samedi 18 novembre 2017

பஞ்சபங்கி




ஒன்றில் ஐந்து
[பஞ்சபங்கி]

பஞ்சபங்கியென்பது, ஒரு பாடலை இலக்கண முறைப்படி 5 பாடல் வரும்படி அமைப்பதாம்.

ஒரு நேரிசையாசிரியப்பாவில் 1. கட்டளைக்கலித்துறை, 2. கலிவிருத்தம், 3. குறள் வெண்பா, 4. நேரிசை வெண்பா, 5. குறளடி வஞ்சிப்பா வரும்படி அமைந்திருப்பதைக் கண்டு களிப்பீர்.

என்னவள்!

நேரிசையாசிரியப்பா
கலைமணம் வீசும் கனிந்த தமிழைத்
தலைத ரித்தாள்! நிலைமனம் தாங்கி
அலைவளம் ஏந்தி நிறைய ளித்தாள்!
மலைவளம் கொண்ட மலருளம் கண்ட
மதிமு கத்தாள்! சிலையென வந்தாள்
நதிந லத்தாள்! இந்நாள்சீர் உறுமே!
கண்கள் இரண்டும் கவிகள் வழங்கும்
பெண்கள் பேசும் பெருமை முழங்கும்!
பண்கள் பிறந்து பசுமை படைக்கும்!
தண்..கள் மொழியாள்! தமிழின் இனியாள்!
மூக்கு வடிவெழில் மூளையை நன்றாகக்
தாக்கும் துயரினைத் தந்து, வண்ண
இதழ்கள் வழங்கும் இனிமையால் எண்ணம்
நதியாய் எழுந்தாடும்! நண்ணும் நலமே!
நடையோ நடனம் தருமே! வளமே
படைப்பாள் மகிழ்ந்து!  பாடு மனமே
இன்ப எழிலை! சூடு மனமே
அன்பின் அணியை! ஆடு மனமே
அமுத மனமே! காடு மணமே
கமழும் அழகை, கன்னல் அழகை,
கவிதை யழகை, கன்னி அழகை,
புவியோர் போற்றக் காதல் நல்கும்
என்பேன்! நாளும் இனிமை பல்கும்
என்பேன்! பசுமை யாவும் படர்ந்து
சுடரும் என்பேன்! சுவைச்சீர்
தொடரும் என்பேன் தோகை விரித்தே!

கட்டளைக் கலித்துறை

கலைமணம் வீசும் கனிந்த தமிழைத் தலைதரித்தாள்!
நிலைமனம் தாங்கி அலைவளம் ஏந்தி நிறையளித்தாள்!
மலைவளம் கொண்ட மலருளம் கண்ட மதிமுகத்தாள்!
சிலையென வந்தாள் நதிநலத் தாள்!இந்நாள் சீர்பெறுமே!

கலிவிருத்தம்

கண்கள் இரண்டும் கவிகள் வழங்கும்!
பெண்கள் பேசும் பெருமை முழங்கும்!
பண்கள் பிறந்து பசுமை படைக்கும்!
தண்..கள் மொழியாள்! தமிழின் இனியாள்!

குறள் வெண்பா

மூக்கு வடிவெழில் மூளையை நன்றாகக்
தாக்கும் துயரினைத் தந்து,

நேரிசை வெண்பா

வண்ண இதழ்கள் வழங்கும் இனிமையால்
எண்ணம் நதியாய் எழுந்தாடும்! - நண்ணும்
நலமே! நடையோ நடனம் தருமே!
வளமே படைப்பாள் மகிழ்ந்து!

வஞ்சிப்பா

பாடுமனமே இன்பவெழிலை!
சூடுமனமே அன்பினணியை!
ஆடுமனமே! அமுதமனமே!
காடுமணமே கமழுமழகைக்
கன்னலழகை, கவிதையழகை,
கன்னியழகை, புவியோர்போற்றக்
காதல்
நல்கும் என்பேன்! நாளும் இனிமை
பல்கும் என்பேன்! பசுமை யாவும்
படர்ந்து சுடரும் என்பேன்! சுவைச்சீர்
தொடரும் என்பேன் தோகை விரித்தே!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.11.2017


1 commentaire:

  1. ஆஹா... அற்புதம்.
    அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer