dimanche 27 octobre 2013

கம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)
பிரான்சு கம்பன் விழாத் தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்!

உலகம் பிறந்த பொழுதினிலே
     உதித்த மொழியே! உயர்தமிழே!
திலகம் ஆக எனக்குள்ளே
     திகழும் அழகே! செந்தேனே!
கலகம் நிறைந்த பாதையினைக்
     கழுவும் கவியாய் எனைச்செய்க!
குலவும் அன்பே! என்தாயே!
     குறைகள் பொறுத்துக் காப்பாயே!

இறை வணக்கம்!

வில்லும் சொல்லும் விளையாடும்
     விந்தை அழகா! வியன்இராமா!
கல்லும் உன்னால் உயிர்பெற்றுக்
     கதைத்த செயல்போல், என்கால்கள்
செல்லும் பாதை கவிபாடச்
     செய்தால் என்ன? என்னரசே!
வெல்லும் வண்ணம் என்..நாவில்
     துள்ளும் தமிழைத் தந்தருளே!

கம்பன் வணக்கம்!

கம்பன் என்றன் கருத்தமர்ந்து
     கவிதைக் காதல் புரிகின்றான்!
வம்பன் என்றன் வாயடக்கி
     மழையோல் தமிழைப் பொழிகின்றான்!
செம்பொன் போன்றே ஒளிர்கின்றான்!
     சிந்தை முழுதும் நிறைகின்றான்!
நம்பன் என்றே நல்லடியை
     நாளும் தொழுது மகிழ்கின்றேன்!

விழாத் தலைவர் வணக்கம்!

இந்த விழாவின் நற்றலைமை
     ஏற்ற புலவர்! இன்மனத்தர்!
சந்தக் கவிதைக் கற்கண்டைத்
     தந்த கவிஞர்! தமிழ்த்தொண்டர்!
சொந்தம் வாணி தாசர்க்கு!
     தூய கலிய பெருமானார்!
கந்தம் கமழும் மலர்தூவிக்
     கால்கள் பற்றி வணங்குகிறேன்!

அருட்செல்வர் சோசப் வணக்கம்

ஆழ்வார் அருளால் அரும்சோசப்
     அளித்த அமுதை உண்டவர்கள்
ஏழ்பார் உய்யும் வழிகாண்பார்!
     எந்தை இராமன் திருவழகில்
வீழ்வார்! விழிகள் தாம்பணித்து
     வினைகள் அறுத்தே உயர்வடைவார்!
ஊழ்..பார் பறக்கும்! திருத்தொண்டர்
     ஒளிரும் அடியை வணங்குகிறேன்!

முனைவர் பர்வீன் சுல்தானா வணக்கம்

சர்ரென்(று) ஓடும் ஊர்தியிலே
    தமிழை எந்தி வந்துள்ளார்!
பெர்லின் நாட்டின் அழகாகப்
    பர்வீன் சுல்தான்! வணங்குகிறேன்!
ஊர்ரென்(று) இங்கே இருப்பவர்கள்
    உயர்ந்த அடிகள் தாம்கேட்டுச்
சொர்ரென்(று) இறங்கும் மழைபோலச்
    சூட்டி மகிழ்வீர் கையொலியே!

அவை வணக்கம்!

சீறும் சிறுத்தை அடங்கிடுமோ?
    சிலிர்க்கும் சிங்கம் அடங்கிடுமோ?
கூறும் சொற்கள் தாம்கேட்டு
    கூவும் குயிலும் அடங்கிடுமோ?
ஏறும் புலியும் அடங்கிடுமோ?
    இறைவன் விளையாட்டு அடங்கிடுமோ?
ஆறும் கடலும் பொங்குவதை
    ஆ..ஊ.. என்றால் அடங்கிடுமோ?

ஊறும் உணர்வில் தமிழேந்தி
     உட்கார்ந் துள்ள அன்பர்களே!
மாறும் மனத்தை ஓர்நிலையில்
     மடக்கி வைத்த நண்பர்களே!
ஈறு வரையில் இங்கமர்ந்தே
     இன்பத் தமிழைச் சுவைப்பவரே!
வேறு நினைவு துளியின்றி
     வேண்டி உம்முன் அடங்குகிறேன்!

கம்பன் கவியில் ஒளிர்கின்ற
     கருணை, காதல், கடமையினை
எம்மண் காக்கும் எழில்கற்பை
     இங்கே பாட அழைக்கின்றேன்!
இம்மண் உணரும் வண்ணத்தில்
     இனிய தமிழைத் தந்திடவே!
சம்மென் றிருக்கும் இவர்கவிகள்
     சற்றே கூர்ந்து கேட்டிடுவீர்!

