vendredi 31 mars 2017

விருத்த மேடை 5



விருத்த மேடை - 5

அறுசீர் விருத்தம்  - 5
[குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா]

இயற்கை இன்பம்!

காலை விடியலைக் கண்டு
   கவியலை ஓங்கிடும் என்னுள்!
சோலை மலர்களைக் கண்டு  
   சுரந்திடும் கற்பனை கோடி!   
மாலை மதியினைக் கண்டு
   மனமுறும் மாமது இன்பம்!
சேலை எழிலணிப் பெண்ணே!  
   செப்பிய செந்தமிழ் காப்பாய்!

இப்பாடல் "குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

மாச்சீரின் இறுதியில் குறில் எழுத்தைப் பெற்று வருவதும் [பேசு] , குறில் ஒற்றைப் பெற்று வருவதும் [பேசும்] குறிலீற்றுமா ஆகும்.

இப்பாடலில், விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வருவதுண்டு.
    
இலக்கணம் நுாற்பா
  
ஒன்று மூன்றுடன் ஆறு
மா,விளம் பிறவிடம் உறுமே!   
      - விருத்தப் பாவியல் [5]

இயற்கை எழிலை எண்ணி இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.03.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire