dimanche 5 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 85]




காதல் ஆயிரம் [பகுதி - 85]


796.
சீர்பூத்த வண்ணம் சிறகடிக்கும் சிந்தனைகள்
கார்பூத்த வண்ணம் கவிபொழியும்! - பார்போற்ற
நேராக்கும் என்னை நிலைத்தவுன் பேரழகு!
பேராக்கம் கொள்ளும் பிசைந்து! 

797.
பாடுக பாவலனே! பாவை உயிர்பிணைந்து
ஆடுக அன்புளனே! ஆனந்தம் - சூடுக! 
தேடுக தேவியின் தேனருளை! சொக்கி..கண் 
மூடுக இன்பம் முகிழ்த்து!

798.
முகத்திலே முத்தம் பதிக்காமல் கொஞ்சும்
அகத்திலே அன்பாய்ப் பதித்தால் - சுகத்தின்
இதத்திலே சொக்கும் இதயம்! காதல்
பதத்திலே சொக்கும் பணிந்து!

799.
மையிட்ட கண்களில் மாயத்தை யிட்டாயோ!
கையிட்டுக் கட்டாமல் கைதானேன்! - வை..யிட்டுக்
கன்னல் கவிதைகளை! காதல் கனவுகளை!
இன்னல் அகற்றும் இவை!

800.
கண்ணிரண்டும் உள்ளன! காட்சிகள் யில்லையே!
மண்ணிருண்டு உள்ளதென மெய்மறந்தேன்! - எண்ணமெலாம்
உன்னிடம் தந்ததனால் உண்மை உரைக்கின்றேன்!
என்னிடம் ஒன்றும் இலை!

(தொடரும்)

2 commentaires:

  1. ஐயா... மிக அருமை! ரசித்தேன்.

    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    வித்தை உங்களிடம் வெகுவாகத் தானுண்டு
    சத்தைச் சொல்கிறீர் சற்றும் சளைக்காமல்
    கொத்தாகத் தமிழில் கூடிவிளையாடும் பாக்கள்
    வித்தாகுமே நம்மனதில் விளையுமே சிறந்து...

    த ம.2

    RépondreSupprimer
  2. சொக்குகிறது மனது... (798)

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer