dimanche 12 février 2023

பாட்டரசன் படும்பாடு!

 


பாட்டரசன் படும்பாடு!

 

1.

பல்வகைத் துன்பத்தில் பாட்டரசன் வாடுகிறேன்!

நல்வகை காட்டி நலந்தருவாய்! - தொல்லுலகைக்

காத்தொளிரும் கண்ணா! கருணை மழைபொழிவாய்!

பூத்தொளிரும் என்றன் புகழ்!

 

2.

நாய்போல் திரிவதுவோ? நற்றமிழ்ப் பாட்டரசன்

பேய்போல் அலைவதுவோ பேரிடலில்? - தாய்போல்

அணைத்தென்னைக் காத்திடுவாய் அச்சுதா! இன்றே

இணைத்தென்னை உன்னுள் இயக்கு!

 

3.

கூடுந் துயரால் கொதிப்புற்றுப் பாட்டரசன்

வாடும் நிலையேன் மணிவண்ணா? - ஆடும்

விதிமாற்றி வாழ்வை விடுவிப்பாய்! வெல்லும்

மதியேற்றித் தாராய் வளம்!

 

4.

பொல்லா வுறவுகளால் புண்ணாகிப் பாட்டரசன்

கல்லாய்க் கிடைக்கின்றேன் கார்வண்ணா! - எல்லா

நிலையுணர்த்தி என்னுள் இருந்திடுவாய்! பாடும்

கலையுணர்த்திச் செய்கவே காப்பு!

 

5.

அன்னை படுந்துயரால் அல்லுறும் பாட்டரசன்

முன்னை வினையோ? முகில்வண்ணா! - என்னை

உனையன்றி யார்காப்பார்? உற்றவூழ் தீர்ப்பார்?

மனமொன்றி வேண்டுகிறேன் வா!

 

6.

விண்ணடைந்த சுந்தரியால் வெந்துருகும் பாட்டரசன்

கண்ணுடைந்து பாய்ந்தோடும் கண்ணீரே! -  பெண்ணிணைந்து

வாழும் பெரியோனே! வாட்டும் துயர்களைவாய்

ஆழும் விதியை அறுத்து!

 

7.

நம்பி யிருந்து நலிவுற்றுப் பாட்டரசன்

வெம்பி யழுவதேன் வேங்கடவா? - தும்பிதன்

வாலடி நுான்முடிபோல் வாடுகிறேன்! மாலேயுன்

காலடி மேன்மையைக் காட்டு!

 

8.

கொண்ட பணியாள் குழிபறிக்கப் பாட்டரசன்

கண்ட துயரம் கணக்கில்லை! - கொண்டலே!

இன்றே அவர்போக்கி என்னை யரவணைத்துக்

குன்றா வலிமை கொடு!

 

9.

வல்ல நரிகளின் வஞ்சத்தால் பாட்டரசன்

சொல்ல முடியாத் துயருற்றேன்! - நல்ல

வழிகாட்டி வாழ்விப்பாய்! மாமலை வண்ணா!

விழிகாட்டிக் துன்பம் விரட்டு!

 

10.

ஆசைக் கடலுக்குள் ஆழ்பட்டுப் பாட்டரசன்

மோச மடையதுவோ? முன்வினையோ? - வாசனே!

பற்றற்று வாழ்கின்ற பாதை யளித்திடுவாய்!

அற்றற்றுப் போகும் அவை!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

12.02.2023

 

Aucun commentaire:

Enregistrer un commentaire