dimanche 1 mars 2020

நொண்டிச் சிந்து


திருமலைச் செல்வன்
[நொண்டிச் சிந்து]
  
1.
திருமலை அருள்பெற வே - செம்மை
செழித்திடும் நெறியினில் கொழித்திடு வாய்!
பெருமலை அழகனை யே - உள்ளம்
பிணைந்திட அறமெனும் அணையுறு வாய்!
  
2.
அமுதினை அருந்திட வே - திருமால்
அடிகளை மனமதில் பதித்திடு வாய்!
குமுதினை நிகர்த்தது வே - நல்லகம்
குளிர்ந்திட அணிந்திடு மிளிர்ந்திடு வாய்!
  
3.
பொழில்கமழ் கனிமலை யே - எங்கும்
புகழொலி பரவிடும் நிகரிலை யே!
எழில்கமழ் மனமுற வே - என்றும்
இசைத்திடு! வினையுறும் வசையறு மே!
  
4.
பொறிவண்டு சுழன்றிடு மே - மலரில்
பொழுதெலாம் சுவைமது ஒழுகிடு மே!
நெறிகொண்டு நெகிழ்ந்திடு மே - நெஞ்சம்
நிறைகொண்டு திருப்பதம் உறைந்திடு மே!
  
5.
குளிர்காற்றுத் தழுவிடு மே - வாழ்வின்
குணமோங்கக் குறைநீங்க மணமிடு மே!
ஒளிர்முத்துச் சரமிடு மே - உற்ற
உயிரோங்க உறவோங்கப் பயனிடு மே!
  
6.
பொன்னொளி மின்னிடு மே - கண்டு
புரைமனப் பிழையற மறையுறு மே!
இன்னொலி செவியுறு மே - வேயின்
இசையொலி காற்றுறும் திசையுறு மே!
  
7.
தேருலாக் காட்சியி லே - உள்ளம்
திளைத்திடு மே!இன்பம் விளைத்திடு மே!
சீருலா மாட்சியி லே - வாழ்வு
சிறந்திடு மே!செவ்வான் திறந்திடு மே!
  
8.
ஒருநொடிப் பார்வையி லே - மாயோன்
உருவெழில் உயர்வினை அருளிடு மே!
திருவடி உறவினி லே - உயிர்கள்
கருவடி நிலையற உருகிடு மே!
  
9.
சங்குடன் சக்கர மும் - கைகள்
தாங்கிடப் பழவினை நீங்கிடு மே!
இங்குயிர்த் துாய்மையி னால் - நன்மை
தேங்கிடத் திருவருள் ஓங்கிடு மே!
  
10.
நெடியவன் நினைவினி லே - ஒன்றி
நிலையுற நிம்மதி தலையுறு மே!
கொடியவர் பகையறு மே - தொண்டர்
குலமுறும் பெருவரம் குலவிடு மே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
01.03.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire