dimanche 16 février 2014

முப்பதாம் ஆண்டு வாழ்த்து





திருவாளர்
வேணுகோபால் ஆதிலட்சுமி இணையரின்
முப்பதாம் ஆண்டுத் திருமண வாழ்த்து

எங்கள் வேணு கோபாலும்
     எழிலார் ஆதி லட்சுமியும்
பொங்கல் சுவைசேர் வண்ணத்தில்
     போற்றும் வாழ்வைப் புனைந்தனரே!
திங்கள் நல்கும் தண்ணொளியாய்,
     தென்றல் நல்கும் மென்மணமாய்,
தங்கும் இன்பம் தழைக்கின்ற
     தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

நெடிய வேணு கோபாலும்
     நிலவாம் ஆதி லட்சுமியும்
விடியத் தோன்றும் பொன்னொளியாய்
     விளைத்த முப்ப(து) ஆண்டுயர்க!
படியச் செய்து மனத்துள்ளே
     படரச் செய்த சீர்தொடர்க!
அடியேன் படைத்த கவியழகாய்
     அமைந்து வாழ்க பல்லாண்டே!

நம்பி வேணு கோபாலும்
     நங்கை ஆதி லட்சுமியும்
தும்பிக் கையான் தாள்பற்றித்
     தூய வாழ்வைச் சமைத்தனரே!
நம்பி வந்த நபர்காத்து,
     நல்லோர் நவின்ற நடைகாத்து,
தம்பி மார்கள் படைசூழத்
     தமிழ்போல் வாழ்க பல்லாண்டே!

நண்பர் வேணு கோபாலும்
     நலஞ்சேர் ஆதி லட்சுமியும்
தொண்டர் ஆகப் பணியாற்றும்
     தொன்மைத் தமிழின் படைவீரர்!
கொண்ட கொள்கை நன்குயர,
     கொடிபோல் கோலக் குடி..படர,
கண்டன் கருணை மழைபொழிய,
     காதல் கமழ்க பல்லாண்டே!

நல்ல வேணு கோபாலும்
     நறுஞ்சீர் ஆதி லட்சுமியும்
சொல்ல இனிக்கும் மொழியுடையார்!
     சொந்தம் மணக்கும் பொழிலுடையார்!
வல்ல கம்பன் கழகத்தை
     வளமாய்க் காக்கும் நெறியுடையார்!
வெல்லப் பாகின் சுவையடையாய்
     விளைந்து வாழ்க பல்லாண்டே!

நீண்ட வேணு கோபாலும்
     நேய ஆதி லட்சுமியும்
பூண்ட வாழ்வின் முப்பத்தைப்
     பொலியச் செய்து மகிழ்ந்தனரே!
ஆண்ட செல்வம் அன்பாகும்!
     அருமைச் செல்வம் பண்பாகும்!
தோண்ட சுரக்கும் நீரூற்றாய்த்
     தொடர்க இன்பம் பல்லாண்டே!

ஒப்பில் வேணு கோபாலும்
     உயர்ந்த ஆதி லட்சுமியும்
முப்ப(து) ஆண்டைத் தொடர்கின்றார்
     முன்னோர் மொழிந்த மாண்பேந்தி!
இப்பார் போற்றும் குறள்வாழ்வை
     இசைக்கும் இணையர் வாழியவே!
அப்பா! அரங்கா! பேரழகா!
     அருள்க! அருள்க! பல்லாண்டே!

அக்கா ஆதி லட்சுமியும்
     மாமா வேணு கோபாலும்
கொக்கா நின்று பணியாவும்
     கொழிக்கச் செய்யும் திறனுடையார்!
சொக்கா மின்னும் சுந்தரனாய்,
     சொக்கச் செய்யும் சுந்தரியாய்,
எக்கா லத்தும் வாழியவே!
     இனிய தமிழ்போல் பல்லாண்டே!

12.02.2014

5 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.
    வாழ்த்திய வாழ்த்துப்பா.... என் நெஞ்சை அள்ளிச்சென்றது.....
    வேணுகோபால் ஆதிலட்சுமி . தம்பதியினர் நீண்ட ஆயுள் பெற்று... என்றென்றும் புன்னகையுடன் வாழ்க வளமுடன் இனிய திருமணவாழ்த்துக்கள்...த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. முப்பதாம் ஆண்டுத் திருமண வாழ்த்து மிகவும் அருமை ஐயா...

    வரிகள் மனதை மகிழ்வித்தன...

    திருவாளர் வேணுகோபால் ஆதிலட்சுமி தம்பதியருக்கு இனிய வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வணக்கம் !
    அருமையான வாழ்த்துப்பா .தம்பதிகள் இருவரும் தமிழ்போல்
    என்றென்றும் மனமொத்து வாழ என் இனிய வாழ்த்துக்களும்
    இங்கே உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    RépondreSupprimer
  4. உங்கள் கவிமழையிலான வாழ்த்து அருமை ஐயா...
    தமிழ் போல் பல்லாண்டு வாழ நாங்களும் வாழ்த்துகிறோம்...

    RépondreSupprimer
  5. பல்லாண்டு வாழ நாங்களும் வாழ்த்துகிறோம்

    RépondreSupprimer