dimanche 26 août 2012

தமிழா! நித்திரை கிழித்து வா



தமிழா! நித்திரை கிழித்து..வா!
நெஞ்சினை நிமிர்த்தி..வா!
எத்தனைத் தடைகளோ - உடைத்து
வெற்றியைச் சூடி..வா!

அன்னையை மறப்பதோ? - சோம்பித்
திண்ணையில் கிடப்பதோ?
அன்னிய ஆசையால் - உன்றன்
கண்ணையே இழப்பதோ?

உண்டு உறங்குவதோ? - துயர்
கண்டு நடுங்குவதோ?
நண்டு இழுப்பதுபோல் - செயல்
கொண்டு அழுந்துவதோ?

கேலிப் பொருளாக - பிறர்
காலிற் கிடக்காதே!
தோளிற் பலமுண்டு! - நாள்கள்
தூங்கிக் கழிக்காதே!

சாதிப் பெயர்நீக்கு! - வெறியாம்
சமயப் பகைபோக்கு!
ஆதித் தமிழ்நூல்கள் - ஓதும்
அழகை உனதாக்கு!

தலைவர் தலைவரெனத் - தூக்கித்
தலைமேல் ஆடாதே!
விலையாய் உன்வாழ்வை - விற்று
வெந்து வாடாதே!

நடிகர் நடிகைகளை - வாழ்வாய்
நம்பித் துதிக்கின்றாய்!
விடிவா.. திரையொளியும் - காலம்
வீணில் கழிக்கின்றாய்!

குனிந்து நீ..நின்றால் - உன்மேல்
குதிரை ஏறிடுவான்!
துணிந்து நீ..நின்றால் - பகைவன்
தொடவே அஞ்சிடுவான்!

இம்மண் சுமையாகத் - தமிழா!
என்றும் இருக்காதே!
கும்ப கருணனைப்போல் - தூங்கிக்
கொள்கை மறக்காதே!

மம்மி தாடியெனத் - தமிழ்
மழலை அழைக்குது..பார்!
அம்மா எனும்சொல்லோ - மெல்ல
அழிந்து போகுது...பார்!

தன்னலம் நீக்குகவே! - தாயாம்
தமிழ்நலம் தேக்குகவே!
உன்னரசு ஆட்சியிலே - தமிழை
ஒளிபெற ஏற்றுகவே!

சின்னத் திரைப்பெட்டி - உன்னைத்
தின்னு செரிக்கிறது!
பெண்ணை அடிமையிடும் - பே
ரிழிவு தொடர்கிறது!

ஈரம் தமிழ்வித்து! - புகழ்
ஆரம் குறள்முத்து!
வீரம் நம்சொத்து! - எழுக
கீரனை நீ கற்று!

விழித்துக் காத்திடுக! - சீர்
விளைத்துக் கூத்திடுக!
தழைத்துப் பூத்திடுக! -  உலகே
தமிழைப் போற்றிடுக!

vendredi 24 août 2012

குறளரங்கம் 20


ஆசை முகம் மெல்ல..மெல்ல




ஆசை முகம் மெல்ல..மெல்ல

ஆசைமுகம் மெல்ல மெல்ல மின்னுது! – அவன்
அரும்புமீசை என்னுயிரைக் கிள்ளுது
                                                                              (ஆசைமுகம்)

ஓசையுடன் தென்றல் வந்து வீசுது! – ஏனோ
உடல்முழுதும் அவன்செயல்போல் கூசுது!
                                                                              (ஆசைமுகம்)

காலையிலே கண்விழித்து எழுந்தேன்! – கண்ட
கனவையெண்ணிப் படுக்கையிலே விழுந்தேன்!
சேலையிலே அவன்ரேகை கண்டேன்! – என்ன
செய்தானோ மனம்விம்பி நின்றேன்!
                                                                              (ஆசைமுகம்)

வாசலிலே கோலமிடும் வேளை! – அவன்
வரவையெண்ணி வாடுதடி மூளை!
பாசக்கிளி கொஞ்சுமகிழ் சோலைஅவன்
பார்த்தபார்வை புரியுதடி லீலை!
                                                                              (ஆசைமுகம்)

கல்லூரி சென்றுவரும் நேரம் - அவனைக்
காணாமல் என்னெஞ்சுள் பாரம்!
அல்லிமலர்க் குளக்கரையின் ஓரம்! - இரு
அன்னங்கள் பாய்ச்சும்மின் சாரம்!
                                                                              (ஆசைமுகம்)

காணாமல் வீடுவந்து சேர்ந்தேன் - என்
கைவளையல் இளகிவிழ ஆழ்ந்தேன்!
ஆனவரை வீட்டுக்குள் நடித்தேன் - வட்ட
அழகுநிலா தூதுவிட துடித்தேன்!
                                                                              (ஆசைமுகம்)

உண்ணதரும் பொருள்மீது வெறுப்பு! – அவன்
உணர்வாலே விடியும்வரை விழிப்பு!
எண்ணமெலாம் காதல்வலை விரிப்புஐயோ
இரவெல்லாம் காமனவன் அழைப்பு
                                                (ஆசைமுகம்) 

காதல் நாற்பது (நான்காம் பத்து)



        காதல் நாற்பது (நான்காம் பத்து) 
       
        உன்மடியில் குழந்தையென நான் தவழ்ந்தால்
             உள்ளத்துள் இன்பத்தேன் ஊறு மன்றோ?
        என்மடியில் பூங்கொடியே நீயி ருந்தால்
             இவ்வுலகை மறந்துமனம் மயங்கு மன்றோ?
        பொன்னுடலாம் உன்னழகு மிளிரக் கண்டு
             போதையிலே என்றனுயிர் ஆடு மன்றோ?
        உன்னருளால் நல்லறமே மலருங் கண்ணே
             ஓங்குதமிழ் ஒண்டொடியே வாராய் முன்னே! 31

        கண்டவுடன் மயக்கமுறச் செய்யுங் கண்ணாள்
             காட்டுகின்ற வித்தைகளை என்ன வென்பேன்?
        தண்டையுடன் உன்னடிகள் நல்கும் ஓசை
             சந்தத்தில் பொழுதெல்லாம் சொக்கிப் போவேன்!
        கொண்டையுடன் பூமணக்கும் வடிவைக் காணக்
             குவலயத்தில் வேறழகோ இல்லை யென்பேன்!
        பண்டுதமிழ் நன்னெறியைக் காக்கும் பாவாய்!
             பாவலனின் ஏக்கத்தை உடனே தீராய்! 32

        பத்துவிரல் வந்தென்னைத் தடவட்  டும்மே!
             பாற்கடலின் நல்லமுதைப் பருகட் டும்மே!
        கத்துகடல் மணற்பரப்பில் ஒன்றாய்க் கூடிக்
             காதல்மொழி பேசியுயிர் களிக்கட் டும்மே!
        கொத்துமலர் பூத்தாடும் சோலை தன்னில்
             கொஞ்சிமகிழ்ந் தாடியுளம் குளிரட் டும்மே!
        முத்துமணி மாலையென என்னைச் சூடி
             முத்தமிட மறவாதே ஆசைப் பெண்ணே! 33

        கண்பெற்ற பெரும்பயனை அடைந்து விட்டேன்
             கட்டழகி கயல்விழியைக் கண்டு! வாழ்வில்
        புண்பட்டு வாடிநின்ற என்றன் நெஞ்சம்
             பூவாக மலர்ந்ததடி காதல் கொண்டு!
        எண்ணற்ற எண்ணங்கள் எளிதாய்த் தோன்றி
             என்னுயிரை வாட்டுதடி ஏனோ இன்று!
        மண்பெற்ற செல்வமென வந்து தித்த
             மணிமொழியே நல்லுறவைத் தாராய் நன்று! 34

        விண்ணோடு விளையாடும் நிலவே வாராய்!
             வேதனையைத் தீர்த்தருளி நலமே தாராய்!
        கண்ணோடு கதைபேசும் கண்ணே வாராய்!
             கவியெழுதக் கற்பனையாம் வளத்தைத் தாராய்!
        பொன்னோடு பதிந்தொளிரும் மணியே வாராய்!
             பொலிகின்ற நல்வாழ்வை இனிதே தாராய்!
        என்னோடு கலந்திடவே பிறந்திட் டாயே!
             எப்பிறவி எடுத்தாலும் மனையாள் நீயே! 35

        நாட்டிலெனை எல்லோரும் மதித்து வாழ
             நற்குடியின் பெருமைகளை வாழ்வில் கூட
        ஏட்டிலெனைப் புலவரெலாம் போற்றிப் பாட
             இனிமைதரும் செல்வங்கள் குன்றாய்ச் சேர
        வீட்டிலுள துயரங்கள் விலகி யோட
             வெற்றிமகள் நாடிவந்து மாலை சூடப்
        பாட்டினிலே வேண்டுகிறேன் இன்பப் பாவாய்!
             பாங்குடனே உன்னுறவை இனிதே தாராய்! 36

        உன்முகத்தைப் பார்க்காமல் இருந்த நாள்கள்
             உப்பில்லாப் பண்டம்போல் போகும் வீணே!
        என்னகத்தை நன்னெறியில் செலுத்தச் செய்யும்
             இளையவளே! இன்னமுதே! என்றும் உன்றன்
        தன்னலத்தை எண்ணாமல் சேவை செய்து
             தண்ணிலவாய் ஒளிர்பவளே! தெய்வப் பெண்ணாய்ப்
        பொன்னகத்தைப் பெற்றவளே! உன்னைப் போற்றிப்
             புகழ்வதிலே மகிழ்ச்சியுறும் என்றன் நெஞ்சே! 37

        சோலையிலே கமழ்கின்ற மணமே யாகும்
             சுந்தரியே உன்வரவு! மயக்கும் இன்ப
        மாலையிலே நினைவுகளைப் பெருகச் செய்து
             வாட்டுமெனை உன்னழகு! அணிந்து வந்த
        சேலையிலே மின்னுகின்ற பூக்கள் யாவும்
             சிந்தனையைத் தாக்குகின்ற வயது! தென்னம்
        பாளையிலே சுரக்கின்ற கள்ளாம் ஒப்பில்
             பருவமெனை மயக்குவதேன் சின்னப் பெண்ணே? 38

        நெடுநாளாய் யான்பாடும் பாட்டை நீயோ
             நிலம்நின்று கேட்காமல் போகின் றாயே!
        நடுநிலையாய் உள்ளத்தை வைத்துக் கொண்டு
             நற்பதிலை நவிலுகவே! உன்னை என்கை
        தொடுநாளே பேரின்பத் திருநா ளாகும்!
             தூயவளே உன்னுறவால் வாழ்வே யோங்கும்!
        விடுகதையாய்ப் பார்வையினை வீச வேண்டாம்!
             விரும்புமெனை வேதனையில் தள்ள வேண்டாம்! 39

        கொள்ளையிடும் பேரழகே! குளிர்ந்த காற்றே!
             கோடையிலே கிடைத்தஇள நீரே! காதல்
        எல்லையிட முடியாத இன்ப மன்றோ?
             இவ்வுலகை இயக்கிவரும் தெய்வ மன்றோ?
        தொல்லைதரும் சாதிகளைச் சொல்லிச் சொல்லித்
             தூய்மைமிகு பேரன்பைச் சாய்க்க எண்ணும்
        கள்ளமனக் காரர்களை எதிர்த்து நின்று
             கமழ்கின்ற நல்வாழ்வைக் காண்போம் கண்ணே! 40