dimanche 10 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 3




கருணைக்கடல்

அழகுக் கிளியே! என்றென்னை
     ஆசை பொங்கக் கொஞ்சியவள்!
பழகு நிலவே பிள்ளையுடன்
     பாட்டுப் பாடி ஆடியவள்!
எழுது பாடம்! விரல்பிடித்தே
     எண்ணும் எழுத்தும் சூடியவள்!
அழுது தொழுது நோம்பேற்ற
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

பள்ளி சென்று படித்திடுவாய்!
     பாதை பார்த்துச் சென்றிடுவாய்!
துள்ளிக் குதித்தே ஆடாதே!
     தூர மாகப் போகாதே!
கள்ளிக் காட்டுப் பக்கத்தில்
     கவனம் தேவை என்கண்ணே!
அள்ளி அணைத்து வழிசொன்ன
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

வெளியே செல்லும் பொழுதெல்லாம்
     வீதி வென்று பார்த்திடுவாள்!
கிளியே போன்று சிலசொல்லைக்
     கிளம்பும் முன்னே உரைத்திடுவாள்!
துளியே துயரம் என்முகத்தில்
     துன்னக் கண்டு துடித்திடுவாள்!
ஒளியே! உயிரே! என்தாயே!
     ஓதும் கருணைப் பெருங்கடலாம்!

திரும்பி இல்லம் வரும்வரையில்
     திண்ணை மீதும், படிமீதும்,
அரும்பிப் பெருகும் கவலையுடன்
     அமர்ந்து நெஞ்சம் வாடிடுவாள்!
விரும்பி ஒன்றும் தனக்காக
     வேண்ட வில்லை! இனிக்கின்ற
கரும்பின் சாறே என்அன்னை
     காக்கும் கருணைப் பெருங்கடலாம்!

தன்னின் உணவை எனக்கீந்து
     தண்ணீர் மட்டும் அருந்தியதை!
என்னின் உயர்வாய் ஒருபொருளும்
     இல்லை என்றே எண்ணியதை!
பொன்னின் மணியாய் என்புலமை
     பொலியக் கண்ட பொங்கியதை!
என்றன் உயிரும் மறந்திடுமோ?
     என்தாய் கருணைப் பெருங்கடலாம்!

7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    பொன்னின் மணியாய் என்புலமை
    பொலியக் கண்ட பொங்கியதை!
    என்றன் உயிரும் மறந்திடுமோ?
    என்தாய் கருணைப் பெருங்கடலாம்!

    என்னவரிகள் தமிழ் வாசணை வீசுது... அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. தங்கள் தாய் கொடுத்து வைத்தவர்.
    இதுபோன்ற பிள்ளையை,
    தாயின் அன்பை என்றென்றும் மறவா பிள்ளையைப்
    பெற்ற தாய் கொடுத்து வைத்தவர்தான்.

    RépondreSupprimer

  3. அன்னையின் சீரையும் அந்தமிழின் தேனையும்
    பொன்னையும் சோத்துப. புனைந்தகவி! - என்னையும்
    காந்தமாய் ஈா்க்கும்! கருணைப் பெருங்கடலில்
    நீந்துமாம் நெஞ்சம் நெகிழ்ந்து!

    RépondreSupprimer
  4. தாயெனும் பெருங்கடலை தங்கள் கவியால் இன்னும் பெருமைப் படுத்தி விட்டீர்கள்

    RépondreSupprimer
  5. அன்னை அருளிய அன்பிற்கு ஈடென
    உன்னை உணருந் தமிழ்!

    RépondreSupprimer
  6. அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை
    அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை...

    உங்களைப் பெற்ற அன்னையின் கருணை!
    அவருக்கு மகனாகப் பிறந்த உங்களின் பெருமை!
    கவிதையில் கண்டு உள்ளமும் கண்களும் பனிக்கின்றன...

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer