dimanche 21 mars 2021

கிளிக்கண்ணி

 


சிந்துப்பா மேடை - 16

 

கிளிக்கண்ணி

 

தமிழ்மொழி இயல் இசை, நாடகம் என்று செழிப்புடன் திகழ்வதால், முத்தமிழாகப் போற்றி மகிழ்கிறோம்.

 

இயற்றமிழ் என்பது கருத்தை உணர்த்துவதை நோக்கமாக உடையது என்றும், இசைத்தமிழ் என்பது இசையின்பம்  அளித்தலை முதன்மை நோக்கமாக உடையது என்றும், முனைவர் இரா. திருமுருகனார் உரைப்பார். [சிந்துப்பாடல்களில் யாப்பிலக்கணம் பக்கம் - 3]

பேச்சு, உரைநடை, செய்யுள்  ஆகியவை இயற்றமிழாகும். இயற்றமிழ்ப் செய்யுள் இயற்பா எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா. மருட்பா இயற்றமிழைச் சேரும்.

 

இசைத்தமிழ்ப் பாடல் இசைப்பா எனப்படும். கலிப்பா, பரிபாடல், தாழிசை, விருத்தம், துறை, சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி அகியவை இசைப்பாவாகும்.

இயலும் இசையும் இணைந்து வருவது நாடகத்தமிழாகும்.

 

இசைப்பாக்களில், தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் பாடப்படுவன என்றும், பண்ணுடனும் தாளத்துடனும் பாடப்படுவன என்றும் இருவகையுண்டு.

 

சிந்து என்னும் இசைப்பா, இசைத் தாளத்துடன் பாடிப்பாடி இயற்ற வேண்டும். இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுத் தாளத்துடன் நடப்பது சிந்துப்பாவாகும். [சிறுபான்மை நான்கடி பெற்றுவருவதும் உண்டு] 

கிளிக்கண்ணி -1

 

பண் : செஞ்சுருட்டி  
அடி: ஆதி தாளத்தில் 2 வட்டணை     
சீர் : நான்மை நடையது

நெஞ்சில்  உரமுமின்றி
நோ்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ - கிளியே!

வாய்ச்சொல்லில் வீரரடீ!

 

பழமை பழமையென்று

பாவனை பேசலன்றிப்

பழமை இருந்தநிலை - கிளியே!

பாமரர் ஏதறிவார்?

 

[மகாகவி பாரதியார்]

 

ஓரெதுகையில் அமைந்த இரண்டடிகள் கண்ணி என்று பெயர்பெறும். கிளியே என்ற முன்னிலை உடைமையால் கிளிக்கண்ணி என்று பெயர்பெற்றது. கிளிக்கண்ணி பலவகை அடிகளாலும் தாள நடைகளாலும் நடக்கும். சீர், தளை வரையறை இல்லை.

 

பாரதியின் கிளிக்கண்ணியில் நெஞ்சில் - திறமுமின்றி ஓரடியாகும். வஞ்வனை - வீரரடீ மற்றோர் அடியாகும். நெஞ்சில் - வஞ்சனை எதுகையாகும். நெஞ்சில் - நேர்மை, வஞ்சனை - வாய்ச்சொல் மோனையாகும்.

 

அசை பிரித்தல்

 

oooநெஞ் சில்oஉo ரoமுo மின்றிoo
oooநோ் மைoத்திo றoமுo மின்றிoo

oooநெஞ் சில்oஉo ரoமுo மின்றிoo
oooநோ் மைoத்திo றoமுo மின்றிoo

oooவஞ் சoனைo சொல்oவாo ரடீoo

oooo  oooo - கிoளிo யேooo

oooவாய்ச் சொல்oலில்o வீoரo ரடீoo

oooo  oooo - கிoளிo யேoo

 

இலக்கண சுருக்கம்

 

இக்கண்ணி,  நெடிலசையில் தொடங்கும் அரையடி 7 சிந்தசைகளையும், குறிலசையில் தொடங்கும் அரையடி 8 சிந்தசைகளையும் பெற்றுவரும்.  இரண்டாம் அரையடிக்குப் பின் 'கிளியே'  - தனிச்சொல் வரும்.

 

கிளிக்கண்ணி - 2

 

அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்
சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.

ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'அந்தமுடன்' முதல் 'என்னறிவில்' வரை ஓரடி. 'சுந்தர' முதல் 'கிளியே' என்பது வரை மற்றோரடி. ஆதி தாளம் என்பதால் ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். ஒவ்வோர் சீரும் 4 அசைகளைப் பெற்றிருக்கும். மேலுள்ள தாயுமானவர் கண்ணியில் ஓரடியில் 14 அசைகள் உள்ளன. மீதி யசைகள் அளபெடுத்து நீண்டு இசைக்கும். ஒவ்வொரு சீரும் இரண்டு அசைகளுக்குக் குறையாமல் அளபெடுக்கும். 

 

இரண்டடியும் ஓரெதுகை பெறும் [அந்தமுடன் - சுந்தரவான்]

 

ஒவ்வோர் அடியிலும் மோனை யமைய வேண்டும்

 

அசை பிரித்தல்

ooஅந்த முoடன்o ஆoதிo அoளo

வாoமல்o என்oனo றிoவில்o oooo
ooசுந்த ரoவாoன் சோoதிo துoலங்o

குoமோo பைoங்o கிoளிo யேooo

 

 இலக்கச் சுருக்கம்

 

 ஓரடியில் 14 சிந்தசைகள் வர வேண்டும்

 

கிளிக்கண்ணி - 3

 

அடி : ஆதி தாளம்

சீர் : மும்மை நடை

 

ஆதி சிதம்பரதே - கிளியே

ஆடி வணங்கிக் கொண்டு

சோதி யிலக்கணத்தைக் - கிளியே

சொல்லுகிறேன்  உனக்கு

 

ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். ஆதி  கொண்டு வரை ஓரடி. சோதி முதல் உனக்கு என்பது வரை மற்றோரடி. ஆதி தாளம் என்பதால் ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். மும்மை நடை என்பதால் ஒவ்வோர் சீரும் 3 அசைகளைப் பெற்றிருக்கும்.  ஒவ்வோர் அடியிலும் மூன்றாம் சீர் ஓரசை மட்டும் வந்து இரண்டு அசை நீளும். ஏழாம் சீர் ஓரசை மட்டும் வந்து ஐந்தசை நீண்டொலிக்கும்.

 

இரண்டடியும் ஓரெதுகை பெறும் [ஆதி - சோதி]

 

ஒவ்வோர் அடியிலும்  1, 5 மோனை யமைய வேண்டும். [ஆதி - ஆடி] [சோதி - சொல்லு]

 

அசை பிரித்தல்

 

ஆ/தி/சி   தம்/ப/ர   தே/o/o   -   கி/ளி/யே

ஆ/டி/வ   ணங்/கிக்/கொண்   டு/o/o   o/o/o

சோ/தி/யி   லக்/க/ணத்   தை/o/oக்   -   கி/ளி/யே

சொல்/லு/கி   றேன்/உ/னக்   கு/o/o   o/o/o

 

இலக்கணச் சுருக்கம்

 

நான்கு அரையடிகளும் ஏழு சிந்தசைகளைப் பெற்றுவரும். முதல் அரையடி ஈற்றில் இரண்டாம் அரையடியின்  ஈற்றில் 'கிளியே' என்ற தனிச்சொல் வரும்.

 

மேலும் விளக்கம் பெற விரும்புவோர் Paavalar Payilarangam  என்ற you Tube  காணொளியைப் பார்க்கவும்.

 

மூன்று வகையிலும் ஒவ்வொரு கிளிக்கண்ணி எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

21.03.2021

 

 


vendredi 12 mars 2021

பதினாறு ஆரச் சக்கரம்

 


பதினாறு ஆரச் சக்கரம்

 

ஆசரியப்பா

 

மாறுக!வேர் செம்மொழி மணமெழ! வாயைந்து

மாறண்புக் காவி பொழின்மா வுற்றுக்காண்!

சேர்மின் குணம்!பொழி லாய்ப்பிணை கருணை!

வார்குழை நறுமகழின் மேலற வண்புக

மாமதீ விண்ணரு ளெழிமேவும் விண்டுமிக

நா, மார் பணுவிட் டொழி!யேந்தி நாம்தொழுது

தண்வளஞ் சூடிவழி யேதெண்டா! வழுமிகு

புண்டிளை சுரண்டழி! பொளிக தார்வாழ்வு!

மாற்று மாசையே! சேர்க வாழணி

மாற்று நானுறு தவிப்பு வாதே !

துணைவெண் ணருணை சூடு கவிதை!

கணையே! துலாமே! குணமே வுகவே!

 

சிந்தியல் வெண்பா

 

கண்மிகு தீர்வடியைக் கண்டு தொழுவார்க்கு

நண்ணுஞ் சுழற்பிறவி நாடாதாம்! விம்மருட்

டிண்ணமாய் மேவுந் தெளி!

 

அருஞ்சொற்பொருள்

 

வாய் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி

ஆறு - வழி

அண்பு - கிட்டுதல்

காவி - துாய்மை நிறம்

பொழில் - பெருமை, சோலை

வார் - நேர்மை, நுண்மை

அகழி - கேணி

விண்டு - அறநுால்

தெண் - தெளிவு

கணை - நிறைவு

துலாம் - நிறைகோல்

மேவுதல் - ஓதுதல்

விம்மு - மிகுதல்

 

கருத்துரை

 

செம்மொழிவேர் மணமெழும் வண்ணம் நெஞ்சம் மாறவும், ஐம்பொறியைக் அடக்கும் வழியடைந்து செம்மை செழிக்கும் சோலையழகு காணவும், குணங்கள் சேரவும், கருணை மலரவும், நேர்மை இணைந்திருக்கவும், குளிர்கேணியின் தண்மைபோல் ஓங்கும் அறமாகிய கொடைப்பண்பு வரவும், விண்ணருளையும், அழகுதரும் அறநுாலையும் அரிய மதியுள் மிகுக்கவும்,  நாவிலும் மனத்திலும் சிறுமை விட்டொழியவும், மனமொன்றி இறைவனைத் தொழுவோம். தண்வள மேற்று  வாழ்வின் பாதையில் தெளிவைத் தரவும், குற்றமிகு புண்ணில் திளைக்கின்ற செயல்களச் சுரண்டி அழிக்கவும், தார்சூடும் வாழ்வச் செதுக்க வேண்டும். வாழுகின்ற அணிகளை சேர்க்க வேண்டும்.  நாச்சுவைக்குத் தவிக்கின்ற சண்டையை  மாற்ற வேண்டும். திருநீர் மணக்கும் ஈசன் கவிதைகளைச் சூட வேண்டும். அதுவே நமக்கு துணையாகும்.  நிறைவையும், நிறைகோலென வாழுவும், ஒழுக்கமும் அடையவேண்டும் .

 

இது, மேலாரின்முனை தொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்து ஆரின்முனையிறுதி சென்று இரண்டாமடி முற்ற, இவ்வாறே  3, 4, 5, 6, 7, 8 ஆம் அடிகள் முற்றி,  முதலடி தொடங்கிய 'பெ' தொட்டு வட்டைவழியே யிடஞ்சுற்றி 9, 10, 11, 12 ஆம் அடிகள் முற்றியவாறு காண்க.

 

முதற்கண் நின்ற எட்டடிகள் ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 12 எழுத்துக்களைப் பெற்றன. செய்யுளில் அமையும் எழுத்துக்கள் 184. சித்திரத்தில் அமையும் எழுத்துக்கள் 161.

 

1, 2, 3, எண்களை இடஞ்சுற்றிப் படிக்கச் சிந்தியல் வெண்பா நிறைவுறும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

11.03.2021

mercredi 10 mars 2021

திருவாழிச் சக்கரம் சித்திர கவி

 

சித்திர கவி மேடை - 9

 

திருவாழிச் சித்திரம்

 

சுற்றும் பிறப்பறுப்பாய்! தொல்லைத் தொடரறுப்பாய்!

பற்றும் பழிவினை முற்றொழிப்பாய்! -  கற்றும்

துயரெனை யுற்றுச் சுழல்வதோ? மண்ணில்

வயவெனை யாள்வதோ, மாற்று!

 

வயவு - ஆசை

 

வெண்பா 70 எழுத்துக்களைப் பெறும். சித்திரம் 67 எழுத்துக்களைப் பெறும். சக்கரத்தின் மையத்தில் பாடல் தொடங்கிச்  சுழன்றுவந்து பாதத்தில் நிறைவுறும்

ஒன்றிவரும் எழுத்துக்கள் [29- 35] [40 - 48] [53 - 59]

 

வெண்பாவில் மோனை எதுகை அமையவேண்டும். தளை தட்டாமல் அமைய வேண்டும். சிலர் முகநுாலில் தளை தட்டுகிறது என்று எழுதியே சித்திரத்தை வெளியிட்டு இக்கலைக்கலைக்கு இழிவு செய்கின்றனர். சிலர் யாப்பிலக்கணம் அறியாமல் சித்திர நுால்களை எழுதிப் பொய்ப்புகழில் திளைக்கின்றனர்.

 

எளிதாக எழுதும் வண்ணம்  திருவாழிச் சித்திரத்தை அமைத்துள்ளேன். பாவலர் பயிலரங்க அன்பர்கள் முயற்சி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.  ஆசிரியப்பாவிலும் இக்கவிதையைத் தீட்டலாம்.

 

திருவாழிச் சித்திரம் எழுத வேண்டுமென விருப்பத்தைத் தெரிவித்துப் படம் வரைந்தளித்த திருமதி பத்மினி கேசவகுமார் அவர்களைப் பாராட்டுகிறேன.  

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.03.2021

mardi 9 mars 2021

கும்பச் சித்திரக் கவிதை

 

கும்பச் சித்திரம்

 

பாவே மணக்கப் படைத்தருள்! பசுமைக்

காவே வழங்கும் கவிகள் வேண்டும்!

வண்ண மாதே! மதுவே! புகழே!

எண்ண மினிய தளிர்கவி யே!தாயே!

விண்பனி பண்சேர்!சீர் சேர்!மாரி மார்பன்

வன்பகர் தமிழே! தேவே! வருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021