jeudi 9 avril 2015

என்னை மாற்றியவள்!



என்னை மாற்றியவள்!
(பதிற்றந்தாதி)

வஞ்சித்துறை (விளம் + தேமா)

என்னுயிர்ப் பெண்ணே!
பொன்முகம் காட்டு!
உன்னருள் நெஞ்சால்
இன்னமு[து] ஊட்டு!

ஊட்டிடும் தாய்..நீ!
ஈட்டிடும் சீர்..நீ!
வாட்டிடும் துன்பை
ஓட்டிடும் கார்..நீ!

நீ..தரும் சொற்கள்
பூ..தரும் வாசம்!
பா..தரும் பார்வை
மாதவம் வீசும்!

வீசிடும் காற்றாய்ப்
பேசிடும் மங்கை!
மாசிடும் என்னுள்
தேசிடும் கங்கை!

கை..மணம் நல்கும்
தைமணம் என்பேன்!
பைமனம் மேவும்
மைமணம் என்பேன்!

மணந்திடும் சோலை!
அணிந்திடும் சேலை!
இணைந்திடும் வேளை
குணந்தரும் பாலை!

பாமலர்ச் செல்வி!
நாமலர் காக்கும்!
காமலர் போன்றே
மா..மகிழ் வோங்கும்!

ஓங்குசீர் தந்தாய்!
தேங்குநீர் போன்றே!
வீங்குசீர் பாட
ஏங்கும்சீர் என்பேன்!

சீரொளிர் எண்ணம்!
பேரொளிர் செய்கை!
தாரொளிர் வாழ்வு!
பார்..இவை ஏற்பேன்!

ஏற்றிடும் இப்பா
போற்றிடும் உன்னை!
ஆற்றிடும் சேவை
மாற்றிடும் என்னை!

அந்தாதி விளக்கம்:

அந்தாதி என்பது தமிழில் வழங்கும் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிறது.

அந்தம் முதலாய்த் தொடுப்பது அந்தாதி.  ஒரு செய்யுளின். ஈற்றில் உள்ள  எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த செய்யுளின் முதலாக வருவது. (இஃது ஒரு செய்யுளுக்குள்ளும் அடிதோறும் நிகழவும் கூடும்)

ஓா் அந்தாதி நுாலின் இறுதிச் செய்யுளின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அந்நுாலின் முதற் செய்யுளின் முதலடியின் முதலாக வருமாயின் அது மண்டல அந்தாதியாகும். அப்படி வாராமல் செந்நடையாகச் சென்று முடிந்துவிடுமாயின் அது செந்நடையந்தாதி ஆகும். இந்த மண்டலித்திலும் செந்நடையாக அமைதலும் ஒரு செய்யுளுக்குள்ளே நிகழவும் பெறும். [சிலர் அந்தாதி நுாலின் காப்புப் பாடலின் முதல் சீரை நுாலின் ஈற்றுச்சீராய் அமைப்பார். காப்புப் பாடல் நுாலில் சேராது. காப்புப் பாடல் நுாலில் சேராது என்பதற்கு அம்பிகாபதி வரலாறு சான்றாகும்]

புறநானுாறு, நற்றிணை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, பெருங்கதை, திருக்குறள் ஆகிய நுால்களில் சில செய்யுள்கள் அந்தாதி அமைப்பைப் பெற்றுள்ளன.

நாயன்மார்களில் காரைக்காலம்மையார், சேரமான் பெருமான், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, ஆளுடைப் பிள்ளையார், மாணிக்க வாசகர் ஆகியோர் அந்தாதி பாடியுள்ளனர்.

ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் அந்தாதி பாடியுள்ளனர். (நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது)

அந்தாதியின் வகைகள்

1. தொடை அந்தாதி:  ஒரே பாடலுக்குள் நிகழும் அந்தாதிக்குத் தொடை அந்தாதி என்று பெயர்.

2. செய்யுள் அந்தாதி: இரண்டு செய்யுட்களுள் நிகழும் அந்தாதிக்குச் செய்யுள் அந்தாதி என்று பெயர்.

3. பதிற்றந்தாதி: பத்துப் பாடல்கள் அந்தாதியாக அமைந்தது பதிற்றந்தாதியாகும்.

4. நுாற்றாந்தாதி: நுாறு பாடல்கள் அந்தாதியாக அமைந்தது நுாற்றந்தாதியாகும்.

5. பதிற்றுப் பத்தந்தாதி: இதுவும் ஒரு நுாற்றந்தாதிதான். ஆனால் நுாற்றந்தாதிக்கும் இதற்கும் ஒருவேறுபாடு உண்டு. நுாற்றந்தாதி ஒரே வகைப் பாவினால் பாடப்படும். பதிற்றுப்பத்து அந்தாதி பத்துப் பத்துப் பாடல்கள் வெவ்வேறுவகைப் பாக்களால் பாடப்படும்.

6. ஒலியந்தாதி: பதினாறு கலை ஒரடியாக வைத்து, நாலடிக்கு 64 கலையாக வகுத்து, பல சந்தமும், வண்ணமும்  கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்கள் அந்தாதி யாப்பில் பாடப்படும்.

பாக்களின் அடிப்படையில் 1. வெண்பா அந்தாதி, 2. கலித்துறை அந்தாதி, 3. அகவல் அந்தாதி, 4. கலிவிருத்த அந்தாதி, 5. வஞ்சித்துறை அந்தாதி, 6. வஞ்சிவிருத்த அந்தாதி, 7. திரிபு அந்தாதி, 8. திரிபு வெண்பா அந்தாதி, 9. கொம்பிலா வெண்பா அந்தாதி, 10. யமகவந்தாதி, 11. நிரோட்டக அந்தாதி, 12. நிரோட்டக யமக அந்தாதி, 13. ஏகபாத நுாற்றந்தாதி, 14. ஏகத்தாள் இதழகல் அந்தாதி, 15. சிலேடை அந்தாதி, 16. கலியந்தாதி, 17. பல்சந்த அந்தாதி, 18. மும்மாலை அந்தாதி, 19. சித்திரக் கவி அந்தாதி ஆகியவை உள்ளன.

1. கலம்பகம், 2. பல்சந்த மாலை, 3. இணைமணிமாலை, 4. இரட்டைமணி மாலை, 5. மும்மணி மாலை, 6. நான்மணி மாலை, 7. கலம்பக மாலை, 8. மும்மணிக் கோவை, 9. கலியந்தாதி, 10. ஒலியந்தாதி, 11. நவமணிமாலை, 12. அந்தாதித் தொகை, 13. ஒருபா ஒருபஃது, 14. இருபா இருபஃது, 15. அட்டமங்கலம் 16. பதிற்றந்தாதி, 17. நுாற்றந்தாதி, 18. அலங்கார பஞ்சகம் ஆகிய சிற்றிலக்கியங்களை அந்தாதியில் பாடவேண்டும்.

09.04.2015

14 commentaires:

  1. அந்தாதியைப் பற்றிய அடைவை போன்ற இருந்தது தங்களின் இப்பதிவு. குறிப்பிட்ட வகையான இலக்கியங்களை அந்தாதியில் பாடவேண்டும் என்பதை தற்போதுதான் அறிந்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தாதி நுால்களைச் செந்தேன் அடையென்பேன்!
      வந்தோதி ஏற்பீர் வளம்!

      Supprimer
  2. விளக்கங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விளக்காய் வழிகாட்டும் விந்தைத் தமிழைச்
      சுளையாய் அளித்தேன் சுவைத்து!

      Supprimer
  3. அருமையான வரிகள் . மிகவும் ரசித்தோம் ஐயா.

    அந்தாதி பற்றிய விளக்கம் அறிந்தோம். மிக்க நன்றி ஐயா1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தாதி பாடும் அருந்தமிழ் யாப்பினைச்
      சிந்தாமல் உண்டீர் செழித்து!

      Supprimer
  4. அந்தாதி வகைகளையும் அதன் அடிப்படை விளக்கங்களையும் இன்றே தெரிந்துகொண்டேன். சிற்றிலயக்கியங்களை அந்தாதியில் பாடவேண்டும் என்பதையும் விளக்கிய பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
    என்னென்ன நூல்கள் எந்தெந்த வகையில் பாடப்பட்டுள்ளன என்பதையும் தாங்கள் விளக்கயிது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். வணங்கித் தொடர்கிறேன் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தாதி யாப்பில் அருந்தமிழ்ப் பேரழகு
      வந்தாடி நிற்கும் மலர்ந்து!

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான அந்ததாதியும். அதற்கான விளக்கம் கொடுத்தது வெகு சிறப்பு ஐயா... பள்ளிக்காலத்தில் உயர்தரத்தில் தமிழ் பாடம் படித்தது போல ஒரு உணர்வு.. தொடருங்கள் காத்திருக்கோம் அடுத்த பதிவுக்காக...பகிர்வுக்கு நன்றி த.ம11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அள்ளித் தமிழ்குடித்தால் துள்ளி மனமாடும்!
      உள்ளி மகிழும் உயர்ந்து!

      Supprimer

  6. அந்தாதி பாடி அரும்விளக்கம் தந்துள்ளீர்
    சிந்தாமல் யாம்கொண்டோம் சிந்தையிலே! - செந்தமிழின்
    சீர்கொடுக்கும் ஆக்கங்கள் செப்பிட வேண்டுகிறோம்
    கார்கொடுக்கும் வண்ணம் களித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அன்புடன் வந்தே அளித்த கவிபடித்து
      என்னுடல் ஆவி இனித்துருகும்! - என்னென்பேன்
      தங்கத் தமிழ்ச்சீரைப் எங்கும் பரப்பிடவே
      பொங்கும் அலையெனப் போ!

      Supprimer
  7. அந்தாதி பற்றிய அனைத்து விளக்கங்களும் அருமை.....! பதிவிற்கு நன்றி ! - chudachuda.com

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அந்தமிழ்ச் சீரை அறிந்து மகிழ்ந்திடவே
      எந்நாளும் வந்திடுக இங்கு!

      Supprimer