samedi 11 avril 2020

ஆறுசொல் எழிலணி வெண்பா


ஆறுசொல் எழிலணி வெண்பா
  
ஆறு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது ஆறுசொல் எழிலணி வெண்பாவாகும்.
  
திருமால் அணியென்ன? தேரின் அடியென்ன?
பெருமால் பெயரென்ன? முந்நீர் - இருப்பென்ன?
சுற்றுவடி வென்ன? சுழன்றுவாழ் கோளென்ன?
பற்றுமடி சக்கரம் பார்!
  
சக்கரம் : திருமால் திருக்கை ஆழி, தேரின் உருளை, மலை, கடல், வட்டம், பூமி
  
பெருமால் : பெரியமலை
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள ஆறு வினாக்களுக்குக் 'சக்கரம்' என்ற ஒரு விடை வந்தது. திருமாலின் கைகளில் சங்கும் சக்கரமும் உள்ளன. தேர் சக்கரங்களைக் கொண்டுள்ளது. மலையின் வேறுபெயர் சக்கரம். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்தது கடல். சுற்றுகின்ற வடிவம் வட்டம். பூமியைச் சக்கரம் என்றும் உரைப்பர். பெண்ணே இந்த ஆறு பெயர்களைச் சக்கரம் என்ற ஒருபெயர் ஏற்பதைப் பார்.
  
இவ்வாறு ஆறுசொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.04.2020

1 commentaire:

  1. பற்றுமடிச் சக்கரத்தை பார்த்தோம்
    நன்றி அய்யா

    RépondreSupprimer