samedi 3 décembre 2022

எண் செய்யுள்


 

பாவலர்மணி பட்டம் பெற்ற கவிப்பாவை அவர்களுக்கு வாழ்த்து

பெயர்ப் பத்து [எண் செய்யுள்]

 

1.

சொல்ல இனித்திடுமே! துாயமண நல்கிடுமே!

வல்ல திறனை வழங்கிடுமே! - நல்லதமிழ்

தீட்டும் கவிப்பாவை தேன்பெயா் வாழியவே!

ஊட்டும் அமுதை உயிர்க்கு!  

 

2.

ஊட்டும் அமுதை உயிர்க்குத் தமிழழகைக்

காட்டும்! கருணைக் கலைசூட்டும்! - ஈட்டுபுகழ்

நங்கை கவிப்பாவை நற்பெயா் வாழியவே!

கங்கை யருளால் கமழ்ந்து!

 

3.

அருளால் கமழ்ந்திடுமே! ஆற்றல் தருமே!

பொருளால் இதயம் புகுமே! - திருமகளைப்

போற்றுங் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!

சாற்றுந் தமிழ்போல் தழைத்து!

 

4.

தழைக்கின்ற சோலை! தணிக்கின்ற தென்றல்!

உழைக்கின்ற ஆற்றல்! உயர்ந்தே - செழிக்கின்ற

சந்தக் கவிப்பாவை தண்பெயர் வாழியவே!

கந்தத் தமிழ்போல் கமழ்ந்து!

 

5.

கமழ்மணங் கொண்டும் கனிமன முற்றும்

இமைகணங் காக்கும் இயல்பும் - உமையருள்

போற்றும் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!

ஏற்றும் கொடியென ஈங்கு!

 

6.

ஈங்குத் தமிழோங்க ஈடில் இனமோங்கத்

தேங்கு வளமோங்கச் சீரோங்கத் -  தாங்குதிறம்

ஓங்கக் கவிப்பாவை ஒண்பெயர் வாழியவே!

பூங்குவளை போலெழில் பூத்து!

 

7.

பூத்த இதயத்துள் மூத்த குறண்மணக்கும்!

காத்த நெறிமணக்கும்! கற்றவர் - ஏத்திடவே

வாழும் கவிப்பாவை வண்பெயர் வாழியவே!

யாழின் இனிமையை ஈந்து!

 

8.

ஈந்துவக்கும் நெஞ்சம்! இசையுவக்கும் நல்லறிவு!

ஆழ்ந்துவக்கும் ஆற்றல்! அறத்தமுதைத் - சேர்ந்துவக்கும்

வண்ணக் கவிப்பாவை  வல்லபெயர் வாழியவே!

மண்ணின் மரபை வளர்த்து!

 

9.

மண்ணின் மரபை வளர்க்கின்ற நல்வாழ்வு!

பெண்ணின் சிறப்புப் பெருமாண்புத்  - தண்மைசேர்

கன்னல் கவிப்பாவை காத்தபெயர் வாழியவே!

என்றும் இறையருள் ஏற்று!

 

10.

ஏற்ற பணிசிறக்கும்! இன்பத் தமிழ்சிறக்கும்!

சாற்றச் செயல்சிறக்கும்! சால்பளிக்கும்! - ஆற்றழகு

முற்றும் கவிப்பாவை மூத்தபெயர் வாழியவே!

சுற்றும் உலகமே சொல்லு!

 

[பாட்டுடைத் தலைமகனின் பெயரைப்  புகழ்ந்துரைக்கும் பொருண்மையில் பாடப்பெற்றுப் பாடிய எண்ணளவால் பெயரேற்பது எண் செய்யுள் என்பர்] பாட்டரசர் கி. பாரதிதாசன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

03.12.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire