mardi 26 août 2025

மகாகவி பாரதியார்

 


மகாகவி பாரதியார் மாநாடு வெல்க!

 

புதுவைக்குப் புகழளித்தார்! சுற்றும் இந்தப்

          பூமிக்கு நெறியளித்தார்! மேல்கீழ் ஒன்றும்

பொதுமைக்குக் கவியளித்தார்! புரட்சி வேந்தர்

          போற்றிடவே தமிழளித்தார்! சந்தம் சிந்தும்

எதுகைக்கும் மோனைக்கும் எளிமை சூடி

          எழில்கொடுத்த பாரதியார் ஆக்கம் தம்மை

முதுமைக்கும் இளமைக்கும் கொண்டு சேர்க்க

          முழக்கமிடும் மாநாடு வெல்க! வெல்க!!

 

திருவெல்லாம் தமிழ்மக்கள் காண வேண்டித்

          திறமெல்லாம் தந்நாடு ஏற்க வேண்டி

உருவெல்லாம் ஞானவொளி மின்ன வேண்டி

          உலகெல்லாம் படைத்தவனை வணங்க வேண்டித்

தெருவெல்லாம் தமிழ்முழக்கம் ஒலிக்க வேண்டித்

          சிறப்பெல்லாம் பாரதியார் பாட்டுள் வைத்தார்!

கருவெல்லாம் அன்பூறும் ஆக்கம் ஆய்ந்து

          கமழ்கின்ற மாநாடு வெல்க! வெல்க!!

 

சொல்புதிது! பொருள்புதிது! சுவைக்கும் வண்ணம்

          சோதிமிகு நவகவிதை படைத்தார்! முத்தாய்ப்

பல்புதிது முளைக்கின்ற மழலைக் கின்பம்

          படைக்கின்ற நற்றமிழை வடித்தார்! காட்டில்

நெல்புதிது காணுகின்ற உழவன் போன்று

          நெஞ்சுவந்து பாரதியார் நெய்த நுால்கள்

வல்புதிது நமக்கேற்றும்! மனிதம் போற்றும்!

          வரலாற்று மாநாடு வெல்க! வெல்க!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

25.08.2025

vendredi 15 août 2025

வெண்டாழிசை

 


ஒரு பொருண்மேல் ஐந்து அடுக்கி

நிரையொன்றாசிரியத் தளையான் வந்த

நேரிசை வெண்டாழிசை

 

இளையவள்… இனியவள்...

 

இலைபுரி பசுமையை இடுபவள்! இளையவள்!

கொலைபுரி விழிகளின் குலமகள்! - மலைமகள்!

கலைப்புரி அவளுடைக் கழுத்து!

 

கருங்குழல் உடையவள்! கருணையின் கடலவள்!

அருங்குறள் நெறியினை அணிந்தவள்! - திருமகள்!

ஒருகுறை இனியிலை உயிர்க்கு!

 

சிலையென மிளிர்பவள்! செழுமையைத் தருபவள்!

தலையெனத் தமிழினைத் தரித்தவள்! - கலைமகள்!

மலையெனக் கனவுகள் வரும்!

 

அமுதென இனிப்பவள்! அழகொளிர் பொழிலவள்!

குமுதென மலர்ந்தவள்! குயிலவள்! - தமிழ்மகள்!

எமக்கினி வருமிடர் இலை!

 

கனியவள்! கவியவள்! கலையவள்! களிப்பு..அவள்!

பனியவள்! பயிரவள்! பளிங்கவள்! - இனியவள்!

இனி..எவள் அவளிணை இயம்பு?

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

15.08.2025


வெண்டாழிசை

 

ஒரு பொருண்மேல் ஐந்து அடுக்கி

நிரையொன்றாசிரியத் தளையான் வந்த

இன்னிசை வெண்டாழிசை

 

விடுதலை

வியப்புறு வகைதனில் விடுதலை திருநிலம்

உயிர்ப்புற உழைத்தவர்! உரிமையை யளித்தவர்!

பயிரென அளித்தனர் பயன்!

 

படுகொடு பல..பல! கொடுநிலை பல..பல!

நடுநிலை துளியிலை! நசித்திடும் துயர்நிலை!

விடுதலைக் குழைத்தனர் விழைந்து!

 

உயிர்தமை அளித்தனர்! உடைமையை இழந்தனர்!

பயிர்தமைத் துறந்தனர்! படர்குடி மறந்தனர்!

அயலவர் அகன்றனர் அறி!

 

கொலைவெறி பிடித்தவர் குடிகளை அழித்தனர்!

தலைவெறி வெளிப்படத் தடைகளை விதித்தனர்!

மலைவெறி விடுதலை வணங்கு!

 

கொடியினைத் சுமந்தனர்! தடியடி யடைந்தனர்!

இடியினை எதிர்த்தனர்! இரவெலாம் உழைத்தனர்!

விடிவினைப் படைத்தனர் விழித்து!

 

பாட்டரசர் கி. பாரதிதா
சன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

15.08.2025

lundi 11 août 2025

வெண்டாழிசை

 


நேரொன்றாசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை

 

கடமை மறவர் காமராசர்

 

கல்வி தந்த காம ராசர்

சொல்லித் தந்த தொண்டு - வல்ல

நெல்லி யென்றே நல்கு!

 

கன்னல் நெஞ்சர் காம ராசர்

நன்னீர் தந்த நல்லார்! - அன்பே

என்றும் பாடி ஏத்து!

 

கார்வான் வண்ணக் காம ராசர்

சீர்வான் கண்ட செல்வர்! - பேர்தான்

பார்வான் ஆளும் பாடு!

 

கட்டித் தங்கம் காம ராசர்

பட்டி தொட்டி பாடும்! - சிட்டே

கொட்டிக் கும்மி கூறு!

 

கண்ணில் உள்ள காம ராசர்

மண்ணில் தந்த மாண்பு! - பெண்ணே

எண்ணி யெண்ணி ஏத்து!

 

கஞ்சி தந்த காம ராசர்

நெஞ்சுக் குள்ளே நின்றார்! - விஞ்சிக்

கொஞ்சும் இன்பக் கூத்து!

 

கட்சி தன்னில் காம ராசர்

வெட்சி மாலை இட்டார்! - சிட்டே  

கட்டித் தந்தார் காப்பு!

 

காட்சிக் கின்பர் காம ராசர்

ஆட்சிக்[கு] அச்சாய் ஆனார்! - நாட்டின்

மாட்சி அண்ணல் வாழ்வு!

 

காக்கும் தெய்வம் காம ராசர்

பூக்கும் சோலை போற்றும்! - நோக்கும்

வாக்கும் நல்கும் வாழ்வு!

 

கண்ணன் போன்றே காம ராசர்

எண்ணம் யாவும் இன்பம்! - மண்ணை

வண்ணம் ஆக்கும் வாழ்த்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

11.08.2025

 

samedi 9 août 2025

வெள்ளொத்தாழிசை

 


நேரிசை வெள்ளொத்தாழிசை

.

புரட்சியாளர் பெரியார்

.

நாடு திருத்தி நலம்பெற வேண்டுமென

ஓடு தளர்ந்தும் உழைத்திட்டார்! - சூடுவர
ஏடு படைத்தார் எமக்கு!

.

மண்ணே திருத்தி மகிழ்ச்சிபெற வேண்டுமென

கண்ணே தளர்ந்தும் தினங்கற்றார்! - வெண்மனத்தால்

பண்ணே படைத்தேன் பணிந்து!

.

மக்கள் திருத்தி உயிர்மானம் வேண்டுமெனப்

பக்கம் தளர்ந்தும் படித்திட்டார்! - எக்காலும்

நக்கும் நரியை நசித்து!

.

தந்தை பெரியார்!

.

தந்தை பெரியாரைச் சாற்றும் திசைநான்கும்

சிந்தை யுலகத்தைச் சீர்திருத்தும்! - எந்நாளும்

விந்தை புரிந்தார் விழித்து!

.

எங்கள் பெரியாரை ஏத்தும் திசைநான்கும்!

மங்கும் உலகத்தை மாற்றியவர்! - செங்கதிராய்

அங்கம் உடையார் அவர்!

.

வல்ல பெரியாரை வாழ்த்தும் திசைநான்கும்!

நல்ல வுலகத்தை நன்குரைத்தார்! - சொல்யாவும்

வெல்லும் பகையை விரைந்து!

.                            

தன்மானப் பாசறை

.

ஈரோட்டுப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

சீராட்டும் நல்வாழ்வைப் பார்காணும்! - பாராட்டி

ஏரோட்டும் என்றன் எழுத்து!

.

காராடைப் பாசறையின் போரீட்டிச் சிந்தனையால்

பேரோடை போல்மேடை சீரளிக்கும்! - கேரளத்தில்

வேரோடு சாய்த்தார் விதி!

.

தன்மானப் பாசறையின் பொன்னான சிந்தனையால்

நன்மானங் காத்து நலம்பெற்றோம்! - இன்புற்றோம்!

தென்ஞான முற்றோம் தெளிந்து!

.

பகுத்தறிவு வேந்தர்!

.

பகுத்தறிவு வேந்தர்! படைத்தபுகழ்ப் பாதை

வகுத்தறிவு ஊட்டும்! வளர்க்கும்! - தொகுத்து

மிகுத்தறிவு சூட்டும் விரைந்து

.

வெல்லறிவு வேந்தர் விடுதலை ஏடளித்தார்!

வல்லறிவு சூட்டும்! வழிகாட்டும்! - நல்லவரைச்

சொல்!..அறிவு பூக்கும் சுடர்ந்து!

.

சீர்திருத்த வேந்தர்! செயல்யாவும் தன்மான

வேர்நிறுத்தி மேன்மை விளைத்தனவே! - பார்..திருத்தி

கூர்நிறுத்தித் தீர்த்தார் குறை!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025

வெள்ளொத்தாழிசை

 



இன்னிசை வெள்ளொத்தாழிசை

[மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் வந்தால் அதனை வெள்ளொத்தாழிசை என்பர்]

 

பேரறிஞர் அண்ணா

 

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவனாம்!

நன்றே நவின்று நலமளித்த பேரறிஞர்!

மன்றே மகிழும் மலர்ந்து!

 

ஏழை சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்

ஊழை நினைந்தே உருகாதே! பேரறிஞர்

வாழை மனத்தார் வணங்கு!

 

மாற்றான் மலரும் மணம்வீசும் என்றுரைத்தார்!

போற்றார் வியக்கப் புகழ்பெற்றார்! பேரறிஞர்

ஊற்றாய் அளித்தார் உவப்பு!

                          

அண்ணா பிறந்தார் அறி!

 

எண்ணா யிரங்கோடி எம்மண் தவமிருந்து

பண்ணார் தமிழின் படைநடத்தப் பேரறிஞர்

அண்ணா பிறந்தார் அறி!

 

மண்ணார் மடமையெலாம் மாய்ந்தொழிய, ஈடில்லாத்

தண்ணார் தமிழின் தகையொளிரப் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

 

கண்ணீர் துடைத்திடவும் கன்னல் அளித்திடவும்

விண்ணீர் நலமாய் விளைந்திடவும் பேரறிஞா்

அண்ணா பிறந்தார் அறி!

                          

தமிழ் மணக்கும் பேரறிஞர்

 

சீர்மணக்க நம்நிலத்தைச் செந்தமிழ் நாடென்று

பேர்மணக்கச் செய்த பெருமகனார்! பேரறிஞர்

பார்மணக்கத் தந்தார் பயன்!

 

பண்மணக்கும் பைந்தமிழை மண்மணக்கப் பேசியவர்

பெண்மணக்குங் சட்டங்கள் பேணியவர்! பேரறிஞர்

விண்மணக்குங் செங்கதிர் வேந்து!

 

தேர்மணக்கும் தென்னவரின் வேர்மணக்கும் நல்லாட்சி!

ஊர்மணக்கும் நற்றொண்டு! தார்மணக்கும் பேரறிஞர்!

நேர்மணக்கும் என்றன் நினைவு!

 

எங்கள் அண்ணா!

 

வானறிவு! சொற்கள் மதுவூற்று! பூங்காற்று!

நானறிவு பெற்ற நறுஞ்சாலை! மின்னெருப்பு!

தேனறிவு அண்ணா சிறப்பு!

 

சொல்லேந்தும் தீ!தேன் சுவையேந்தும் சிந்தனை!

மல்லேந்தும் போர்நிலம்! வான்மழை! மென்காற்று!

வல்லேந்தும் அண்ணா மனம்!

 

கவிவூற்று! கன்னல் கலைமன்றம்! வான்சீர்

குவியாற்றுத் தென்றல்! கொடும்பகைக்குத் தீ!இப்

புவிபோற்றும் அண்ணா புகழ்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

07.08.2025


samedi 26 juillet 2025

புகழ்பாடும் நுழைவாயில்

 

புகழ்பாடும் நுழைவாயில்

 

மொழியோங்கத் தொண்டாற்றும், உயர்வை நல்கும்,

        மொய்த்தபுகழ்த் தமிழ்ச்சிறகம் தமிழர் தம்மின்

வழியோங்க வளமோங்கத் திட்டம் தீட்டி

        வரலாற்றைத் தானெழுதும்! மூன்றாம் ஆண்டில்

விழியோங்கச் சிலையமைக்கும்! அந்த மானில்

        விழாநடத்திச் சீர்படைக்கும்! உலக மெங்கும்

பொழிலோங்கச் செயலாற்றும்! எம்மோ டிங்கே

        புறப்படுவீர்! பொற்காலம் காண்போம் நன்றே!

 

தெருவெங்கும் தமிழ்முழக்கம் கேட்கச் செய்யும்

        தென்மறவர் தமிழ்ச்சிறகம் குறள்நுால் சொல்லும்

கருவெங்கும் விளைந்திடவும், காலம் போற்றும்

        கவியெங்கும் பரவிடவும், தமிழின் வீர

உருவெங்கும் நிலைபெறவும், உலகோர் ஒன்றி

        உறவாக வாழ்ந்திடவும் பணிகள் ஏற்கும்!

திருவென்றும் திறமென்றும் எம்மோ டிங்கே

        திரண்டிடுவீர்! தீந்தமிழைக் காப்போம் நன்றே!

 

ஒன்றிணைந்து வாழ்ந்திடவே உள்ளங் கொண்டே

        உழைக்கின்ற தமிழ்ச்சிறகம் அந்த மானில்

நன்கிணைந்து சமைக்கின்ற கடாரம் கொண்டான்

        நன்வளைவு தமிழ்மறத்தை உலகுக் கோதும்!

குன்றிணைந்து தொடர்கின்ற அரணைப் போன்று

        குவலயத்தோர் திகழ்ந்திடுக! இன்பம் சேரும்!

இன்றுணர்ந்து பெயர்பதிக்க எம்மோ டிங்கே

        இணைந்திடுவீா்! எத்திசையும் போற்றும் நன்றே!

 

கடற்படையால் கடாரத்தை வென்ற காலம்

        கணக்கிட்டுத் தமிழ்ச்சிறகம் வாழ்த்திப் பாடும்!

உடற்கொடையால் உயிர்க்கொடையால் மாட்சி பெற்ற

        உயர்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்!

இடங்கொடையால் மடங்கொடையால் மேன்மை யுற்ற

        ஈடில்லா மாந்தர்களை ஏத்திச் சாற்றும்!

தொடர்கொடையால் பெருமைபெற எம்மோ டிங்கே

        துணையாவீர்! தொன்மொழியை வளர்ப்போம் நாமே!

 

அந்தமானில் வாழ்கின்ற மக்கள் வாழ்க!

        ஆற்றலுடைத் தமிழ்ச்சிறகத் தொண்டர் வாழ்க!

அந்தமானின் விழியழகை முகத்தில் காட்டும்

        அந்தமிழின் பெண்மணிகள் வாழ்க! வாழ்க!!

வந்தமானின் எழிற்கண்டு நெஞ்சஞ் சொக்கும்

        வளர்கலைஞர் வன்கவிஞர் அன்பர் வாழ்க!

சந்தமானின் பாட்டழகாய் ஆக்கம் தந்த

        சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

26.07.2025

samedi 19 juillet 2025

குறள் வெண்செந்துறை

 


கழுத்துார் முத்துமாரியம்மன்

குறள் வெண்செந்துறை

 

முத்தமிழ் வேண்டி முத்து மாரியைச்

சித்தம் பதிக்கச் சீர்கள் சிறக்குமே!

 

கழுத்துார் மாரியின் கண்கள் கண்டிட

அழுத்துந் துயர்கள் அனைத்தும் அகலுமே!

 

அன்னை மாரியின் அணிமலர் அடிகள்

முன்னை வினைகளை முற்றும் முடிக்குமே!

 

எங்கள் மாரியின் இணையடி தொழுதிட

அங்கப் பிணியின் அடிவேர் அறுமே!

 

காக்கும் மாரியின் கால்கள் பற்றிட

வாக்குச் சிறந்து வளர்புகழ் தொடருமே!

 

சத்தி மாரியின் தண்மலர்த் தாள்கள்

பத்துப் பிறப்பின் பாவம் நீக்குமே!

 

கன்னல் மாரியின்  கமழ்மலர்ப் பாதம்

இன்னல் அகற்றி இன்பம் அளிக்குமே!

 

எங்குல மாரியை ஏத்திப் பாடிட

அங்குல அளவும் அல்லல் இல்லையே!

 

வயல்சூழ் மாரியின் மலரடி போற்றிட

உயிர்சூழ் வினைகள் ஓடி மறையுமே!

 

முத்தா லம்மன் முன்னே இருந்தால்

சித்தாழ் ஞானஞ் செழித்துப் பூக்குமே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

17.05.2025

jeudi 1 mai 2025

தொழிலாளர் திருநாள்

 


தொழிலாளர் திருநாள்

[குறள் வெண்செந்துறை]

 

ஏரோட்டி எருவூட்டி இளைத்தோர்கள் இசைக்கும் திருநாள்!

சீரூட்டிச் செழிப்பூட்டித் திகைப்பூட்டிச் சிறக்கும் பெருநாள்!

 

உழைப்பாளி குறன்முழக்கம் உலகமெலாம் ஒலித்த திருநாள்!

கழைக்கூலி யாளர்களின் கண்ணீர்நீர் இனித்த பெருநாள்!

 

நெசவாளி நெஞ்சத்துள் நேசமலர் பூத்த திருநாள்!

வசைபாடி வதைத்தவரை வாயடக்கி வைத்த பெருநாள்!

 

பாட்டாளி யனைவரையும் கூட்டாளி யாக்கும் திருநாள்!

காட்டேறி யாட்டத்தைக் காலெடித்துப் போக்கும் பெருநாள்!

 

தொழிலாளர் ஒற்றுமையின் தோளோங்கி வென்ற திருநாள்!

பொழிலாக இவ்வுலகைப் புனைந்தோரின் இன்பப் பெருநாள்!

 

தொழிலுற்றும் துன்புற்றும் துடித்தவரின் எழுச்சித் திருநாள்!

இழிவுற்றும் இருளுற்றும் இருந்தவரின் வெற்றிப் பெருநாள்!

 

உழைக்கின்ற மக்கள்தம் உரிமையினை மீட்ட திருநாள்!

அழைக்கின்ற விருந்தாக அருஞ்சுவையை யிட்ட பெருநாள்!

 

ஆலைகளின் அதிகாரம் அடங்கிடவே செய்த திருநாள்!

சோலைகளின் வண்டாகச் சுழன்றாட வைத்த பெருநாள்!

 

இரும்புருக்கும் பட்டறையுள் கரும்பினிப்புத்  தந்த திருநாள்!

எலும்புருக்கும் கொடியவர்க்கு மருந்தளிப்புக் கண்ட பெருநாள்!

 

தொழுகின்ற திருக்கோயில் தொழிற்கூடம் என்றே போற்று!

பொழிகின்ற மழையின்பம் பொதுவுடைமை என்றே சாற்று!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.05.2025

samedi 12 avril 2025

 

பாவலர் வில்லூர்ப் பாரதி

 

     ஆசான் மீதும் தமிழ்மீதும்

ஆழி யளவுப் பற்றுடையார்

பேசா துள்ள கருவாய்ந்து

பேணி யெழுதுந் திறனுடையார்!

வாசா.. பாசா.. பெயர்சூடி

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

ஈசா வுன்னை வேண்டுகிறேன்

இவர்க்கே யாவும் நல்குகவே!

 

அஞ்சா நெஞ்சும் அகத்தெளிவும்

அமைந்த கவிஞர்! வரும்பகையைப்

பஞ்சா பறக்க விடுகின்ற

பாட்டுக் கணையைச் செய்மறவர்!

மஞ்சா போட்ட வன்மையென

வாழும் வில்லூர்ப் பாரதியார்!

துஞ்சா துலகுக்[கு] உணர்வூட்டித்

தொடர்ந்து பாடி வெல்லுகவே!

 

வீட்டில் உள்ள அனைவர்க்கும்

வெற்றி வழியைக் காட்டிடுவார்!

நாட்டில் உள்ள அனைவர்க்கும்

நல்ல தமிழை யூட்டிடுவார்!

ஏட்டில் உள்ள அனைவர்க்கும்

இனியர் வில்லூர்ப் பாரதியார்!

காட்டில் உள்ள தேனடையாய்க்

கவிதை பாடி ஓங்குகவே!

 

 
அன்பும் பண்பும் நிறைந்தவராம்!

அருளும் அறனும் உடையவராம்!

இன்பும் துன்பும் ஒன்றென்ற

ஈடில் குறளை உரைப்பவராம்!

அன்றும் இன்றும் நன்னெறியை

ஆளும் வில்லூர்ப் பாரதியார்!

என்றும் வாழ்க புகழுடனே!

இளமைத் தமிழின் அழகுடனே!

 

அகநூல் புறநூல் கற்றவராம்!

அருணூல் பொருணூல் பெற்றவராம்!

புகழ்நூல் குறளின் வழியேற்றுப்

புதுநூல் புனைந்து களித்தவராம்!

முகநூல் வழியே முத்தமிழை

முழங்கும் வில்லூர்ப் பாரதியார்!

தொகைநூல் புலவர் திருமரபில்

தொடர்ந்து பாடி  வாழியவே!      

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

12.04.2025