vendredi 7 août 2015

கவியேறு காவடிச் சிந்து




கவியேறு வாணிதாசன் காவடிச் சிந்து

1.
வாணி தாசர்புகழ்         பாடு - துள்ளி
                         யாடு - மகிழ்
                         வோடு - அவர்
வார்த்த தமிழ்க்கிலை     ஈடு - நாம்
வளமேபெறும் திறமேபெற நலமேபெறும் மறமேபெற
வாழ்வெல்லாம் தொண்டினைச் கொண்டார் - நம்
தாழ்வெல்லாம் போக்கிடக் கண்டார்!

கேணி தரும்சுவை        நீராய் - பழத்
                         தாராய் - கவி
                         யேறாய் - தமிழ்க்
காணி விளைத்தார்நற்     சீராய் - மண்
கேடேஅறும்! பீடேவரும்! நாடேபுகழ் பேறேவரும்!
ஞானியாய்ச் சிந்தனை நெய்தார் - பூந்
தேனியாய்ப் பாட்டடை செய்தார்!

2.
வள்ளுவர் வாய்மறை     யேற்று - பணி
                         யாற்று - அதைப்
                         போற்று - உடன்
வாடி ஓடும்வினைக்       கூற்று - என்றும்
வண்ணம்பல தந்தகவி! எண்ணம்தனில் நின்றகவி
மண்வாழ வண்டமிழ் வார்த்தார் - தமிழ்ப்
பண்வாழ ஒண்டமிழ் சேர்த்தார்

தௌ்ளிய நன்னடை       உண்டு - சுவை
                         கொண்டு - தினம்
                         கண்டு - மனம்
தேனுண்டு ஆடிடும்       வண்டு - பூந்
தென்றல்தரும் மென்மைச்சுகம் அன்னைத்தமிழ் அன்பைத்தரும்
தென்மொழி செல்வராய் வாழ்ந்தார் - நாளும்
பன்மொழி நூல்களை ஆய்ந்தார்!

3.
கொஞ்சும் இயற்கையைத் தீட்டித் - தேன்
                         கூட்டி - இசை
                         மீட்டி - புகழ்
கொண்டார் கொள்கைக்கொடி நாட்டி - இங்குக்
கோலத்தமிழ் காதற்றமிழ் ஞானத்தமிழ் மானத்தமிழ்
கொட்டியே நன்முர(சு) இட்டார் - பகை
வெட்டியே தீயிட்டுச் சுட்டார்!

விஞ்சும் எழில்நலம்       பூட்டி - உணர்
                         வூட்டி - துயர்
                         ஓட்டி - நமை
வெல்லச் செய்யும்வழி    காட்டி - துள்ளி 
வெற்றிநடை கொட்டும்படை! கற்றதமிழ் பற்றும்புகழ்
வீரத்தை நாள்தோறும் மொழிந்தார் - கலை
ஈரத்தை நாள்தோறும் பொழிந்தார்!

4.
பாவேந்தர் நண்பராய்      நின்று - பகை
                         வென்று - புகழ்
                         குன்று - வாழும்
பார்அவர் பாக்களைத்     தின்று - தமிழ்ப்
பற்றேமிகும் சத்தேபெறும்! முத்தேயொளிர் சித்தேபெறும்!
பண்பொளி வீசியே வாழ்ந்தார் - நாளும்
பண்ணொளிர் இன்பத்தில் ஆழ்ந்தார்!

நாவேந்தர் போற்றிடும்    உள்ளம் - தமிழ்
                         இல்லம் - கவி
                         வெள்ளம் - அவர்
நாவினில் சந்தங்கள்      துள்ளும் - நான்
நற்றேன்என உற்றேன்தமிழ்! பொற்கோவென நட்டேன்தமிழ்!
நற்றிறம் பெற்றிட வைத்தார் - என்னுள்
சொற்றிறம் மின்னிடத் தைத்தார்!

5.
பாடித் தொடுத்திட்ட       நூல்கள் - மொழியின்
                         கால்கள் - அறிவின்
                         வேர்கள் - அவை
பாவலர் கையேந்தும்      வேல்கள் - கொண்ட
பகையேஅறப் பயனேஉறப் புவியேநமைப் பணிந்தேதொழப்
பாங்குற நற்பணி புரிந்தார் - வண்ணப்
பூங்கொடி போல்மணம் செரிந்தார்!

நாடி நரம்புகள்            புடைக்க - இருள்
                         துடைக்க - நலம்
                         கிடைக்க - பாரில்
நம்மினத் தொன்மையைப்  படைக்க - இந்
நாட்டில்உள காட்டின்நரி ஓட்டும்படி மூட்டும்பறை
நாளெல்லாம் பாட்டுக் குழைத்தார் - தீட்டும்
தாளெல்லாம் செந்தேன் குழைத்தார்!

26.07.2015

20 commentaires:

  1. கவிதை மழையாக ரசித்தேன்
    கவிஞரின் பாட்டினை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிதை மழையில் களித்தீர்! வணக்கம்
      குவித்தேன் இனிமை குழைத்து!

      Supprimer

    2. வணக்கம்!

      கவிதை மழையில் களித்தீர்! வணக்கம்
      குவித்தேன் இனிமை குழைத்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழ்காத்த அன்புடை நெஞ்சர்
      பெருமைக் கடல்போல் பெரிது!

      Supprimer
  3. காவடிச்சிந்தினை ரசித்தேன். நடை நிலையில் முதன்முறை புரிந்துகொள்வது என்பது சற்றுச் சிரமமாகவே இருந்தது. இரண்டாவது முறை படித்தபோது நன்றாகத் தெரிந்தது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காவடிச் சிந்து கன்னல் கமழ்கின்ற
      பூவடி என்பேன் புரிந்து!

      Supprimer
  4. அருமை அய்யா....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருமைத் தமிழ்படைத்த பீடுடை நெஞ்சர்
      அருமை உணர்தல் அறிவு!

      Supprimer
  5. வாழ்த்துப்பா மாலையைக் கண்டு-பூச்
    செண்டு-தனைக்
    கொண்டு-நானும்
    வந்தேன் மகிழ்வினை உண்டு - சோலை
    மலர்சூடும் மணமோடும் மதுவோடும் தமிழுாளும்
    மாமன்னன் என்றுன்னைப் பாடும் - மனம்
    பாமன்னன் என்றுன்னை ஆடும்!

    தஞ்சம் இனித்தமிழ் என்று -மனம்
    சென்று-புவி
    வென்று - கவிச்
    சங்கம் அமைத்ததும் நன்று - நாளும்
    தமிழ்பாடி நலம்சூடி விளையாடி வருங்கோடி
    எண்ணங்கள் தந்திடும் செம்மை - உன்
    வண்ணங்கள் காத்திடும் எம்மை!

    நன்றிங்க ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிந்துக் கவிபாடிச் சிந்தை பறிக்கின்றறாய்
      விந்தை நடனம் விளைத்து!

      Supprimer
  6. வணக்கம் ஐயா!

    காவடி சிந்தொன்று பாடி - மலர்
                  சூடி - தினம்
                  ஆடி - வலைக்
    காட்டிலே நற்கவி கோடி - தந்த
    கவிஞன்நீ கலைஞன்நீ வலைஞன்நீ மகிழ்வேதரும்
    நற்பணிக் கேதிங்கு எல்லை - உன்
    சொற்சுவைக் கேஈடும் இல்லை!

    பாவடி யைப்பாடிக் காட்டும் - உணர்
                   வூட்டும் - உரம்
                   கூட்டும் - நல்ல
    பாவலர் சேர்ந்திட மீட்டும் - நற்
    சுவையேதினம் இனிதாய்த்தரும் உனைப்போலொரு கவிஞன்இலை!
    பார்கொள்ளு மேமிக்க பெருமை! - உடன்
    சேர்ந்திடு மேஉன்றன் அருமை!

    இங்கும் அருமையானதொரு காவடிச் சிந்து தந்தீர்கள்!
    நாமும் எழுதிப் பழகுகின்றோம்.

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாவணி கட்டிய கன்னி அழகாகக்
      காவடிச் சிந்துவைக் காண்!

      Supprimer
  7. Réponses

    1. வணக்கம்!

      ஒருமை மனத்துடன் ஓதிக் களித்தால்
      பெருமை பெருகும் பிறந்து!

      Supprimer
  8. வணக்கம் கவிஞர் அண்ணா !

    அன்பினைக் கொட்டிடும் பாடல் - இதம்
    ................................................காட்டும் - பகை
    .................................................ஓட்டும் - பெற்ற
    அன்னையைப் போலுயிர் ஊட்டும் -தமிழ்
    அறிவேதரும் அரணாய்விடும் அழகோவியம் இதுவோஎன
    அந்தியின் வானமாய் அழகு - நாளும்
    சிந்தையில் ஏற்றியே பழகு !

    என்னிலும் சிந்தனை கூடும் - உயிர்
    ........................................உள்ளும் - கவி
    .........................................துள்ளும் - சிந்தை
    என்மனத் தூறலை அள்ளும் - தமிழ்
    எடுத்தாயிரம் சுதிபாடுவேன் எழில்தேடிடும் விழிபோலவே
    எங்குநான் சென்றாலும் காப்பேன் - மண்ணில்
    தங்கிடும் நாள்வரை பூப்பேன் !

    வணக்கம் கவிஞர் அண்ணா அருமையான காவடிச் சிந்து நானும் முயற்சித்துப் பார்த்தேன் நன்றி கிடைத்த நேரத்தில் கிறுக்கினேன் !

    வாழ்க வளமுடன்
    தம கூடுதல் ஒரு வாக்கு

    RépondreSupprimer
  9. வணக்கம் கவிஞர் அண்ணா !

    அன்பினைக் கொட்டியே காட்டும் - இதம்
    ................................................கூட்டும் - பகை
    .................................................ஓட்டும் - பெற்ற
    அன்னையைப் போலுயிர் ஊட்டும் -தமிழ்
    அறிவேதரும் அரணாய்விடும் அழகோவியம் இதுவோஎன
    அந்தியின் வானமாய் அழகு - நாளும்
    சிந்தையில் ஏற்றியே பழகு !

    என்னிலும் சிந்தனை துள்ளும் - உயிர்
    ........................................உள்ளும் - கவி
    .........................................கொள்ளும் - சிந்தை
    என்மனத் தூறலை அள்ளும் - தமிழ்
    எடுத்தாயிரம் சுதிபாடுவேன் எழில்தேடிடும் விழிபோலவே
    எங்குநான் சென்றாலும் காப்பேன் - மண்ணில்
    தங்கிடும் நாள்வரை பூப்பேன் !

    வணக்கம் கவிஞர் அண்ணா அருமையான காவடிச் சிந்து நானும் முயற்சித்துப் பார்த்தேன் நன்றி கிடைத்த நேரத்தில் கிறுக்கினேன் !

    வாழ்க வளமுடன்
    தம கூடுதல் ஒரு வாக்கு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முடுகியல் சீரழகை முற்றும் உணர்ந்தால்
      மடுவென ஊறும் மகிழ்வு!

      Supprimer

  10. புதுவைப் புகழேந்தும்! பூந்தமிழ் ஏந்தும்!
    பொதுமை நலமேந்தும்! பொங்கும் - மதுவேந்தும்!
    காவடிச் சிந்துவைக் கண்டு களிக்கின்றேன்
    காவிரிச் சோலை கமழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிப்பேந்தும் வண்ணம்! இசையேந்தும் வண்ணம்!
      கனியேந்தும் வண்ணம் கமழும்! - சுவையாழ்
      கவியேறு சிந்துள் கமழ்கின்ற சந்தம்
      செவியேறி வாழும் செழித்து!

      Supprimer