக்க நற்றமிழை நல்கிடுவாய்! வெள்ளிதழ்ப்
பூவிருக்கும் நாயகியே! பொற்கொடியே! - பாவினிக்கும்
சிந்தையுறச் செந்தமிழின் சீர்மகளே! என்றும்..நீ
விந்தையுறை வேதத்தின் வித்து!

பாவலர் கவிப்பாவை
23.06.2019

பாவலர் கவிப்பாவையின் வெண்பா 'நா' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் நிறைவுற்றது.

'து' என்ற எழுத்திலிருந்து மேனோக்கி 'நா' என்ற எழுத்தில் நிறைவுறும் வண்ணம் ஒரு சில நிமிடங்களில்  நான் எழுதிக் காட்டிய வெண்பா.

நானினிக்கப் பாடுகிறேன் நாளெல்லாம் நாரணனே
தேனினிக்கப் பாடுகிறேன் சீர்பெறவே! - வானொலிக்கத்
தங்குபுகழ் மின்னுமே! சந்த நடையேந்திப்
பொங்குதமிழ் மின்னுமே பூத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
23.06.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire