dimanche 31 janvier 2021

எதுகை ஓரடிக் கும்மி

 எதுகைத்தொடையால் வந்த ஓரடி கும்மி

 

தந்தன தந்தன தானன - என்று

சந்தமே சிந்திடக் கும்மிய டிoo

 

வண்ணமும் சிந்துவும் துள்ளிவ ரும் - ஓங்கும் 

எண்ணமும்  வாழ்கையும் கும்மிய டிoo

 

காய்மொழி நீங்கிட வேண்டும டி - நம்மின்

தாய்மொழி ஓங்கிட கும்மிய டிoo

 

மண்மணம் வீசிடும் வண்டமி ழே - பாடிப்

பண்மணம் மேவிடும் கும்மிய டிoo

 

காய்கனிச் சீர்கொண்ட முன்மொழி யாம் - தினம்

தாய்பணி ஆற்றியே கும்மிய டிoo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.01.2021

ஓரடிக் கும்மி

 

கண்ணன் ஓரடிக் கும்மி

 

கண்ணன் திருப்புகழ் பாடிடு வோம் -  கும்மி

கைகொட்டிக் கைகொட்டி ஆடிடு வோம்oo

 

மாமலை மாயனைக் கூடிடு வோம் - அவன்

மஞ்சத்தைச் நெஞ்சத்துள் சூடிடு வோம்oo

 

பாற்கடல் மேல்துயில் கொண்டவ னே - தமிழ்ப்

பாக்கடல் மேலுயிர் பூண்டவ னேoo

 

பூம்பள்ளி கொண்டிடும் பொன்னழ கன் - மதுப்

போதையைத் தந்திடும் கண்ணழ கன்oo

 

சங்குடன் சக்கரக் கையுடை யான் - மாயம்

தந்தொளிர் மந்திர மையுடை யான்oo

 

பூமகள் ஆழ்கின்ற மார்புடை யான் - சந்தப்

பாமகள் சூழ்கின்ற வாழ்வுடை யான்oo

 

வில்லம்பு மாறாத சீருடை யான்  - என்றும்

சொல்,அன்பு  மாறாத பேருடை யான்oo

 

பொன்மானை நாடியே ஓடிய வன்  -  பின்னே

பெண்மானைத் தேடியே வாடிய வன்oo

 

தம்பியர் நற்படை ஓங்கிவ ரும் - பாடத்

தண்டமிழ் நற்றொடை ஏங்கிவ ரும்oo

 

ஆழ்வாரின் பாட்டினில் ஆழ்ந்திடு வான் - பாடும்

அன்பகக் கூட்டினில் வாழ்ந்திடு வான்oo

 

பாட்டரசன் கி. பாரதிதாசன்

30.01.2021

காதல் கும்மி

 காதல் கும்மி

 

பார்த்திடும் பார்வையில் பித்திடு வாள் - அவள் 

பாவலன் உள்ளத்தில் மத்திடு வாள்

சேர்த்திடும் சொற்களில்  தேனிடு வாள் - வாழும்

சீரிடு வாள்! தங்கத் தேரிடு வாள்

 

பொன்னிதழ் புன்னகை பூத்தது மே - அடி

புத்தியும் சுற்றிடும் சத்திய மே

மின்னிதழ் தொட்டது தாக்கிடு மே - வண்ண

மீன்விழி சுட்டெனைக் கூத்திடு மே

 

பொங்கிடும் ஆசைகள் பாயுத டி - வாசப்

பூவிழி என்னெஞ்சை மேயுத டி

பங்கிடும் போலெனை ஆயுத டி -காதல்

பைத்தியம் கொண்டுயிர் சாயுதடி

 

கண்ணெழில் காட்டிய காரிகை யாள் - எனைக்

கட்டியே போட்டிங்குச் செல்வது மேன்

பண்ணெழில் மீட்டிய நேரிழை யாள் - ஒரு

பார்வையால் என்னெஞ்சைக் கொல்வது மேன்

 

கூந்தலைச் சீவியே பின்னிடு வாள் - தமிழ்

கூத்திடும் சீர்களில் மின்னுடு வாள்

சாந்தமே கொண்டவள்  என்னிட மே - தினம்

சண்டைகள் செய்திட எண்ணிடு வாள்

 

மென்னடை அன்னமும் வாடிடு மே - அவள்

மின்னிடை நற்கவி பாடிடு மே

பொன்னகை நாடியே கூடிடு மே - மதுப்

புன்னகை, என்துயர் ஓடிடு மே

 

வண்டுகள் மொய்திடும் சோலைய டி - அவள்

வார்த்தைகள்  கட்டிய மாலைய டி

தொண்டுகள் நெய்திடும் ஆலைய டி - அவள்

தொல்லைய டி!இணை யில்லைய டி

 

ஊற்றெனப் பொன்மகள் துள்ளிடு வாள் - குளிர்

காற்றெனத் தொட்டெனைக் கிள்ளிடு வாள்

நாற்றென நல்வளம் கூட்டிடு வாள் - கொடுங்

கூற்றென ஆசையை மூட்டிடு வாள்

 

பொன்மழை போல்வரும் சின்னவ ளே - வாசப்

பூமக ளே!தமிழ்ப் பாமக ளே..

இன்னடை போல்சுவைத் தென்னவ ளே - வண்ண

ஏந்திழை யே!என்னுள் நீந்தினை யே..

 

எத்தனை எத்தனை வண்ணங்க ளோ - சின்ன

ஏந்திழை ஏந்திய பேரழ கு..

இத்தரை மீதிணை இல்லைய டி - தமிழ்

மீட்டிசை பாடிடும் சீரழ கு..

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.01.2021

dimanche 24 janvier 2021

சிந்துப்பா மேடை

 


 சிந்துப்பா மேடை - 14

                                             

கும்மி

 

நீதியைக் காப்பவர் மாறிய தால் - இந்த

நீணிலம் நீரின்றி வாடிடு மேoo

சாதியை ஆட்சியர் சாற்றுவ தால் - கொடுந்

தன்மைகள் சாய்ந்திடப் போரிடு வோம்oo

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

கும்மி, ஓரடியில் 8 சீர்களைப் பெற்றிருக்கும். 'நீதியை' எனத்தொடங்கி 'வாடிடுமே' என்பது வரை ஓரடி. 'சாதியை' எனத் தொடங்கிப் 'போரிடுவோம்' என்பது வரை மற்றோரடி.

 

இவ்விரண்டு அடிகளும் 'நீதியை', 'சாதியை' என ஓரெதுகையைப் பெற்றுள்ளது.

 

ஒவ்வோர் அடியிலும் முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறவேண்டும். [நீதியை, நீணிலம்] [சாதியை, தன்மைகள்]

 

முதல் 7 சீர்களில் ஒவ்வொன்றிலும் மூன்று சிந்தசைகள் இருக்க வேண்டும். [குறில் - குறிலசை,] [குறில் ஒற்றும், நெடிலும், நெடில் ஒற்றும் - நெடிலசை]

 

8 ஆம் சீரில் ஓரசை மட்டும் வந்து இரண்டு அசைகள் அளபெடுத்து ஒலிக்கும்.  மேலுள்ள கும்மியில் அதனை  வட்டம் இட்டுக் காட்டியுள்ளேன். [மேoo] [வோம்oo]

 

ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீர், ஈரசை உடைய தனிச்சொல்லாக வரும். [இந்த, கொடுந்]

தனிச்சொல்லில் ஈரசை வந்ததால் அதன் முன் மூன்றாம் சீரின் சொல்தொடர்புடைய ஓரசை நிற்கும். அதைச் சேர்த்து நான்காம் சீர் மூன்றசையாகும்.

 

சீர்களின் தொடக்கம், குறிலொற்று, நெடில், நெடிலொற்று என அமைந்தால் ஓசை சிறப்பாக இருக்கும். சீர்களின் தொடக்கம் இணைகுறில் இன்றி இருத்தல் நன்று.  
 

விரும்பிய பொருளில் ' கும்மி' ஒன்று மட்டும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

கும்மி இலக்கணம்

 

எண்சீர் அடிகள் இரண்டொரு தொடையாய்

ஐந்தாஞ் சீர்தொறும் மோனை அமைந்தே

ஈரசை இகவாது இயலும் தனிச்சொல்

அரையடி இறுதியில் அமையப் பெற்று

மும்மையின் நடைப்பது கும்மி யாகும்.

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 38 ஆம் நுாற்பா]

 

தனிச்சொல் முதலடி இறுதியில் தாங்கியும்

தனிச்சொலே இன்றியும் சமைவன உளவே.

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 39 ஆம் நுாற்பா]

நான்மையினத் திரிபுடை மும்மை நடை. ( I4 0 0 ) ( 4+2+2 )
இதன் மொத்த எண்ணிக்கை 8

ஒரு சீரில் 3 சிந்தசைகள் வரவேண்டும் ( 8X3=24 சிந்தசைகள் )

அடி : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண்சீரடி

[ஓரெதுகையயில் இரண்டு அடிகள் வரவேண்டும்]

 

சீர் : மும்மை நடை [ஒரு சீரில் மூன்று சிந்தசைகள் வரவேண்டும்]

 

தனிச்சொல் :  நாலாம் சீரின் இறுதிப் பகுதியில் ஈரசைச் சொல்லாக வரும்

 

1, 5 ஆம் சீரிகளில் மோனை அமையவேண்டும்

 

8 ஆம் சீர் ஓரசை மட்டும் வரும், அடியீற்றில் இரண்டு அசைகள் அளபெடுத்து ஒளிக்கும்

 

மேலும் கும்மியைக் குறித்து அறிந்துகொள்ள 'PAAVALAR   PAYILARANGAM' - You Tube  காண்ணொளியைக் காணவும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

24.01.2021.


vendredi 1 janvier 2021

புத்தாண்டு வாழ்த்து


ஆங்கிலப் புத்தாண்டே வருக!

[ஓரடிக்கு ஆறு மாச்சீர்]

புவியே போற்றிப் புகழும் ஆண்டே
          பொழிலாய் மலர்க!

கவியே போற்றிக் கமழும் ஆண்டே

          கலையாய் வளர்க!

தவமே போற்றித் தழைக்கும் ஆண்டே

          தமிழாய்ப் புலர்க!

சிவமே போற்றிச் செய்தேன் விருத்தம்

          செகமே உயர்க!

 

மண்மேல் உழவு மாட்சி மணக்க

            வழிகள் காட்டு!

கண்மேல் அழகு காட்சி மணக்கக்

          காதல் கூட்டு!

விண்மேல் துாய்மை மேவி மணக்க

          விதிகள் தீட்டு!

பண்மேல் என்றன் பாதை மணக்கப்

          பாக்கள் சூட்டு!

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே

          உலகுக்[கு] ஓது!

என்றும் உழைப்பை ஏற்றோர் இடத்தில்

          இன்னல் ஏது?

தின்று கொழுக்கும் சிந்தை கொண்டோர்

          திசையை மோது!

நன்று நன்று நல்லோர் நெறியை

          நாளும் ஊது!

 

மூக்கும் வாயும் மூடும் துணியை

          முற்றும் நீக்கு!

நாக்கும் வாக்கும் நன்றே நடக்க

          நலமே தேக்கு!

ஆக்கும் பணிகள் அமுதாய் இனிக்க

          ஆண்டே நோக்கு!

தாக்கும் கொடுமை! தாழும் சிறுமைத்   

          தன்மை போக்கு!

 

ஆலும் வேலும் அளிக்கும் வன்மை

          ஆன்றோர் வாக்கு!

நாலும் இரண்டும் நல்கும் நன்மை

          நாடித் துாக்கு!

கோலும் ஏடும் கொண்டே வாழக்

          கொள்கை யாக்கு!

வேலும் மயிலும் விளைத்த சீரால்

          வினையைப் போக்கு!

 

முகநுால் வழியே முதலைத் தேடும்

          முடமே மாற்று!

அகநுால் வழியே ஆழும் அன்பை

          ஆண்டே போற்று!

தகுநுால் கற்றுத் தண்மை யுற்றுப்

          சால்பே யாற்று!

மிகுநுால் தேடி வெல்லும்  மனமே

          மேன்மை யூற்று!

 

பாதை யெங்கும் பசுமை படர்ந்து

          படைப்பாய் பொழிலே!

கோதை தமிழின் கோலம் உணர்த்திக்

          கொடுப்பாய் எழிலே!

போதை யேறிப் புலம்பும் செயலைப்

          புடைப்பாய் தனியே!

வாதை நீக்கி வளத்தைத் தேக்கி

          வடிப்பாய் வழியே!

 

வடலுார் வள்ளல் வகுத்த வழியை

          வாரி வழங்கு!

உடலுார் உயிரின் ஒளியாம் நிலையை

          ஓதி முழங்கு!

கடலுார் கலமாய்க் காண வேண்டும்

          கடமை ஒழுங்கு!

மடலுார் மணமாய் வாழ்வை வடித்து

          மண்ணே இயங்கு!

 

மதத்தின் ஆட்சி மகிழ்வைப் போக்கும்

          மதியைப் புகட்டு!

பதத்தின் ஆட்சி பாரைப் புரட்டும்

          பாங்கைத் திரட்டு!

வதத்தின் ஆட்சி வாரா வண்ணம்

          வஞ்சம் அகற்று!

சதத்தின் ஆட்சி தழைக்கும் வாழ்வைச்

          சாற்றி உயர்த்து!

 

பண்டைத் தமிழைப் படிக்கப் படிக்கப்

          பாரே மணக்கும்!

சண்டை நாடு சதிகள் விடுத்துச்

          சால்பைச் சமைக்கும்!

அண்டை வீடும் அண்ணன் உறவாய்

          ஆகி இனிக்கும்!

தண்டைச் சந்தம் தந்தே பாடல்   
          தமிழை இசைக்கும்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

01.01.2021