vendredi 16 décembre 2016

கவிப்பெண்ணே




கவிப்பெண்ணே!

பச்சைப் பசுங்கிளியே - தமிழ்ப்
பண்பின் உறைவிடமே!
இச்சை கொடுக்குதடி - உன்னழகு
இன்..பாத் தொடுக்குதடி!

பாடும் கவிக்குயிலே! - நடம்
ஆடும் எழின்மயிலே!
காடும் மணக்குதடி - உனைக்கண்டு
காலம் இனிக்குதடி!

கொஞ்சும் புறாவழகே! - சந்தக்
கோலத் தமிழ்நடையே!
நெஞ்சை இழுக்குதடி! - உன்விழிகள்
நேயம் பழுக்குதடி!

அன்ன நடைகாட்டி - நல்
ஆசை விளைத்தவளே!
இன்னல் குறைந்ததடி - வாழ்வில்
இன்பம் நிறைந்ததடி!

சின்னஞ் சிறுசிட்டே! - என்
சிந்தை மிளிர்பட்டே!
முன்னைப் பயன்என்பேன் - நீயே..என்
மோகத் தமிழ்என்பேன்!

முத்து நிறக்குருகே - என்
மூளை உறுங்கனவே!
பித்தம் பெருக்குதடி - நீ..தந்த
முத்தம் உருக்குதடி!

கொக்..கொக் எனுங்கோழி - போல்..நீ
கூறும் மொழிவாழி!
அக்கக் கெனையாக்கும் - உன்..பார்வை
ஆழ்ந்த துயர்போக்கும்!

கெண்டை விழிகளடி - பல
கேள்வி விடுக்குதடி!
தண்டை ஒலிகேட்டுத் - தீராத்
தாகம் எடுக்குதடி!

வண்டை நிகர்த்தகண் - தினம்
சண்டை நடத்துதடி!
மண்டை உறுங்காதல் - என்னை
மயக்கிக் கடத்துதடி!

அன்பே! அரும்அமுதே! - உன்னை
அள்ளிக் குடித்திடவா!
என்னே உடலழகு - நாளும்
ஏந்திப் படித்திடவா!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.12.2016

3 commentaires:

  1. சிந்தின் சந்த இனிமை
    மனத்தைக் கொள்ளை கொண்டது
    இரசித்துப் பாடி மகிழ்ந்தோம்
    வாழ்த்துக்களுடன்

    RépondreSupprimer
  2. அருமையான வரிகள்

    RépondreSupprimer