samedi 16 novembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15




நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்


வணக்கம்

கமழ்கின்ற கவியாழிக் கண்ண தாசன்
     கண்சிவக்க, உயிர்துடிக்கத் தந்த பாடல்!
உமிழ்கின்ற வாயுடைத்துப் பகையைக் கொல்லும்!
     உறங்குகின்ற தமிழா்களை ஓங்கிக் குத்தும்!
அமா்கின்ற இடம்கிடைத்தால் அயா்ந்து துஞ்சும்
     அரசியலார் முகத்திரையைக் கிழித்துப் போடும்!
இமிழ்கின்ற பாட்டெழுதும் கவிஞன் என்றன்
     இதயத்துள் இடம்பிடித்தார்! வளா்க நன்றே!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நிந்தனை வாழ்வைப் போக்க
     நெருப்பினைக் கண்கள் கக்கும்
சிந்தனைத் துளிகள் கண்டு
     சிவந்தன நெஞ்சம்! தோழா!
சந்தனக் காட்டில் தோன்றித்
     தண்ணிள நீரில் நீந்தித்
தந்தன பாடும் என்றன்
     தமிழினில் வாழ்த்து கின்றேன்!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------
 
வணக்கம்!

என்வலையைப் பார்வையிட்டு அன்புறவாய் ஆனவுன்
இன்வலையை இன்றுநான் கண்டுவந்தேன் - வன்வலையில்
சிக்கும் பெரும்பொருளாய்ச் சிந்தை மகிழ்வேய்திச்
சொக்கும் அரும்பொருளை ஆய்ந்து!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்!

முக்கால் அரையும் ஒருகாலும்
     முழமே போட்டு அளந்திடுவார்!
செக்கால் சுற்றும் மாடுகளாய்ச்
     செகத்தை அடிமை யாக்கிடுவார்!
சுக்கால் சுட்டுப் பொய்யா்களைத்
     துரத்தும் காலம் என்றுவரும்?
இக்பால் செல்வன் பகுத்தறிவை
     ஏந்தும் ஆக்கம் தொடருகவே!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சொற்குற்றம் பொருட்குற்றம் யாவும் நீக்கிச்
     சொதப்பாமல் படைப்பிருக்கும் எண்றே எண்ணி
மற்குற்றம் இல்லாமல் பகையைத் தாக்கும்
     மாண்பிருக்கும் மதியளிக்கும் வலைக்குள் வந்தேன்!
நெற்குற்றம் என்பேனா? தாங்கி நிற்கும்
     நிலங்குற்றம் என்பேனா? சொற்கள் யாவும்
பற்குற்றப் போ்களைப்போல் பதுங்கக் கண்டு
     பாவலன்நான் திரும்புகிறேன்! வணக்கம்! நன்றி!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கண்ணுக்குள் இருப்பவளே! கண்ணே என்று
     கசிந்துருகிக் கவிபாடும் காதல் உள்ளம்!
மண்ணுக்குள் உடல்மறைந்து போகும் முன்னே
     மாதுன்றன் மனத்துக்குள் இடம்..தா! வண்ண
பெண்ணுக்குள் இருக்கின்ற எண்ணம் தன்னைப்
     பெருங்கடவுள் அறிவானோ? இன்பம் பொங்கும்
பண்ணுக்குள் கவியமைத்துக் கருத்தை வென்ற
     பராசக்தி அம்மாளை வணங்கு கின்றேன்!

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பண்ணுக்குள் நான்மிதக்கப் பைந்தமிழ் தந்துவந்தீா்!
பெண்ணுக்குள் பெற்றுயா்ந்த பேறு

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

செயந்தி படைத்த செழுந்தமிழ் நுால்கண்டு
வியந்து மகிழ்ந்தேன் விழித்து!

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தேனென இனிக்கும் தீந்தமிழ்க் குறளின்
     தெளிவுறு கவிதைகள் கண்டேன்!
மானென வண்ண மயிலென என்றன்
     மனத்தினைக் கவா்ந்தன என்பேன்!
ஊனெனக் கொண்ட உயிரெனத் தமிழை
     ஓதிடும் இன்றமிழ நம்பி!
நானெனச் சொல்ல? நறுங்கவி உலகம்
     நவின்றிடும் பாவலா் வாழ்க!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அன்னை அபிராமி அன்புக் குமரா!நற்
பொன்னை நிகா்த்ததுன் பூவலை! - என்வாழ்த்து!
மேலும் தொடருக மேன்மைதரும் ஆக்கங்கள்!
மூளும் உணா்வை மொழிந்து!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------
 

13 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    அழகான கவிப்பூக்கள் பார்த்தவுடன் என் அகம் மகிழ்ந்தது... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டு மலா்கள் படிப்போர் மனத்துள்ளே
      கூட்டும் மனத்தைக் குவித்து

      Supprimer
  2. அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நண்பா் தனபாலன்
      மூளும் மொழியுணா்வின் முத்து!

      Supprimer
  3. எழுதும் கவிகளில் இன்சுவை என்னவென்பேன்!
    பழுதிலாப் பாங்குடன் பதிவர் பலருக்கும்!
    விழுதும் உரமான வேருமாகித் தருகிறீர்
    பொழுதெலாம் புகழ்ந்தாலும் போதாதே உம்பண்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி தந்த இனிய கருத்தை
      உளமதில் கொண்டேன் உவந்து!

      Supprimer
  4. அத்தனை கவிகளும் வலைப்பதிவர்களுக்கு சொத்தாக இருக்கும்!

    அருமை! அருமை!!

    உங்கள் கருத்துக் கவிதை பெறுவதற்கேனும்
    நான் என் வலைப்பூவினை சரிசெய்து
    வெளியிடலாமோ என்று யோசிக்கின்றேன் கவிஞரே!.

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்வலையைப் பூங்கொடி மீண்டும் திறந்திங்கு
      என்றமிழை ஏற்பீா் இனித்து

      Supprimer
  5. இனிய நற் கருத்தாலே இதயம் தொட்டு
    இழுத்தனன் பார் கவிஞனிவன் பதியம் போட்டு
    முடியுமா சொல் மனதை மாற்றிப் பின் முதுகைக் காட்ட
    முற்றிலும் ஓர் இன்பக் கவிதை தன் ஒளியையூட்ட !!!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இதயம் திறந்தே இயம்பிய பாடல்
      பதியும் மனத்துள் பதிந்து!

      Supprimer

  6. விருத்தக் கவிஞனின் வெல்லுதமிழ் கற்றுப்
    பெருத்த கவித்திறனைப் பெற்றீா்! - கருத்தைக்
    குழைத்துக் கொடுத்த குளிர்தமிழ்ப் பாட்டில்
    தழைத்து மணக்கும் தமிழ்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கம்பனைக் கற்றால் கவிதை கரைபுரண்டு
      நம்முள் பெருக்கெடுக்கும் நற்றேனாய்! - எம்முடைய
      மின்வலையை நாளும் விரும்பும் தமிழ்ச்செல்வா
      இன்னிலையைத் தந்தாய் எனக்கு!

      Supprimer
  7. அருமை அருமை...!
    அத்தனையும் அருமை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத கவிதைகள். உண்மையில் நான் பாக்கியசாலி தான். இல்லையேல் இதை அறியாமல் இருந்திருப்பேன்.
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer