samedi 3 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 114]




காதல் ஆயிரம் [பகுதி - 114]


951.
பூக்காட்டைச் சூடிப் பொலிக்கின்ற பேரழகே!
பாக்காட்டைச் சூடிப் பயன்தர..வா! - சாக்காட்டைப்
போக்கும் புதுமருந்தே! பொங்கும் தமிழ்விருந்தே!
பூக்கும் புலமைப் பொழில்!

952.
பரவும் நினைவுகளில் பற்றிக் கிடந்தேன்!
விரவும் கனவுகளில் வீழ்ந்தேன்! - விருந்தாய்
இரவில் வருகைதரும் என்னரசே! உன்றன்
உருவில் உருகும் உயிர்!

953.
நித்தம் குரல்கேட்க வேண்டும்! நிலவே!என்
சித்தம் இழந்தேன்! செயல்மறந்தேன்! - கத்திக்
கசியும் கவிமனத்தைக் காணாமல் போனாய்!
வசியம் புரிந்தாய் வளைத்து!

954.
பொன்வேண்டாம்! எந்தப் பொருள்வேண்டாம்! சேர்த்துள்ள
மண்வேண்டாம்! வாழும் வளம்வேண்டாம்! - கண்ணே!உன்
கட்டழகை நான்சுவைக்கும் காலம் கனியட்டும்!
மொட்டழகைப் போர்வையால் மூடு!

955.
குரல்கேட்டு வாயும் குளறும்! இதமாய்
விரல்தொட்டுப் பொன்மேனி வீங்கும்! - திரளாய்
வரும்கனவு நாளும் வளரும்! இனிமை
தரும்உணர்வு நாளும் தழைத்து!

(தொடரும்)

கம்பன் விழா 2013

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழா



காதல் ஆயிரம் [பகுதி - 113]



காதல் ஆயிரம் [பகுதி - 113]


946.
ஒத்தவரி சொல்வாய் உயிர்பிழைக்க! நீ..தந்த
பித்தமடி! நெஞ்சைப் பிழியுமடி! - கொத்துமலர்
போன்று சிரிப்பவளே! போதை கொடுப்பவளே!
ஊன்றும் உணர்வை உணர்!

947.
எண்ணிக்கை இன்றி இனியகனி முத்தங்கள்
கண்ணிமைக்கும் காலத்தில் தந்தவனே! - பெண்ணழகை
அங்குலம் அங்குலமாய் நன்களந்து உண்டவனே!
எங்குள்ளாய் என்னை மறந்து!

948.
நங்கையைத் தேடி நலிவதேன்? வான்மதி
தங்கையைத் தேடித் தவிப்பதேன்? - எங்கிருப்பாள்?
மின்னும் வடிவாய் விளைந்துள்ள ஆசையுடன்
உன்னுள் இருப்பாள் ஒளிர்ந்து!

949.
கட்டி அணைத்துக் கவிபாடு! முத்தங்கள்!
கொட்டிக் கொடுத்துக் குளிர்ந்தாடு! - மெட்டின்
ஒலியோசை என்றன் உயிர்வரை தாக்கும்!
கிளியோசை கொஞ்சும் கிளர்ந்து!

950.
கொஞ்சிடும் பாக்கள் குவிப்பவனே! நல்லமுதை
விஞ்சிடும் பாக்கள் விளைப்பவனே! - நெஞ்சத்தைக்
கஞ்சாய்க் கொதித்திடக் காய்ச்சாதே! உன்னினைவில்
பஞ்சாய்ப் பறக்கிறேன் பார்!

(தொடரும்)

vendredi 2 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 112]



காதல் ஆயிரம் [பகுதி - 112]

941.

வானின் நிறத்தழகில் வந்தவளே! வண்ணமலர்
தேனின் சுவைப்பெருக்கே! தேவியே! - மீனின்
அழுகையைத் தண்ணீர் அறிந்திடுமோ? காதல்
தொழுகையை ஏன்மறந்தாய் சொல்லு!

942.
வெண்பா விருந்தை விளைத்திடவே! வேல்விழியே
பண்பாய்ப் படைத்திடுக பார்வையை! - பெண்ணுனக்கு
நானடிமை ஆனகதை நன்கறிவாய்! உன்னழகில்
தேனடிமை ஆனகதை தேர்ந்து!

943.
மாதின் மனத்தைக் களவிட்ட கள்வனே!
தேதி பலவோடத் தேய்கின்றேன்! - சோதியாய்
நற்செய்தி நல்காயோ? நான்மயங்க என்னழகை
முற்றோதிச் சென்றாயே முன்பு!

944.
உருகுதே என்னுயிர்! மூச்சுவழி ஊர்ந்து
பெருகுதே ஆசைகள்! பித்தால் - கருகித்
தவிக்கின்றேன் உங்கள் தமிழழகில்! கைகளைக்
குவிக்கின்றேன் காதல் கொழித்து!

945.
தூண்டிலிடும் மீனாய்த் துடிக்கின்றேன்! உன்னிதயக்
கூண்டிலிடும் பேற்றைக் கொடுப்பாயா? - வேண்டுகிறேன்
உன்றன் மடிமேல் தலைவைத் துறவாடி
என்றன் உயிரை இணைத்து!

(தொடரும்)

jeudi 1 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 111]




காதல் ஆயிரம் [பகுதி - 111]

936.
உன்குரல் கேட்பதும் இன்பமடி! கற்பனையில்
இன்திரள் காண்பதும் இன்பமடி! - வன்திரள்
மார்புமுடி கோதி மயங்கும் மலர்விழியே!
சேர்ப்பு விதிகளைத் தீட்டு!

937.
என்மனக் காதலை ஏந்திநான் வந்திருந்தேன்!
உன்மனம் ஏனோ உறங்கியது! - என்னவனே!
வன்மனம் கொண்டவனே! காதல் தினமின்று!
பெண்மனம் இன்புறப் பேசு!

938.
என்னடி கோபம் எழிலரசி! உன்னுடைய
பொன்னடி பட்டமனை பூத்தொளிரும்! - இன்னடிகள்
பொங்கி வழியும் புலவன்என் நெஞ்சத்துள்!
தங்கி வழியும் தமிழ்!

939.
நீலநிற சேலையில் நின்னழகைக் கண்டவுடன்
காலநிலை எண்ணிநான் காத்திருந்தேன்! - கோலமுடன்
பக்கம் வரச்சொல்லிப் பாவை அழைத்தவுடன்
சொக்கும் நிலையே சுகம்!

940.
பல்லாடும் காலத்தே பாவலனே உன்பாட்டில்
சொல்லாடும்! சொக்கிச் சுவையாடும்! - வல்லதமிழ்
நல்லாடும் வண்ணம் நவில்கின்ற சொற்கேட்டு
அல்லாடும் என்றன் அகம்!

(தொடரும்)