mardi 14 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 91]



காதல் ஆயிரம் [பகுதி - 91]


826.
மணிமின்னும்  வண்ண மலா்மின்னும்! தங்க
அணிமின்னும்! அன்பகம் மின்னும்! - இனிய
கனிமின்னும்! பெய்யும் பனிமின்னும்! அன்பே 
இனிமின்னும் உன்னழகு இங்கு!

827.
பாட்டும்..நீ! பண்ணும்..நீ! பைந்தமிழ்ப் பாகும்..நீ!
கூட்டும் குளிரும் கொதிப்பும்..நீ! - மூட்டியெனை
வாட்டும் மலரும்..நீ! வண்ண மயிலும்..நீ!
காட்டும் கருணைக் கடல்!

828.
ஏக்கம் எதற்கோ? எழுதிடும் பாட்டெல்லாம்
தேக்கம் தெளிவிக்கும்! தேனூட்டும்! - பூக்காடே!
தூக்கம் தொலையட்டும்! தூண்டும் மனநிலையை
நோக்க வளர்ந்திடும் நூல்!

829.
மோதல் விழிக்கணைகள் முட்டி எனைக்கவ்வக்
காதல் பிறந்ததடி! கண்நான்கும் - வாதமிடும்
எல்லாப் பொழுதும் இனிக்கும் திருநாளே!
பொல்லா இளமையைப் போற்று!

830.
பொல்லாத காதலிது! பொங்கி எனைவாட்டும்!
இல்லாத கற்பனையை ஏலமிடும்! - நல்லழகாய் 
சொல்லாமல் சொக்கவிடும்! தூய கவிபாடி
நில்லாமல் நீந்தும் நிலத்து!

(தொடரும்)

9 commentaires:

  1. அருமை... அதுவும் 830 மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்பனை வானில் கவிபாடிக் நீந்துகிறேன்
      நற்றுணை ஆனஎன் நங்கையுடன்! - கற்கின்றோம்
      காதல் கமழ்கின்ற காவியத்தை!ஊடலெனும்
      மோதல் கலையை மொழிந்து!

      Supprimer
  2. தாங்கள் எழுதிடும் பாவெல்லாம் எங்களுக்கு
    நல்ல வழிகாட்டியாய் உள்ளது
    பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டெழுதி நீந்துகிறேன்! பாவை அழகுடன்
      கூட்டெழுதி நீந்துகிறேன்! கொஞ்சுகிறேன்! - ஏட்டெழுதித்
      தந்தகவி அத்தனையும் தங்கக் கருவூலம்!
      சந்தக் கவிஞனென் சால்பு!

      Supprimer
  3. மின்னலைப்போல் வரிகள் மிரள வைக்கின்றன. நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னல் கொடியவள்! மீட்டும் இசையவள்!
      கன்னல் கனியவள்! காந்தமவள்! - பின்னல்
      கலையவள்! இன்பக் கவியவள்! கோவில்
      சிலையவள்! என்றவளைச் செப்பு!

      Supprimer
  4. தளம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வளமாயக் கவிதைகளை வார்த்திடவே மின்னும்
      தளமாய் அமைத்தேன் தழைத்து!

      Supprimer
  5. சொல்ல வார்த்தைகள் இல்லை, அத்தனையும் அழகு...!

    எனக்குப் பிடித்தவை:
    //பொல்லாத காதலிது! பொங்கி எனைவாட்டும்!
    இல்லாத கற்பனையை ஏலமிடும்! - நல்லழகாய்
    சொல்லாமல் சொக்கவிடும்! தூய கவிபாடி
    நில்லாமல் நீந்தும் நிலத்து!//

    RépondreSupprimer