vendredi 3 avril 2020

நாற்சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 162
  
நாற்சொல் எழிலணி வெண்பா
  
நான்கு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது நாற்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொதுமை வடிப்பதெது? பூமிமேல் ஊன்றி
முதுமை நடப்பதெது? முத்தார் - பதுமையே!
நல்லாட்சி ஏற்பதெது? நன்றே அளப்பதெது?
பல்லாட்சிக் கோலாம் பகர்!
  
கோல் : எழுதுகோல், ஊன்றுகோல், செங்கோல், அளவுகோல்
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள நான்கு வினாக்களுக்குக் 'கோல்' என்ற ஒரு விடை வந்தது.
  
எழுதுகோல் பொதுமைக் கவிகளை வடிக்கிறது, முதுமையில் ஊன்றுகோல் கொண்டு நடப்பர், செங்கோல் நல்லாட்சி ஏற்கும், அளக்கும் கருவி அளவுகோல், ஒரு சொல் பல பொருள்தரும் பைந்தமிழின் அழகைச் சொல்வாய்.
  
முத்தார் பதுமை மகடூஉ முன்னிலை [சிலைபோன்று அழகுடையவள், முத்து மாலை அணிந்தவள்]
  
இவ்வாறு நாற்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire