ஓம்.. ஓம்..
ஓம்
கலமுடைந்[து]
ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்
பலமுடைந்து
சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து
சென்றதுபோல்
பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..
என்றதுமே
நீங்கும் இடர்!
காக்கும்
வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்
தாக்கும்!
துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற
கோது..மன
நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..
ஓதுமனம்
காணும் ஒளி!
பொய்யர்
உறவால் புழுங்கி மனநொந்தேன்!
மெய்யர்
எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி
வாழ்ந்த
நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..
ஆழ்ந்த
ஒளியால் அறி!
திருடும்
தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்
உருளும்!
உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்
முற்றும்
ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..
பற்றும்
பரம பதம்!
அடியாள்
பலர்கொண்டே ஆடிய ஆட்டம்
இடியாய்
விழும்நம் மிடமே! - படிபடியாய்
வந்த
வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..
தந்த
ஒலியே தவம்!
பட்ட
அடியென்ன? நட்ட வினையென்ன?
சுட்ட
நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்
ஆணைத்
திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..
ஆனை
முகனே அகற்று!
வறுமை
வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்
கருமை
மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை
உளங்கொண்டு
பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..
வளங்கொண்டு
ஞானம் வழங்கு!
பாட்டரசா
வென்று பழித்திடுவார்! வீண்வெற்று
வேட்டரசா
வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!
ஏட்டரசா!
உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..
வீட்டரசா
தீராய் வினை!
நாடி
நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!
கூடிக்
குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே
நிற்கின்றேன்!
அத்தனையும் நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..
கற்கின்றேன்
உள்ளம் கனிந்து!
ஆசையலை
சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்
வேசையலை
சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்
தங்கும்
அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..
தொங்குங்
கரங்கொண்டு துாக்கு!
எங்குக்
குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?
இங்குச்
சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு
தடையின்றித்
தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..
இடையின்றி
வேண்டும் எழுத்து!
அம்மைத்
தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!
வெம்மை
வினைகளை வேரறுப்பாய்! - மும்மை
மலம்போக்கிக்
காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..
நலந்தேக்கி
ஞானம் நவில்!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
27.08.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire