samedi 1 août 2015

மும்மண்டில வெண்பா!



இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

ஏன் வெறுப்பு?

1.
வண்டுக்கண் தேன்கொடுத்து வண்ணமலர்க் கான்மணக்கும்!
கண்டுச்சொல் ஊன்புடைக்கும்! எண்ணமிகும்! - ஒண்மதியே!
நான்தொடுக்கும் வண்ணங்கள் வான்கொடுக்கும் மின்னன்றோ?
ஏன்வெறுக்கும் பெண்ணழகு மான்?

2.
தேன்கொடுத்து வண்ணமலர்க் கான்மணக்கும் கண்டுச்சொல்!
ஊன்புடைக்கும்! எண்ணமிகும்! ஒண்மதியே! - நான்தொடுக்கும்
வண்ணங்கள் வான்கொடுக்கும் மின்னன்றோ? ஏன்வெறுக்கும்
பெண்ணழகு மான்வண்டுக் கண்?

3.
வண்ணமலர்க் கான்மணக்கும் கண்டுச்சொல்! ஊன்புடைக்கும்
எண்ணமிகும்! ஒண்மதியே! நான்தொடுக்கும் - வண்ணங்கள்
வான்கொடுக்கும் மின்னன்றோ? ஏன்வெறுக்கும் பெண்ணழகு
மான்வண்டுக் கண்?தேன் கொடுத்து?

---------------------------------------------------------------------------------------------

கண்மணியே!

1.
கண்மணியே! கண்ணமுதே! பண்மழையே! மண்மணமே!
வெண்மதியே! வண்கொடியே! தண்மலரே! - பெண்மணியே!
பொன்னொளியே! இன்றமிழே! என்றென்றும் பொங்குதடி
உன்னழ கால்என் உயிர்!

2.
கண்ணமுதே! பண்மழையே! மண்மணமே! வெண்மதியே!
வண்கொடியே! தண்மலரே! பெண்மணியே! - பொன்னொளியே!
இன்றமிழே! என்றென்றும் பொங்குதடி உன்னழகால்
என்உயிர்! கண்மணி யே!

3.
பண்மழையே! மண்மணமே! வெண்மதியே! வண்கொடியே!
தண்மலரே! பெண்மணியே! பொன்னொளியே! - இன்றமிழே!
என்றென்றும் பொங்குதடி உன்னழகால் என்உயிர்!
கண்மணியே! கண்ணமு தே!

---------------------------------------------------------------------------------------------

நற்றேன் கலைசூடு!

1.
கவிபாடு! நற்றேன் கலைசூடு! நாளும்
சுவைகோடி பெற்றேன்! அலையாக ஆசை
பெருகிமனம் வாடும்! திரண்டோங்கி மண்ணில்
உருகிமனம் ஓடும் உருண்டு!

2.
நற்றேன் கலைசூடு! நாளும் சுவைகோடி
பெற்றேன்! அலையாக ஆசை பெருகிமனம்
வாடும்! திரண்டோங்கி மண்ணில் உருகிமனம்
ஓடும்! உருண்டுகவி பாடு!

3.
கலைசூடு! நாளும் சுவைகோடி பெற்றேன்!
அலையாக ஆசை பெருகிமனம் வாடும்!
திரண்டோங்கி மண்ணில் உருகிமனம் ஓடும்!
உருண்டுகவி பாடு!நற் றேன்!

கவிஞர் கி. பாரதிதாசன்
01.07.2015

28 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    பிரமித்து நிற்கின்றேன்!

    அத்தனை சிறப்பு! முயன்று பார்க்க வேண்டும்.
    அவகாசம் தாருங்கள்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. மீண்டும் வணக்கமுடன் வந்தேன் ஐயா!

      இன்னிசை வெண்பா!

      அம்மம்மா! பொன்னம்மா! அன்புமொழி! ஆசைமொழி!
      கம்பன்..பா சொன்னமொழி! கன்னல்மொழி! செம்மையொளி
      கொண்டமொழி! கோலமொழி! ஆழ்ந்து பணிந்தேன்!தா
      வண்ணமுடன் ஞாலமொளி வாழ்வு!

      பொன்னம்மா! அன்புமொழி! ஆசைமொழி! கம்பன்பா
      சொன்னமொழி! கன்னல்மொழி! செம்மையொளி கொண்டமொழி!
      கோலமொழி! ஆழ்ந்து பணிந்தேன்!தா வண்ணமுடன்
      ஞால மொளிவாழ்வம் மா!

      அன்புமொழி! ஆசைமொழி! கம்பன்பா சொன்னமொழி!
      கன்னல்மொழி! செம்மையொளி கொண்டமொழி! கோலமொழி!
      ஆழ்ந்து பணிந்தேன்!தா வண்ணமுடன் ஞாலமொளி
      வாழ்வம் மா!பொன்னம் மா!

      சரியாக அமைந்தனவா என்று கூறுங்கள் ஐயா!
      மிக்க நன்றி!

      Supprimer

    2. வணக்கம்!

      முத்தமிழ் மின்னிட மும்மண் டிலம்தந்தாய்!
      சித்தம் குளிர்ந்தேன்! செழிப்புற்றேன்! - நித்தம்
      தமிழ்ஊறும் வண்ணம் தழைத்தோங்கி வாழ்க!
      அமுதுாறும் ஆக்கம் அளித்து!

      Supprimer
  2. ''''''''மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!''''''''''''''''''

    1)

    சொட்டுந்தேன் கொட்டும்வான் முட்டும்சீர் தொட்டுமின்
    மெட்டும்பூ மொட்டுப்பா கட்டிச்சேர் – பட்டுப்போல்
    கொஞ்சுதமிழ் மிஞ்சியெழ விஞ்சுசுவை எஞ்சுசொலிற்
    பஞ்சமே நெஞ்சேநீ அஞ்சு

    2)

    ( அடிதோறும் இரண்டாம் சீரை முதலாக வைத்தது. )

    கொட்டும்வான் சொட்டுந்தேன் முட்டும்சீர் தொட்டும்மின்
    மொட்டுப்பா மெட்டும்பூ கட்டிச்சேர் – பட்டுப்போல்
    மிஞ்சியெழ கொஞ்சுதமிழ் விஞ்சுசுவை எஞ்சுசொலில்
    நெஞ்சேநீ பஞ்சமே அஞ்சு.

    3)

    ( அடிதோறும் மூன்றாம் சீரை முதலாக வைத்தது )

    முட்டும்சீர் சொட்டுந்தேன் கொட்டும்வான் தொட்டுமின்
    கட்டிச்சேர் மெட்டும்பூ மொட்டுப்பா – பட்டுப்போல்
    விஞ்சுசுவை கொஞ்சுதமிழ் மிஞ்சியெழ எஞ்சுசொலில்
    அஞ்சேநீ பஞ்சமே நெஞ்சு.

    சரிதானா ஐயா?

    த ம கூடுதல் 1



    நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. ஐயா வணக்கம் !

      நான் மும்மண்டலத்தின் இலக்கணத்தை இன்னும் விளக்கமாக எழுதி இருக்க வேண்டும்.

      மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் முதல் அடியில் உள்ள இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்.

      முதல் வெண்பாவில் உள்ள முதல் சீர் இரண்டாவது வெண்பாவில் இறுதிச் சீராக வரும். முதல் வெண்பாவில் முதல் அடியில் உள்ள இரண்டாம் சீர் இரண்டாம் வெண்பாவில் முதல் சீராக வரவேண்டும். இப்போது முதல் முதல் அடியில் மூன்றுசீர்கள் இருக்கும். இரண்டாம் அடியில் உள்ள முதல் சீர் முதல் அடியின் நான்காம் சீராக அமையும் இப்படி சீர்கள் மேல் நோக்கி நகரும்.

      இவ்வாறே மூன்றாம் வெண்பாவும் அமைய வேண்டும்.

      Supprimer
    2. மீண்டும் வணக்கம்!

      நீங்கள் எழுதி இருப்பது புதிய வகை. இப்படியும் ஒரு வகையை நாம் உருவாக்கலாம். மும்மண்டிலத்தைத் தொடர்ந்து நான்கு வருமா என எழுதிப் பார்த்தேன். பதினான்கு வெண்டாப்பாக்கள் வந்தன.

      வெண்பாவில் 15 சீர். ஏன் 15 வெண்பா வரவில்லை. மீண்டும் முயற்சி செய்தேன். 15 வெண்பாக்கள் வந்தன.

      இப்பதிவைத் தொடர்ந்து 14 மண்டிலம் - 15 மண்டிலம் வெண்பாக்களை பதிவிடுவேன்.

      Supprimer

    3. வணக்கம்!

      கொட்டும் மழைபோன்று கொஞ்சும் கவிதைகளைக்
      கட்டும் கவிஞர்! கலைவாணர்! - மொட்டலர்ந்து
      வீசும் மணமாக வெண்பா விளைக்கின்றார்!
      பேசும் புகழே பிணைந்து!

      Supprimer
    4. ஐயா வணக்கம்.

      என் புரிதல்தான் தவறாய் இருந்தது.

      அதனால் என்ன.......?

      இதோ,

      இது சரியா எனப் பாருங்கள்.!

      ““““““““““““““““““““கொற்றவனின் சொற்களே விற்களாய்…!““““““““““““““““““““““““““““““

      சொற்களே விற்களாய்! நற்றமிழ் வேழமும்
      கற்பனைப் புற்களில் உற்றுயிர் – பெற்றிடப்
      பற்றிடும் பொற்றிறம் கற்றிடும் அற்புதம்
      உற்றிடும் கொற்றவ னில்!

      விற்களாய் நற்றமிழ் வேழமும் கற்பனைப்
      புற்களில் உற்றுயிர் பெற்றிடப் - பற்றிடும்
      பொற்றிறம் கற்றிடும் அற்புதம் உற்றிடும்
      கொற்றவ னிற்சொற் களே!

      நற்றமிழ் வேழமும் கற்பனைப் புற்களில்
      உற்றுயிர் பெற்றிடப் பற்றிடும் – பொற்றிறம்
      கற்றிடும் அற்புதம் உற்றிடும் கொற்றவ
      னிற்சொற் களேவிற்க ளாய்!



      Supprimer
    5. ஐயா மீண்டும் வணக்கம்.

      என் ஆசிரியர் ஒரு பிழை செய்தேனென்றால் குறைந்த பட்சம் மூன்று முறையாவது எழுதிப் பார்க்கச் சொல்வார்.

      இது இரண்டாம் முறை.

      ““““““““““““““““பிழைகல்லாதேன் கற்றது இல்“““““““““““““““““““““““

      கல்லாதேன்! கற்றதில் நில்லாதேன்! கற்றவருஞ்
      சொல்லுந்தே னுற்றுணர வல்லாதேன்! – பொல்லாதேன்!
      வெற்றுடலேன்! இல்லா மழையாகிப் போகின்றேன்!
      புற்றெனவாம் பொல்லாப் பிழை!


      கற்றதில் நில்லாதேன்? கற்றவருஞ் சொல்லுந்தேன்
      உற்றுணர வல்லாதேன்? பொல்லாதேன்! – வெற்றுடலேன்?
      இல்லா மழையாகிப் போகின்றேன்! புற்றெனவாம்
      பொல்லாப் பிழைகல்லா தேன்?

      நில்லாதேன்! கற்றவருஞ் சொல்லுந்தேன் உற்றுணர
      வல்லாதேன்! பொல்லாதேன்! வெற்றுடலேன்! – இல்லா
      மழையாகிப் போகின்றேன்! புற்றனெவாம் பொல்லாப்
      பிழைகல்லா தேன்கற்ற தில்!

      நன்றி.

      Supprimer
    6. ஐயா மீண்டும் வணக்கம்.

      மூன்றாம் முயற்சி .

      “““““““““““““““““““““““““““கவிக்கு நீயே அருளின் ஐ ““““““““““““““““““““““““““““““““

      நீயே அருளினை! நீயே அகவொளி!
      நீயே இருள்கெடுப் பாயேயால் – தாயே
      பொருளற்ற மாயப் புவிசிக்கி யோனும்
      மருள்நீக்க ஆய்‘வா கவிக்கு!

      அருளினை நீயே! அகவொளி நீயே!
      இருள்கெடுப் பாயேயால் தாயே! – பொருளற்ற
      மாயப் புவிசிக்கி யோனும் மருள்நீக்க
      ஆய்‘வா கவிக்குநீ யே!

      நீயே அகவொளி! நீயே இருள்கெடுப்
      பாயேயால் தாயே! பொருளற்ற – மாயப்
      புவிசிக்கி யோனும் மருள்நீக்க ஆய்‘வா
      கவிக்குநீ யேயருளின் ஐ“

      நன்றி.

      Supprimer

    7. வணக்கம்!

