செல்லமடி நீயெனக்கு!
1.
பாடுதடி என்னெஞ்சம்! பாவையுன் நல்வரவால்
கூடுதடி இன்பம் கொழித்து!
2.
ஏங்குதடி உள்ளம்! இளமைக் கவிபாடித்
தாங்குதடி கன்னல் தமிழ்!
3.
கொஞ்சுதடி மாங்கிளிகள்! கோதையுன் பேரழகு
விஞ்சுதடி கண்முன் விரிந்து!
4.
மின்னுதடி எண்ணங்கள்! வெல்லும் விழியிரண்டும்
பின்னுதடி என்னைப் பிடித்து!
5.
நாடுதடி உன்னருளை! நாளும் உறவாடிச்
சூடுதடி காதல் சுவை!
6.
சேருதடி ஆசையலை! சித்திரமே! பொற்கனவு
ஊருதடி என்னுள் ஒளிர்ந்து!
7.
பருகுதடி பார்வை! உருகுதடி உள்ளம்!
பெருகுதடி காதலெனும் பித்து!
8.
மணக்குதடி மல்லி! மயக்குதடி மாலை!
கணக்குதடி மேனி கனத்து!
9.
பூக்குதடி பொற்சோலை! உன்னுடைய புன்னகை
ஆக்குதடி அன்பாம் அமுது!
10.
செல்லமடி நீயெனக்கு! செல்வமடி நீயெனக்கு!
பல்குமடி இன்பம் படர்ந்து!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
24.11.2017
24.11.2017

அருமை இரசித்தேன் கவிஞரே...
RépondreSupprimer