samedi 4 avril 2020

குரு பரம்பரை


திருமால் நெறி காத்த குருமரபினர்
  
காப்பு
  
மாலியல் வார்த்த மதியொளிர் மாமரபை
நுாலியல் ஓங்க நுவன்றிடுவாய்! - வேலியல்
மின்னும் வியன்றமிழே! என்னுள் இருந்தழகாய்ப்
பொன்னும் மணியும் பொழி!
  
1. பெரிய பெருமாள்
  
விண்ணுலகை மண்ணுலகை வித்திட்ட வைகுந்தன்!
பண்ணுலகைச் சூடும் பரந்தாமன்! - தண்ணுலகை
ஆளும் பெரிய பெருமான் அணியடியை
நாளும் மனமே நவில்!
  
2. பெரிய தாயார்
  
மாலவன் மார்பில் மணமிடுவாள்! காக்கின்ற
ஞாலவன் போன்று நலமிடுவாள்! - பாலவள்!
பிள்ளைதுயர் போக்கும் பெரிய பிராட்டியாள்!
கொல்லைமலர் இட்டுபுகழ் கூறு!
  
3. சேனைமுதலியார்
  
ஓங்குபுகழ் சேனையர்கோன் ஒள்ளடிகள் போற்றிடுவோம்!
தேங்குபுகழ் வாழ்வில் திளைத்திடுவோம்! - தாங்குபுகழ்
சீரரங்கைச் சேர்ந்திடுவோம்! சிந்தை செழித்திடுவோம்!
ஓரரங்கை உள்ளம் உணர்ந்து!
  
4. நம்மாழ்வார்
  
இருநிதியாய் வந்துதித்தார் இன்றமிழ் மாறர்!
குருநிதியாய்க் கோடிநலம் ஈந்தார்! - பெருநிதியாய்
வந்த..திரு வாய்மொழியார்! இந்த வுலகுய்ய
தந்த..திரு நல்கும் தகை!
  
5. நாதமுனிகள்
  
ஆழ்வார் தமிழமுதை அள்ளி நமக்கீந்தார்!
வாழ்வார் அடியார் மனத்துள்ளே! - சூழ்புகழ்
நாத முனியார் நறுமலர்த்தாள் பற்றிடுவோம்!
ஏத மினியே[து] இயம்பு?
  
6. உய்யக்கொண்டார்
  
குருமொழி யேற்றுக் குலவுதமிழ் காத்தார்!
திருமொழிச் சீர்பரவச் செய்தார்! - அருண்மொழி
கொண்டல்! உலகுய்யக் கொண்டார் திருவடியின்
தண்டம் தருமே தவம்!
  
7. மணக்கால்நம்பி
  
நாதமுனி கொண்டமனம் நாட்டியவர்! உய்யவரின்
பாதமணி என்றுளம் பற்றியவர்! - சீதமணி
நெஞ்சர்! நிறைமணக்கால் நம்பியார்! பொன்னடியில்
தஞ்சம் அடியேன் தலை!
  
8. ஆளவந்தார்
  
பால்மனம் கொண்டார்! படர்பேதம் வென்றுயர்ந்தார்!
மால்மனம் கொண்டார்! மகிழ்வீந்தார்! - நுால்மனம்
வார்த்தார்! நமைஆள வந்தார்! திருவருளைச்
சேர்த்தார் தமிழில் திளைத்து!
  
9. பெரியநம்பி
  
ஆளவந்தார் சீரை அகங்கொண்டார்! பேரரங்கன்
தாளணிந்தார்! மாமுனிக்குச் சால்பளந்தார்! - தோளணிந்தார்
நல்லருளை! எம்பெரிய நம்பியார்! நன்மனமே
சொல்..அருளை நாளும் சுவைத்து!
  
10. எம்பெருமானார்
  
மாயவன் சீரோங்க, மாயமத வேர்நீங்க,
துாயவன் தொண்டோங்க, துன்பொழிய, - தாயிணையாய்
எங்கள் இராமா நுசர்இங்[கு] உதித்தார்!நற்
திங்கள் திகழ்நலஞ் சேர்த்து!
  
11. எம்பார்
  
அண்ணல் இராமா நுசரின் அடிபணிந்தார்!
எண்ணம் முழுதும் இறையன்பு - கொண்டொளிர்ந்தார்!
எம்பார் திருப்புகழை ஏத்தித் தொழுதிடுவோம்!
நம்..மார் பெறுமே நலம்!
  
12. பட்டர்
  
நற்றிருக் கூர்ச்செல்வர்! நல்லரங்கச் சீர்மைந்தர்!
கற்றிடும் கூர்மதியா்! காத்திடும் - வற்புடையர்!
நற்பட்டா் நாமம் நவின்றிடுவோம்! நல்லுலகின்
பொற்பட்டம் ஏற்போம் பொலிந்து!
 
13. நஞ்சீயர்
  
பெருமாள் திருவடியே பீடருளும் என்றார்!
வரும்..நாள் வளமேற்கும் என்றார்! - அருளார்
திருவாய் மொழியுரை செப்பிய..நஞ் சீயர்!
தருவார் எனக்கும் தமிழ்!
  
14. நம்பிள்ளை
  
விண்ணுலகச் சீட்டளித்தார்! விந்தை யுரையளித்தார்!
மண்ணுலகப் பற்றறுத்தார்! மாலழகில் - கண்மலர்ந்தார்!
தண்ணார் கலிகன்றி தாசர்!நம் பிள்ளையார்
பொன்னார் திருவடி போற்று!
  
15. வடக்குத் திருவீதிப்பிள்ளை
  
குருவருள் பெற்றுக் குளங்கொண்டார்! மாயன்
திருவருள் பெற்றுத் திளைத்தார்! - அருளுரை
செய்தார் வடக்குத் திருவீதிப் பிள்ளையார்!
பெய்தார் மழையெனப் பீடு!
  
16. பிள்ளைலோகாசார்யர்
  
நன்னெறி நுால்களை நல்கியவர்! மாதவனின்
பொன்னடி சூடிப் பொலிந்தவர்! - இன்னருள்
பேரார் உளமுடையர்! பிள்ளைலோ காசார்யர்
சீரார் அடிகளைச் சேர்!
  
17. திருவாய்மொழிப்பிள்ளை
  
திருமலை யாழ்வாரே! சீர்மலை மேவும்
அருணிலை நல்கும் அமுதே! - அரிய
திருவாய் மொழிப்பிள்ளை யே!சிந்தை யோங்கத்
தருவாய் எனக்கும் தமிழ்!
    
18. மணவாள மாமுனிகள்
எந்தை எதிர்ராசன் ஏற்றம் பரவிடவும்,
சிந்தை செழித்திடவும், செந்தமிழில் - அந்தாதி
தந்த மணவாள மாமுனியே! தண்ணருளால்
இந்த உலகை இயக்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.04.2020

2 commentaires:

  1. வெண்பா வழியே தொகுத்தது
    அருமை ஐயா

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    RépondreSupprimer
  2. பாக்கள் அனைத்தும் அற்புதம்

    RépondreSupprimer