      மும்மண்டிலத்தில் மூன்று வெண்பாக்கள் படைத்து என்னை மகிழ்ச்சியுறச் செய்தீர். நனிநன்றி!

      வியப்புற்று நிற்கின்றேன்! விந்தைமிகு வெண்பா!
      உயிர்ப்பற்றுத் தண்டமிழில் உற்றீர்! - உயர்வுற்று
      வாழும் வளர்கவிகள் வார்த்த..கவி. சோசப்பர்
      சூழும் புலமைச் சுடர்!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      வருகை புாிந்தீர்! வணங்கி மகிழ்ந்தேன்
      இரு..கை மலரை இணைத்து!

      Supprimer
  4. வணக்கம் ஐயா !

    அருமையான வெண்பா ! பகிர்வுக்கு மிக்க நன்றி விரைவில் இந்த வெண்பாவை நானும் எழுத முயற்சிகின்றேன் .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எழுதிப் பழகும்! இனியதமிழ்த் தாயைத்
      தொழுது பழகும் தொடர்ந்து!

      Supprimer
  5. அனைத்தும் சிறப்பு ஐயா... வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய மனத்தினர்! எம்தன பாலன்
      கனிபோல் தருவார் கருத்து!

      Supprimer
  6. வெண்பாவின் அமைப்பு குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் நன்கு ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முனைவர் வருகைக்கு முந்நுாறு நன்றி!
      இனியர் இவரென ஏத்து!

      Supprimer
  7. மும்மண்டில வெண்பா கண்டு மூர்ச்சையாகி நிற்கிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தென்றல் சசிகலாத் தேன்றமிழ்ப் பாவலர்!
      என்றும் இவரிணை ஏது?

      Supprimer
  8. வணக்கம் ஐயா ! நலம் தானே! பதிவுகள் இப்போது காணக் கிடைப்பது இல்லையே. அது தான் கேட்டேன்
    என்ன சொல்வேன் இளமதியே பிரமித்து நிற்கிறார் என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம். சொக்கித் தான் போனேன் சுந்தரக் கவி கண்டு! அருமை அருமை! வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனியா எழுதும் எழிற்றமிழ் போன்றே
      இனியார் தருவார் எனக்கு!

      Supprimer

  9. முத்தென மும்மண் டிலம்மொழிந்தீர்! பூத்தாடும்
    கொத்தென நாற்றம் கொடுத்துவந்தீர்! - சத்தெனப்
    பாடும் புலவர் பசிதீர உண்ணுவார்!
    கூடும் புலமை கொழித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலமை கொழிக்கும் புகழ்த்தமிழ் பாடி
      வளமை அளிக்கும் வடிவே! - உளமொளிரத்
      தீட்டுகின்ற உன்றன் செழுங்கவிகள் இன்பத்தைச்
      சூட்டுகின்ற நற்றேன் சுரப்பு!

      Supprimer
  10. வணக்கம் ஐயா!
    இன்முகம் பூக்கும்..பூ! வட்டநிலா வந்துவிடும்!
    கண்டவுடன் கூத்தாடிக் கட்டவிழும் - கொண்டாடும்
    சூத்திரங்கள் கற்றறிந்து தொட்டழைக்கும் காரிகையைக்
    காத்திருந்து பொற்புடன் கட்டு.

    பூக்கும்..பூ வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்
    கூத்தாடிக் கட்டவிழும் கொண்டாடும் -சூத்திரங்கள்
    கற்றறிந்து தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து
    பொற்புடன் கட்டின் முகம்!

    வட்டநிலா வந்துவிடும்! கண்டவுடன்கூத்தாடிக்
    கட்டவிழும்! கொண்டாடும்! சூத்திரங்கள் - கற்றறிந்து
    தொட்டழைக்கும் காரிகையைக் காத்திருந்து பொற்புடன்
    கட்டின் முகம்!பூக்கும் பூ!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொன்ன இலக்கணத்தில் சூட்டிய பாக்காண்டேன்!
      உன்னுள் ஒளிரும் தமிழ்கண்டேன்! - தென்றலே!
      இன்னும் எழுதிப் பழகுகவே! நிற்கின்றேன்
      மன்னும் மகிழ்வில் மலைத்து!

      Supprimer
  11. ஐயா! மலைத்து நிற்கிறேன். பாராட்ட சொற்களைத்தேடுகிறேன். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer