samedi 19 mars 2016

பெண்ணே பெருஞ்சக்தி




பெண்ணே பெருஞ்சக்தி  
(வெண்பாக் கொத்து)

குறள் வெண்பா

பெண்ணே இனிமை! பெருந்தவப் பேராற்றல்!
கண்ணே கமழும் கனிந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணே வளமென்று பேணிச் சிறப்பித்தால்
மண்ணே மணக்கும்! மனத்துக்குள் எந்நாளும்
தண்ணே தழைக்கும் கனிந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணே பெருமையெனப் பேசும் திருநாட்டை
விண்ணே வணங்கி விழாநடத்தும்! - ஒண்ணொளி
பண்ணே படைக்கும் கனிந்து!

இன்னிசை வெண்பா

பெண்ணே கலையின்பம்! பின்னும் கவியின்பம்!
புண்ணே அகற்றும் பொழிலின்பம்! பொங்குதமிழ்
கூட்டும் சுவையின்பம்! கோலக் குளிரின்பம்!
காட்டும் விழியே கனிந்து!

நேரிசை வெண்பா

பெண்ணே சிறப்பென்றும்! பேழை அணியென்றும்!
எண்ணே இலாத இனிப்பென்றும்! - கொண்டல்
வளமே கமழும் வரமென்றும் கொண்டால் 
களமே கமழும் கனிந்து!

இன்னிசைப் பஃறொடை வெண்பா

பெண்ணே நலத்தைப் பெருக்கும் பெருஞ்சக்தி!
கண்டாய் இனிக்கும் கவிகள் தருஞ்சக்தி!
மாண்பை அளித்து மகிழ்வூட்டும் அருஞ்சக்தி
ஆண்மை சிறக்க அமுதூட்டும் நற்சக்தி!
எல்லா எனஇங்[கு] இருக்கும் எழிற்சக்தி!
பொல்லாத் துயரைப் பொசுக்கும் உயர்சக்தி!
மண்ணுறும் சக்தி! மாகடல் சக்தி!அவ்
விண்ணுறும் சக்தி! வியன்தென்றல் சக்தி!பொற்
கற்புறும் சக்தி கனலுறும் சக்தியவள்!
கற்பாய் மனமே கனிந்து!
 
நேரிசைப் பஃறொடை வெண்பா

பெண்ணே இனிமையின் பேறெனப் பாடிடுக!
வண்டே வலம்வரும் கண்ணென்க! - வண்ணமிகு
பட்டான் பறப்பதுபோல் நெஞ்சம் களித்திடுக!
கொட்டும் மழையில் குளிர்ந்திடுக! - கட்டுக்
கரும்பின் சுவையென்க! காதல்அமு(து) என்க!
உருகும் பனியென்க! உண்மை - தருகின்ற
ஓங்குபுகழ் என்றே உவந்திடுக! என்றென்றும்
தேங்குநலம் என்றே தெளிந்திடுக! மன்பதையில்
மங்கை பிறப்புறும் மாட்சி அறிந்திடுக!
கங்குகரை இன்றிக் கனிந்து!


இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா,  இன்னிசைப் பஃறொடை வெண்பா, நேரிசைப் பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணே' என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'கனிந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன. 

18.03.2016

5 commentaires:

  1. இலக்கணத்தை நன்கு அறிந்துகொள்ளவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது உங்களது பதிவுகள். நன்றி.

    RépondreSupprimer
  2. வெண்பா எழுதத் தெரியும் , ஆனால் இந்த நுணுக்கங்கள் எல்லாம் தெரியாது.
    நீங்கள் கடல். நான் இன்னும் சிப்பிகளையே பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். நன்றி அய்யா

    RépondreSupprimer
  3. அருமை அய்யா.
    நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது தங்களிடம்

    RépondreSupprimer