vendredi 31 mars 2017

வஞ்சித் துறை - 2




ஈசன் அடிபோற்றி!
அடிமறி வஞ்சி மண்டிலத் துறை [விளம் + காய்]
  
[ஒரு பாட்டின் நான்கடிகள், எவ்விடத்திலும் மாற்றிப் பாடும் வகையில் அமைவன அடிமறி வஞ்சி மண்டிலத் துறையாகும்]
  
ஆடிய அடிகண்டேன்!
சூடிய சுடர்கண்டேன்!
கூடிய உருக்கண்டேன்!
நாடிய நலங்கண்டேன்!
  
வெண்பனி மலைகொண்டான்!
பண்ணளி உளங்கொண்டான்!
தண்ணளி நதிகொண்டான்!
வண்ணொளி கரங்கொண்டான்!
  
தோடுடைச் செவி..பார்த்தேன்!
காடுடைப் புலி..பார்த்தேன்!
பீடுடை எழில்பார்த்தேன்!
ஏடுடைத் தமிழ்பார்த்தேன்!
  
அன்பெனும் அமுதுண்டேன்!
இன்பெனும் நெறியுண்டேன்!
துன்பெனும் வினைவென்றேன்!
பொன்னெனும் அருளுண்டேன்!
  
சடையொளிர் அருட்சிவமே!
கொடையொளிர் பெருமனமே!
விடையொளிர் வருமழகே!
நடையொளிர் தமிழ்ச்சுவையே!
  
நடுவிழி கதிரொக்கும்!
இடுநலம் அமுதொக்கும்!
உடுவொளி உலகொக்கும்!
அடுமருள் அலையொக்கும்!
  
தாயுறை தகைமேனி!
வாயுறை திருநாமம்!
சேயுறை செழுநெஞ்சம்
நோயுறை துயர்தீர்க்கும்!
  
பொற்புறு திருநீறு!
பற்றறு திருநீறு!
கிற்றறு திருநீறு!
வற்புறு திருநீறு!
  
பொன்னுருப் புகுநெறிகள்
அன்புரு அடைவழிகள்!
இன்புறும் இறைமொழிகள்!
பன்னிரு திருமுறைகள்!
  
ஈசனின் எழில்போற்றி!
ஓசனின் உளம்போற்றி!
பாசனின் பணிபோற்றி!
தாசனென் தமிழ்போற்றி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.03.2017

1 commentaire: