dimanche 5 mai 2024

சிறப்புப் பாயிரம் - ஆற்றலரசு

 

பாவலர்மணி ஆற்றலரசு எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

மலர்ந்த முகவை மதிநல மண்ணில்

நலஞ்சேர் குடியில் நற்றமிழ் காக்கச்

சத்தி பெயரைத் தாங்கி வளர்ந்து

பத்தி யோடு பசுந்தமிழ் நாடி

ஆற்ற லரசென அரும்பேர் ஏற்றார்!

போற்றம் வண்ணம் புரிந்தார் தொண்டு!

பெருஞ்சித் திரனார் திருமனை சேர்ந்து

கருத்தில் தென்மொழிக் காதல் கொண்டார்!

கூவிக் கூவிக் கொள்கை முழக்கம்

மேவிய இதழை விற்றுச் சுழன்றார்!

காலைக் கிழக்குக் கன்னல் தெற்கு

மாலை மேற்கு வண்ண வடக்கு

வங்கத் தமிழ்க்கடல் வள்ளுவப் பெருங்கடல்  

தங்கக் கேரளம் தண்கரு நாடகம்

கருணை யாந்திரம் காணும் எல்லையாய் 

உரிய தமிழகம் உற்ற தலைநகர்ச்

சென்னை புகுந்து செம்மை யடைந்து 

முன்னைத் தமிழை முழங்கி வாழ்ந்தார்!

இளங்கோ தேவர் ஈடில் கம்பர்

உளஞ்சேர் விருத்தம் உவந்த யாப்பில்

விருத்த மாயிரம் வியக்கும் பெயரில்

பொருத்த மாகப் புனைந்தார் பாக்கள்!

நாட்டின் நிலையை நல்லோர் நெறியை

வாட்டும் நிலையைக் காட்டும் இந்நுால்!

அயலார் நாட்டில் அருந்தமிழ் ஓதும்

இயலிசைப் புலவன் இன்கவி யரசன்

பாரதி தாசன் பாநலங் கேட்கப்

பேரொளித் தமிழின் பெருமை யாவும்

வளரும் பாவலர் மகிழ்ந்து கற்க

ஒளிரும் புகழை உலகில் ஏற்க

ஈரா யிரத்தை இணையும் ஐம்பதும்

ஓரைந்தும் உற்ற உயர்குறள் ஆண்டில்

முகநுால் உலகில் முன்னே நிற்கும்

மிகுபா வரங்கில் விளைந்த இன்னுால்

அன்னைத் தமிழின் அழகியல் மரபைப்

பின்னை வருவோர் பேணும் பொருட்டுப்

பூத்த தென்பேன்! புலமை பொங்கிக்

கூத்திடு மென்பேன்! காத்தல் கடனே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

05.05.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire