lundi 7 octobre 2013

ஈருடல் ஓருயிர்




ஈருடல் ஓருயிர்

சின்னவள் என்றே எண்ணிச்
    சிந்தையில் கொள்ள வேண்டாம்!
என்னவள் சாதி யாலே
    இருவரைப் பிரிக்க வேண்டாம்!
தென்னவள் மொழியே தேனாம்!
    தேவியின் விழியோ மீனாம்!
பொன்னவள் மாதும் நானும்
    புதியதோர் உலகைக் காண்போம்!

ஈருடல் ஒன்றே யாகி
    ஓருயி ராக வாழ்வோம்!
பேருடன் புகழுஞ் சேரப்
    பெருநெறிக் குறளை ஏற்போம்!
பாருடன் கூடி நாளும்
    பைந்தமிழ்த் தாயைக் காப்போம்!
சீருடன் பணிகள் செய்து
    சிறப்பெலாம் சூழக் காண்போம்!

அன்பெனும் அமிழ்தி னாலே
    அழகுடன் திகழ்வோம்! நல்ல
பண்பெனும் பயிர்வி ளைத்துப்
    பாரினில் உயர்வோம்! வாழ்வில்
துன்பெனும் பேயை யோட்டித்
    துணிவுடன் நிற்போம்! என்றும்
இன்பெனும் தமிழைப் போற்றி
    ஈடிலாப் புகழைக் காண்போம்!

முத்தமிழ் நல்கும் தேனாய்
    முக்கனி சேர்ந்த சாறாய்ச்
சித்திரைத் தென்றல் காற்றாய்ச்
    சிந்தனை சுரக்கும் ஊற்றாய்
முத்திரை பதித்த பொன்னாய்
    மூதுரை கூறும் பண்பாய்
இத்தரை வாழ்வோர் போற்ற
    இணையிலா வாழ்வைக் காண்போம்!

28.05.1985
 

12 commentaires:

  1. /// துன்பெனும் பேயை யோட்டித்
    துணிவுடன் நிற்போம்! என்றும்
    இன்பெனும் தமிழைப் போற்றி
    ஈடிலாப் புகழைக் காண்போம்! ///

    சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. இத்தனைத் தெளிவாய் இருப்பவர்கள்
    நிச்சயம் நல்வாழ்வைக் குறையின்றித் தான்
    தொடர்வார்கள்
    மனம் கவர்ந்த அருமையான கவிதை பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. இருவரும் இணைந்தே பல்லாயிரம்
    ஆண்டு இன்பம் காண வாழ்த்துக்கள் !
    அருமை !

    RépondreSupprimer
  4. ஈருடல் ஓருயிராய் இருக்குதையா தமிழிங்கே!
    தேருடன் உலாவரும் தெய்வம் இருப்பதுபோல்!
    நாருடன் பூமணம் நன்கே அமைந்திடுமே!
    வேருடன் விழுதாகி வாழ்ந்திடுமே மொழியிங்கே!

    அழகு கவிதை ஐயா!..
    உங்கள் கவிகள் எங்கள் மனதில்
    தமிழுணர்வினைப் பெருக்குகின்றது...

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  5. முத்திரைப் பதித்த உந்தன் கவிதையை இத்தரை வாழ்வோர் போற்ற இணையிலா வாழ்வை நீர் காண்பீர் வாழ்த்துக்கள் தளிஞ்சான் முருகைய்யா, பேராசிரியர், சொர்பொன் பல்கலைக்கழகம்,பாரீஸ்,பிரான்சு

    RépondreSupprimer
  6. முத்தமிழ் நல்கும் தேனாய்
    முக்கனி சேர்ந்த சாறாய்ச்
    சித்திரைத் தென்றல் காற்றாய்ச்
    சிந்தனை சுரக்கும் ஊற்றாய்
    முத்திரை பதித்த பொன்னாய்
    மூதுரை கூறும் பண்பாய்
    இத்தரை வாழ்வோர் போற்ற
    இணையிலா வாழ்வைக் காண்போம்!

    -----------

    கவிதை அருமை ஐயா...

    RépondreSupprimer
  7. ரசித்து சுவைத்தேன் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்

    RépondreSupprimer
  8. வணக்கம்
    ஐயா.

    கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  9. என்றோ எழுதினாலும் இன்றும் இனிக்கும் பழம் பெரும் பாடல்!

    RépondreSupprimer

  10. காதல் பயிர்விளைத்துக் கன்னல் மழைபொழிந்து
    ஈதல் நெறிவளா்த்து இன்குறளை - ஓதியே
    ஈருடல் ஓருயிர் என்றே இருப்பவா்
    சீருடன் வாழ்வார் சிறந்து.

    RépondreSupprimer