14.09.2013 [தொடரும்]

22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகள் அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமையெனும் இந்த அழகிய சொல்லில்
      பெருமையெனைச் சேரும் பெருத்து!

      Supprimer

  2. கம்பன் கவிதையில் ஓங்கி ஒளிர்வதை
    எம்முன் படைக்கும் எழிற்கவியே! - இம்மண்
    இருக்கும் வரையில் எழுதிய..பா வாழும்!
    உருக்கும் மனத்துள் ஒளிர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருக்கும் இனிமையைப் பேணும்! இதமாய்
      உருக்கும் ஒளியினை ஊட்டும்! - செருக்கின்றி
      ஓங்கும் வழிகளை ஓதும்! துயரங்கள்
      நீங்கும் தமிழால் நிலைத்து

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      இனிய கரந்தையார் ஈந்திட்ட சொல்லில்
      கனிகளைக் கண்டேன் கமழ்ந்து

      Supprimer
  4. ஒவ்வொன்றும் மிகவும் ரசிக்க வைத்தது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நண்பா் திறன்எண்ணித்
      தோளும் துடிக்கும் தொடா்ந்து

      Supprimer
  5. இராமனின் கதையை, கம்பனின் காவியத்தை நீங்கள் ஒரு தொடராக எழுதி ,

    இலக்கிய சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயத்தைத் துவங்கவேண்டும்.

    இது எனது ஆவல்

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    முதல் மூன்று வெண்பாக்களையும் பாடியுள்ளேன். விரைவில் தொடர்பு அனுப்புகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கண்ணன் கழலிணை கட்டித் தொழுகின்றேன்
      எண்ணம் நடக்கும் இசைந்து!

      Supprimer
  6. ஆகா. கண்கள் சொருகி சொக்கிப் போகி நிற்கின்றேன். பழைய நினைவுகளெல்லாம் மனதில் அலையடிக்கின்றன. தங்கள் தலைமையில் நானும் கவிபாட உள்ளம் அவாவுகிறது . பேராசை தான். ஆனாலும் ஒருநாள் இறையருளால் நடக்கும் என நம்புகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்லோர் நினைவுகள் நன்றே நடைபெறும்!
      வல்லோன் வகுத்த வழி!

      Supprimer
  7. கம்பனை வணங்கிக் கவி படைத்த
    செம்பொனை நிகர்த்த சொல் வேந்தே!
    இம்மண்ணும் வானும் இருக்குவரை உம்மால்
    எம்மினமும் தமிழும் எழும் நிஜமே!.

    தொடருங்கள் ஐயா!...

    உங்கள் கவிநடையினையும் அழகு சீர்கள் சொல்லும் சிறப்பினையும்
    விபரிக்க ஆற்றல் என்னிடம் இல்லை...

    மிக மிக அருமை! தொடருங்கள் ஐயா!....

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!


    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகுடைச் சீா்களை அள்ளி அளிப்பதுவே
      பழகும் தமிழணங்கின் பண்பு!

      Supprimer
  8. https://www.youtube.com/watch?v=CiXmI7V6HAY
    Veuillez écouter votre chanson ici

    subbu thatha

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      விருத்தக் கவியை விரும்பி இசைத்துக்
      கருத்துள் அமா்ந்தீா் கமழ்ந்து!

      Supprimer
  9. ஊர்ந்து எம்முள் உணர்விலும் உதிரத்திலும்
    சேர்ந்து சில்லிட வைக்கும் பாக்கள்!

    வியந்து நிற்கின்றேன்..
    பாடிய பாக்களில், வரிகளில், வனப்பில்..

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சில்லிட வைத்த செழுமலரே! இன்பத்தை
      மல்கிட வைத்தாய் மலா்ந்து!

      Supprimer
  10. அருமை வரிகள்! தொடர்கிறேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தொடா்ந்து வருக! சுவைசோ் கருத்தைப்
      படா்ந்து தருக படித்து!

      Supprimer
  11. வணக்கம் அய்யா..
    தங்களின் கவிவரிகள் அனைத்தும் அருமை. தங்களைப் போன்ற தமிழறிஞர்களின் எழுத்தைப் பின் தொடர்வதே பெருமையாக இருக்கிறது எமக்கு. தங்கள் தமிழ்ப்ப்ணிக்கு நன்றீங்க அய்யா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாண்டியன் வந்து படைத்த கருத்[து]உவந்து
      தாண்டி மகிழும் தமிழ்!

      Supprimer