samedi 13 avril 2024

ஏன் சென்றார்

 

சந்தப்பாமணி

புலவர் அரங்க. நடராசர் ஏன் சென்றார்?  

 

பண்ணியல் ஆய்ந்து படைத்தது போதுமென

விண்ணியல் காண விரைந்தாரோ? - கண்ணியல்பு

இன்றி இழியும்! அரங்க. நடராசர்

என்று வருவார் இயம்பு?

 

நுண்ணிய ஆழ்புலமை! நோக்கம் தமிழ்மேன்மை!

எண்ணிய தெல்லாம் இனவுயர்வு! - கண்ணியம்

மிக்க அரங்க. நடராசர் மேலடைந்தார்!

செக்கெனச் சுற்றும் துயர்!

 

மரபும் கவியும் வடித்தநட ராசர்

திருளும் துயரிட்டேன் சென்றார்? - உரவிடம்

வேகும்! வெடிக்கும்! விழிகள் அலைந்தழுவும்!  

போகும் அவர்பின் புகழ்!

 

ஐயத்தைத் தீர்க்கும் அரங்க நடராசர்

வையத்தைத் தாண்டி வழிகண்டார்! - மையகத்தை

நீக்க வருவாரோ? நெஞ்சம் நினைந்துருகி

ஏக்க முறுமே இருண்டு!

 

எத்தனை மேடைகள்? ஏத்தனை ஆய்வுரைகள்?

சொத்தெனத் தந்த சுடர்மதியர்! - இத்தரையை

விட்டுப் பிரிந்ததுமேன்? கொட்டும் துயர்மழை

கட்டுக் கடங்காது காண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

Aucun commentaire:

Enregistrer un commentaire