lundi 22 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 107]




காதல் ஆயிரம் [பகுதி - 107]
 
916.
அல்லி மலரே! அரும்பாலே! வெண்முத்தே!
சொல்லிச் சுவைக்கின்ற வெண்பாவே! - மல்லிகையே!
வெள்ளை மனத்தவளே! வெண்ணிலவே! உன்னழகில்
கொள்ளை கொடுத்தேங்கும் கொக்கு!

917.
மூத்தாடும் ஆசையினால் முன்னூறு முத்தங்கள்
கூத்தாடும் நெஞ்சுள்! குழலிசையே! - பூத்தாடும்
காட்டுக்குள் நாமிணைந்த காட்சி! குருவிகள்
கூட்டுக்குள் கூடும் குளிர்ந்து!

918.
மேகம் திரண்ட கருங்குழலி! விந்தையிடும்
மோகம் திரண்ட விழியழகி! - தேகத்தில்
தாகம் திரண்ட தவிப்புற்று நற்கருமைக்
காகம் கரையும் கனத்து!

919.
பா..நடக்கும் பாங்காய்! பசுந்தமிழ்ச் சொல்லேந்தி
நா..நடக்கும் பாங்காய் நலத்தவளே! - நீ..நடக்கும்
மின்னும் நடையை வியந்தெண்ணி ஆசையனால்
அன்னம் நடக்கும் அசைந்து!

920.
இயக்கும் விசையே! இனியவளே! உன்னை
மயக்கும் கவியால் மடக்க! - வியந்தே
விரிக்கும் வலைகண்டு விண்ணில் பறந்து
சிரிக்கும் சிறியதேன் சிட்டு!

(தொடரும்)

காதல் ஆயிரம் [பகுதி - 106]





காதல் ஆயிரம் [பகுதி - 106]

911.
கட்டி அனைத்துக் கவிபடித்து! முத்தத்தைக்
கொட்டிக் கொடுத்துக் குளித்திட்டாய்! - தொட்டவிடம்
ஆகுதே பொன்னாய்! அதைக்கண்டு நற்பயணம்
போகுதே சோடிப் புறா!

912.
தேனூறும் தீங்கனியோ? தென்றலோ? தேவதையோ?
வானூரும் வெண்மதியோ? வண்டமிழோ? - நானூறத்
தந்தாடும் கண்ணழகைத் தான்கண்டு, காதலிலே
வந்தாடும் வண்ண மயில்!

913.
சோலை மலரழகில் சொக்கும் சிறுவண்டாய்
மாலை மயக்கம் மணம்பரப்பும்! - சேலையெழில்
தாவுதே நெஞ்சம்! தமிழ்க்கவியின் சொற்கேட்டுக்
கூவுதே சின்ன குயில்!

914.
கோவைக் கனியோ? குளிர்ந்த,செந் தாமரையோ?
பாவை படைத்த பவளவிதழ்! - சேவையெனும்
ஊற்றாடும் உள்ளழகைத் தான்கண்(டு) உயர்தென்னைக்
கீற்றாடும் பச்சைக் கிளி!

915.
அங்கே இருந்தெனைக் கொல்லும் அருங்கலையை
எங்கே இருந்து..நீ கற்றாயோ? - தங்கமே!
வேர்வையில் நின்றாலும் வேல்விழியே உன்காந்தப்
பார்வையில் கண்டேன் பருந்து!

(தொடரும்)

dimanche 21 juillet 2013

வளம் பெறுக!




வளம் பெறுக

பெரியவர் சொல்லை என்றும்
            பேணியே மதித்தல் வாழ்வு!
சிறியவர் இவரே என்று
            சிரித்திடின் பெறுவோம் தாழ்வு!

வறியவர் நிலையைக் கண்டு
            மாண்புடன் உதவி புரிக!
கொடியவர் செயலைக் கண்டு
            கொன்றிடும் புலியாய் எழுக!

நல்லவர் நட்பை நாடி
            நலம்பல பெறுக இன்றே!
வல்லவர் அன்பைத் தேடி
            வளம்பல பெறுக நன்றே!

07.04.1980
 

samedi 20 juillet 2013

கம்பன் விழா 2003




சுவிற்சர்லாந்து கம்பன் விழாக் கவியுரை

அன்பின் பெருமையை அகிலம் உணர
இன்பத் தமிழில் எழிலார் காவியம்
எழுதிய கம்பனின் இணையடி மலரைப்
பொழுதெலாம் போற்றும் புலவன் யானே!
முன்னைப் பிறந்த முத்தமிழ் மொழியை
அன்னையாய் அடைந்தது அடியேன் தவப்பயன்!
சந்தத் தமிழில் எந்தை மயங்கி
இந்த உலகுக்(கு) என்னை அளித்ததால்
செந்தமிழ் மணக்கும் சிந்தை பெற்றேன்!
சொந்தம் எனக்குச் சுடர்த்தமிழ் காக்கும்
நெஞ்சம் கொண்ட நேயர் அனைவரும்!
தஞ்சம் என்னிடம் தண்டமிழ்க் காரிகை!
தமிழே உயிராய்த் தமிழே உடலாய்த்
தமிழே உணவாய்த் தமிழே உணர்வாய்
அடியேன் உற்றதால் கம்பன் அவையில்
தொடக்க உரைதரும் தொண்டினைப் பெற்றேன்!
கம்பன் அரங்கம் கனிச்சுவை தருமென
நம்பி வந்தவர் நறுமணம் காண்க!
அகில உலகக் கம்பன் அமைப்பை
மகிழ்வுடன் அமைத்த மைந்தர் வாழ்க!

பொழியும் பனிபோல் மொழியும் சொற்களால்
வழிதரும் சத்திய சீலனார், வாழ்வில்
மேவு புகழ்சேர் மென்றமிழ் வாணர்!
நாவுக்கரசர்! நல்லடி பணிந்தேன்!

அன்னைத் தமிழுக்கு அணியாய் விளங்கும்
சென்னைக் கம்பன் கழகச் செயலர்
இலக்கியச் செல்வர் இராம லிங்கர்
கலக்கிய மேடைகள் கணக்கில் அடங்கா!
கண்ண தாசனைக், கவிபாரதியை,
வண்ணக் கவிதை வழங்கிய கம்பனை,
இம்மென்(று) என்றே இயம்பும் முன்னே
நம்முன் படைத்து நல்லுரை மொழிவார்!

புதுவைக் கம்பன் கழகம் பொலிய
புதுமை நாடும் புகழ்முருகேசர்
கடமை வீரர் கல்யாண சுந்தரர்
சுடர்த்தமிழ் வளர்க்கும் துயவர் ஆவார்!
அன்னவர் ஆற்றிய அரிய பணியால்
பொன்னிகர் மேன்மையைப் புதுவை பெற்றது!

எளிய தோற்றம்! இனிக்கும் பேச்சு!
தெளிந்த உள்ளம்! தீந்தமிழ்த் தேனை
அளிக்கும் ஆற்றல்! அருந்தமிழ்க் கடலில்
குளித்துக் களிக்கும் கொள்கை வாணர்!
இலங்கைச் செயராசர் உளத்துள் கம்பன்
வளமுடன் வாழ்வதை நலமுடன் நவின்றேன்!

செல்வ வடிவேல் சொல்லும் சொற்கள்
நல்லார் மனத்தை வெல்லும் என்பேன்!

வண்ணத் தமிழ்பால் எண்ணம் முழுதும்
பின்னி ஒளிரும் பிரசாந்தன் வளர்க!

பெருங்கவி கம்பனின் பெருமை பரவ
அரும்பணி ஆற்றும் குருக்கள் வாழி!

அறிஞர் பல்லோர் அமர்ந்த அவையில்
சிறியேன் என்னைச் சிறப்புற வைத்த
கம்பன் வாழ்க! கண்ணன் வாழ்க!
நம்மின் தமிழை நன்றே காத்துப்
பண்புளம் மணக்கும் அன்பர் அனைவரும்
இன்புளம் சூடிப் பொன்னுளம் காண்க!
அலைமகள் அமர்ந்தே ஆளும் நாட்டில்
கலைத்தமிழ்க் கம்பனுக்கு இரண்டாம் ஆண்டு
விழாவைத் தொடங்க அழைத்த நண்பரைத்
தொழுதே தொடக்க உரையைக் கவிதையில்
தந்து மகிழ்ந்தேன்! இந்த அரங்கில்
வந்தவர் வாழ்க! கம்பன் சீரைத்
தந்தவர் வாழ்க! தண்டமிழ் வாழ்க!
சந்தக் கம்பனைச் சாற்றும் இவ்விழாச்
சிந்துக் கவிபோல் சீரினைப் பெற்று
முந்து புகழினை முழங்கி வெல்கவே!

27-12-2003

vendredi 19 juillet 2013

கண்ணீர்க்கடல்!





கண்ணீர்க்கடல்!

வேலி யாகத் தமிழுக்கு
     விளைத்த நன்மை பலகோடி!
வாலி உன்னைப் பிரிந்ததனால்
     வாடும் கவிதைப் பெருவயலே!
மாலின் உலகத் திருக்கதவம்
     மலர்போல் திறந்து வரவேற்கும்!
வேலின் கூர்மை வியன்தமிழை
     வேண்டி உன்முன் தவமேற்கும்!

நம்பன் இராமன் திருவடியை
     நாடி விண்மேல் சென்றாயோ!
கம்பன் அரங்கம் உனக்காகக்
     காத்துக் கிடக்கும் மறந்தாயோ!
செம்பொன் நெஞ்ச அடியார்கள்
     சிந்தும் கண்ணீர்க் கடலாகும்!
இம்மண் பிரிந்து போனாலும்
     இசைத்த பாக்கள் உயிர்வாழும்!

கோடம் பாக்கம் உன்பிரிவால்
     மாடம் சிதைந்த நிலமேவும்!
ஓடம் ஆற்றில் நடுவினிலே
     உடைந்து முழுகும் நிலைகாணும்!
பாடம் படிக்கப் பா..எழுதப்
     பார்த்தன் உன்னை அழைத்தானோ?
ஊட கங்கள் உறவெண்ணி
     உருகும்! உருளும்! அய்யய்யோ!

அந்த வாலி படலத்தை
     ஆழ்ந்து படித்த புலவன்நான்!
இந்த வாலி படைப்புகளை
     இதயம் ஏந்திக் காக்கின்றேன்!
வந்த வேலை முடிந்ததென
     வானை நோக்கிச் சென்றாயோ!
சொந்தம் இழந்து கலையன்னை
     துன்பக் கடலில் துவள்கின்றாள்!

வார இதழும் நாளேடும்
     வாடி வதங்கித் துயர்மேவும்!
ஆரத் தழுவி உன்கவியை
     அடைந்த சுவைக்குத் தாம்ஏங்கும்!
ஈர மின்றிக் காலமகன்
     ஏனோ உன்னை அழைத்தானோ?
பார முற்ற மனத்தோடு
     பணிந்து தொழுதேன் பரமனையே!

18.07.2013