jeudi 4 février 2016

அருட்பெருஞ்சோதி


அருட்பெருஞ்சோதி

அருட்பெருஞ் சோதி! அருட்பெருஞ் சோதி!
அருட்பெருஞ் சோதியடி! - நம்
இருட்பெரும் நெஞ்சின் மருளை அகற்ற
எழுதிய நீதியடி!

தனிப்பெரும் நுாலினைத் தந்த கருணையைத்
தங்கமே பாடிடுக! - நாம்
இனிப்புறும் வண்ணம் எழுதிய பாக்களை
என்றுமே சூடிடுக!

அன்பே இறைவன் அமுத நெறியினை
அள்ளி அளித்தவராம்! - நல்
இன்பே தமிழாம் எனக்கவி ஆற்றில்
இறங்கிக் குளித்தவராம்!

ஆடும் பயிர்கொடி வாடும் நிலையினால்
அல்லல் அடைந்தவராம்! - இந்
நாடு மடமையை நண்ணிட நன்மனம்  
நாளும் உடைந்தவராம்!

எல்லா உயிருள் இறைவன் இருப்பதை
எண்ணி மகிழ்ந்தவராம்! - இங்குக்
கொல்லா நெறியினைக் கோல அருளினைக்
கொண்டு திகழ்ந்தவராம்!

பசிப்பிணி போக்கியே பாழிடர் நீக்கியே
பக்தியை ஊட்டியவர்! - நற்
பசுதரும் பாலெனப் பண்பொளிர் பாதையைப்
பாருக்குக் காட்டியவர்!

கண்மூடிச் செய்கைகள் மண்மூடிப் போகிடப்
பண்..பாடித் தந்தவராம்! - இங்கு
எண்கோடி ஆண்டுகள் இப்புவி செய்..தவம்
தென்திசை வந்தவராம்!

சாதி சமயத்தைச் சாத்திரக் குப்பையை
மோதி மிதித்தாரே! - மண்ணில்
நீதி நிலைத்திடத் சோதி அளித்திட
நேயர் உதித்தாரே!

சந்தக் கவிகளைத் தந்த அடிகளைச்
சிந்தை பதித்திடுவோம்! - மீண்டும்
வந்து பிறவா வழியுற வள்ளலை
மண்டி துதித்திடுவோம்!

ஏழு திரைகளை இட்டவர் காட்டிய
இன்னிலை கண்டிடுவோம்! - அங்கு
ஆழும் அழகினை ஆய்ந்து தெளிந்திட
ஆரமு துண்டிடுவோம்!

வெள்ளை உடையினில் விந்தை புரிந்தவர்!
வேண்டித் தொழுகின்றேன்! - மனப்
பிள்ளை இழிவுறும் கொள்ளைப் பிழைகளில்
பின்னி அழுகின்றேன்!

ஆசை பெருக்கினில் ஆடிய ஆட்டங்கள்
ஆயிரம் ஆயிரமே! - ஓம்
ஓசை உளத்தினில் ஒன்றிக் கமழ்ந்திட
ஊழ்வினை போய்விடுமே!

சன்மார்க்கம் கண்டு சமத்துவம் கொண்டு
தரணியை வாழ்வித்தார்! - கொடும்
துன்மார்க்கம் போக்கியே பொன்மார்க்கம் போற்றியே
தொண்டினைச் சூழ்வித்தார்!

தனித்திரு என்றார்! பசித்திரு என்றார்!
விழித்திரு என்றாரே! - வாழ்வு
இனித்திட வைத்தே எனதுயிர்க் கூட்டுக்குள்
என்றுமே நின்றாரே!

30.01.2016

vendredi 15 janvier 2016

தைம்மகள் குறட்பத்து!




தைம்மகள் குறட்பத்து!

1.
தங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
பொங்கல் மணக்கப் பொலிந்து!

2.
சங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
எங்கும் இனிமை இசைத்து!

3.
தழைத்தோங்கும் இன்பத்தைத் தைம்மகளே தாராய்!
விழித்தோங்கும் மெய்ம்மை விளைத்து!

4.
சாதிமதத் தீதகற்றித் தைம்மகளே! சன்மார்க்க
சோதி அளிப்பாய் தொடர்ந்து!

4.
தலைமை தலைமையெனத் தைம்மகளே சில்லோர்
உலகைக் சுருட்டுகிறார்! ஓட்டு!

5.
தாரணிக்கு அன்பூட்டித் தைம்மகளே! மாண்பொளிரும்
சீரணிக்குள் வாழ்வைச் செலுத்து!

6.
தாராய் நலமெல்லாம் தைம்மகளே! சால்பொளிரும்
கூரறிவை நன்றே குவித்து!

7.
தன்னே ரிலாவுழவன் தைம்மகளே இன்பமுற
இன்னே வழிகள் இயற்று!

8.
தமிழர் விழைகின்ற தைம்மகளே! பொங்கல்
அமுத விருந்தை அளி!

9.
தமிழரின் புத்தாண்டே! தைம்மகளே! என்றும்
கமழ்வாய் மனத்துள் கலந்து!

10.
தண்டமிழ் வாழியவே! தைம்மகளே வாழியவே!
தொண்டுளம் வாழியவே சூழ்ந்து!

15.01.2016

vendredi 1 janvier 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!



புத்தாண்டே வா..வா பொலிந்து!

எங்கும் இனிமை இசைந்தாட! கற்றோங்கிப்
பொங்கும் புலமை பொலிந்தாட! - தங்குநலம்
பூத்துக் கமழ்ந்தாடப் புண்ணியனே! புத்தாண்டைக்
காத்துப் படைப்பாய் கணித்து!

ஒற்றுமை ஓங்கிடவும் இவ்வுலகே ஓரினமாம்
பற்றினை உற்றன்பு பாடிடவும் - நற்குறளைக்
கற்றுக் களித்திடவும் கண்ணனே! புத்தாண்டைப்
முற்றும் மகிழ்வுற மூட்டு! 

01.01.2015