mardi 5 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 21]




காதல் ஆயிரம் [பகுதி - 21]

201.
மீட்டுதடி பொன்வீணை! மின்னுதடி உன்பருவம்!
கூட்டுதடி காதல் கொதிப்பினையே – வாட்டமுறத்
தீட்டுதடி ஆசைகளைத் தேவியே! கார்காலம்
மூட்டுதடி மோகம் முனைந்து!

202.
கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச் சீா்போல்
தொடைதொடுத்துப் பாடும் சுவைபோல் - கடைக்கண்
படைதொடுத்து வெல்லும்பூம் பாவையுனை நல்ல
நடைதொடுத்துப் பாடுவேன் நான்!

203.
பூத்துக் குலுங்கும் பொழில்களிலே உன்னுருவைப்
பார்த்துக் மகிழும்நற் பாவலன்நான்! – சேர்த்துயிர்
வேர்த்துக் ஒழுகும்! விரைந்தெனக்கு இன்னமுதை
வார்த்து வழங்கும் வடிவு!

204.
வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட!
அசைந்து மலராட! அன்பால் - இசைந்து
மதுவூற! உண்டு மனமாட! வேறே
எதுகூற வேண்டும் இனி?

205.
ஓராயி ரம்பாட்டில் உன்னழகை நான்பாடச்
சீராயி ரம்தருவாள் செந்தமிழாள்! - கூரறிவால்
பார்..ஆயி ரம்முறை! பைங்கொடியே! காதலின்
பேராயி ரம்சொல்லும்! பேணு!

206.
சீருலாப் போகும் பொழுது! சிரித்தாடி
யாரிலா நேரம் எதிர்ப்பார்த்துச் – சேர்ந்துளம்
பார்..உலாப் பைந்தமிழைப் பாடிப் பறந்தனமே
காருலா வானில் களித்து!

207.
கூடை சுமந்து, குழலில் மலர்முடித்து
ஆடை நெகிழ்ந்தே, அழகொளிர - வாடிடச்
சாடை புரிந்தென்னைத் தாக்கும் தளிர்க்கொடியே!
கோடை தணியும் குளிர்ந்து!

208.
மார்கழிப் பூக்கள் மலர்ந்தாடும்! என்னுடைய
ஊர்வழி எங்கும் ஒளிகோலம்! - தேர்வரும்
சீர்வழிப் பாதையில் சின்னவள் செல்கிறாள்!
கூர்விழித் தாக்கம் கொடுத்து!

209.
பனியின் விடியல்! பளிச்சிடும் புற்கள்!
கனியின் சுவைகொடுக்கும் காலை! - இனியாள்
அணியின் அழகில் அடியேன் உருகத்
தணியும் மனத்தின் தவிப்பு!

210.
கண்ணுள் இருந்தே கவிதை படிக்கின்றாய்!
இன்னூல் இயம்பி இனிக்கின்றாய்! - பெண்ணணங்கே!
பொன்னூல் பொலிவே! புதையலே! உன்னழகு
என்னுள் இயங்கும் இணைந்து!

(தொடரும்)

dimanche 3 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 20]





காதல் ஆயிரம் [பகுதி - 20]

191.
கொட்டுதடி நம்மிளமை கும்மி! குளிர்ந்தாடி
எட்டுதடி நம்மிளமை இன்னுலகை! – நுட்பமுடன்
கற்குதடி நம்மிளமை! காமனெழில் கோட்டையைப்
பற்றுதடி நம்மிளமைப் பாட்டு!

192.
பாவை விளக்கே! தமிழ்த்தாய் நடைபயிலும்
நாவை உடையவளே! நற்றேனே! – தேவையடி
கோவை இதழ்கொடுக்கும் முத்தம்! கவியெழுதச்
சேவை புரியும் சிறந்து!
       
193.
பித்தம் தெளிந்ததடி! சித்தம் செழித்ததடி!
நித்தம் நெகிழ்ந்ததடி! வெண்ணிலவே! – முத்தமிடும்
சத்தம் ஒளிக்குதடி! தந்ததன போடுதடி!
மொத்தம் மயங்குதடி மூச்சு!

194.
முத்த மழைபொழிந்து மோகப் பயிர்வளர்ந்து
அத்தை மகளே! அருஞ்சுவையே! – புத்தமுத
முத்தைச் சுவைத்து முடிமுதல் கீழ்வரையில்
வித்தை புரிவோம் வியந்து!

195.
ஒவ்வொரு முத்தமும் செவ்விதழ் தேன்கொடுக்கும்!
கவ்விடும் கண்கள் கவிபடைக்கும்! - தவ்விடும்
தாவிடும் நெஞ்சம் தமிழிசைக்கும்! பூந்தாது
தூவிடும் காமன் துணை!

196.
காதல் திருக்கோயில்! கன்னல் வழிபாடு!
மோதல் விழிகளின் போர்நிறுத்தம்! - ஓதும்நல்
வேதம் தரும்இன்பம்! விண்ணமுதம்! முத்தங்கள்
ஊதல் தரும்மிசை ஊற்று!

197.
அத்தை மகளே! அருந்தமிழே! வெண்பஞ்சு
மெத்தை நிகர்த்தஎழில் மேனியடி! – செத்தைக்
குடில்அமைத்துச் கூட்டாஞ் சோறாக்கி! சொர்க்கப்
படியமைப்போம் இன்பம் பகிர்ந்து!

198.
வாடும் பொழுதெலாம் வஞ்சியே உன்னினைவு
சூடும் இனிமையை! நற்றுணிவை! – நாடும்!என்
வீடும் புகழ்ந்திடப் பாடும் இளையவளே!
ஈடும் உனக்குளதோ இங்கு!

199.
ஈருயிர் சேர்ந்திட! இன்பம் சுரந்திட!
சீருயிர் தோற்றம் சிறப்பெய்த! – ஆருயிரே!
பேருயிர் என்றேநாம் பெற்றிடும் முத்தங்கள்
தேருயிர் ஏறும் திரண்டு!

200.
ஒருமுத்தம் நல்கும்ஓ ராயிரம் பாக்கள்!;
திருமுத்தம் நல்கும்செந் தேனை! – தருஞ்சீர்
அரும்முத்தம் நல்கும் அமுதக் கடலை!
பெரும்முத்தம் நல்கும் பிறப்பு!
                                                                                                                             
(தொடரும்)

காதல் ஆயிரம் [பகுதி - 19]





காதல் ஆயிரம் [பகுதி - 19]


81. 
முகம்கண்டேன்! முல்லை மலர்கண்டேன்! மின்னும் 
அகங்கண்டேன்! இன்னறம் கண்டேன்! – பகையாம்  
நகங்கண்டேன்! வற்றா நலங்கண்டேன்! காதல் 
சுகங்கண்டேன்! என்னவளைச் சூழ்ந்து! 


182.
தனந்தவழும் முத்துச் சரங்கண்டேன்! என்றன்
மனந்தவழும் பொன்னிதழுங் கண்டேன்! – மணஞ்சேர்
இனந்தவழும் இன்பத் தமிழ்கண்டேன்! பூத்த
வனந்தவழும் மங்கை வடிவு!

183.
வண்ண மதிகண்டேன்! சொன்ன மொழியிலே
கன்னல் நதிகண்டேன்! கண்மணியே – அன்னநடை
மின்னல் இடைகண்டேன்! என்னவளை யான்பெறவே
என்ன தவம்செய்தேன் இங்கு!

184.
பூங்குயில் கண்டேன்! புதுமை எழிற்கண்டேன்!
மாங்குயில் கண்டேன்! மனம்மகிழ்ந்தேன்! - நீங்கிடா
வேங்குழல் கண்டேன்! விருந்து நலங்கண்டேன்!
ஏங்குயிர் கொண்டேன் இனித்து!

185.
வண்டும் மலரும் இணைந்து பிறந்ததைக்
கண்டு வியக்கும் கவிமனம்! - தொண்டனாய்
நின்று நெடியவனைக் கண்டு நெகிழ்வதுபோல்
என்றும் இனிப்பாள் இவள்!

186.
எண்ணும் எழுத்தும் இருவிழிகள் என்றவளே!
உண்ணும் உணவாய் உயா்தமிழைக் - கொண்டவளே! 
கண்ணும் கொடுக்கும் கவிகோடி! உன்வரவால்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

187.
எத்தனை வண்ணங்கள் என்னவள் பார்வையில்!
சித்தனைக் கூடக் சிலிர்ப்பேற்றும்! - முத்தாக
மின்னுகின்ற பல்லழகும் மீட்டும் இசையாகப்
பின்னுகின்ற சொல்லழகும் பீடு!

188.
வெண்பா முடிவழகு! என்பா வடிவழகு!
நன்..பா விருத்த நடையழகு! - பொன்பாவாம்
ஒண்பா குறளழகு! உன்பாச் சுவையழகு!
கண்..பார் பெருகும் கவி!

189.
சிந்திய முத்தங்கள் சிந்தனை மன்றத்தில.
குந்தி யிருந்து கூத்திசைக்கும் - செந்தமிழே!
முந்தி யிருந்து முகம்காட்டி, ஆசைகளைப்
பந்தி படைத்தாய் பசித்து

190.
ஒத்தையடிப் பாதை! ஒளிரும் மலர்ப்பந்தல்!
மெத்தையடி மென்தழைகள்! சிட்டுகளின் - வித்தையடி!
கொஞ்சுதடி பூங்குயில்கள்! கூடுதடி நம்மிதழ்கள்!
விஞ்சுதடி முத்தங்கள் வென்று!
                                                                                                                               
(தொடரும்)

samedi 2 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 18]




காதல் ஆயிரம் [பகுதி - 18]

171.
தேரோடும் வீதியிலே தேவியுனைக் கண்டமுதல்
போராடும் என்னுயிர் போதையிலே! - நீரோடும்
ஏரோடும் என்னுள்ளே தேனோடும்! நெஞ்சத்தை
வேரோடு கவ்வும் விழி!

172.
முத்தொளிரும் பல்லாக்கு முன்வரும்! நற்காதல்
பித்தொளிரும் பல்லாக்குப் பின்வரும்! - முத்தமிழே!
கற்றொளிரும் காரிகையே! எப்பிறப்பும் உன்மேலே
பற்றொளிரும் நன்றே படர்ந்து!

173.
பாதை மணக்கும்!கைப் பட்ட இடம்செழிக்கும்!
போதை கொடுக்கும்! புலமைதரும்! – கோதையவள்
கீதை எனக்கு! கிடைத்தற் கரியவள்!
சீதை நிகர்த்த சிறப்பு!

174.
நடந்தால் நடனம்! நறுமலர்த் தோப்பில்
கிடந்தால் சிலையொளிர் கீர்த்தி! – கொடிபோல்
படர்ந்தால் தமிழ்ப்பாக்கள்! பாவையவள் கைபிடித்துத்
தொடர்ந்தால் சுரக்கும் சுகம்!

175.
புலியாட்டம் போட்டுப் புகழ்ஈட்டும் வீரன்
எலியாட்டம் போடல் இனிதா? – கிளியே!
மயிலாட்டம் கண்டு மனதாட்டம் காணும்!
குயிற்றோட்டம் நம்மனக் கூடு!

176.
நொண்டி விளையாட்டில் நோக்கம் செலுத்தாமல்
சண்டி புரியும் சதியென்ன? – கன்னியே!
உண்டி சுருங்க உயர்மார்(பு) அழகினிலே
ஒன்றிக் கிடக்கும் உயிர்!

176.
மலரோடு சேர்த்தென் மனங்கட்டும் பெண்ணே!
வளமோடு வாழ வழிசெய்! – நிலவே
நிலமோடு சேரும் நெகிழ்யொளி போல
உளமோடு சேரும் உறவு!

177.
முன்னே நடைநடந்து பின்னே கணைதொடுக்கும்
என்னே எழிற்பெருக்கு! ஏங்குகிறேன்! - இன்மழைசேர்
விண்ணே! மதன்நூல் விரிவுரையே! அன்பமுதக்
கண்ணே! கருணையைக் காட்டு!

178.
ஓர விழிப்பார்வை ஓதும்! சுகவுணர்வு
ஆர இறங்க அமுதூறும்! - ஈரவிழி
ஏற இறங்கக்கூர் மூக்கிசைக்கும்! வாய்பார்க்கும்!
மாறன் கலையை மகிழ்ந்து!

179.
செவியில் செழுந்தமிழைச் செப்புகின்ற உன்றன்
கவியில் கரைந்தான் கவிஞன்! - குவிந்த
மணியாடும் காதழகில் என்மனம் ஆடும்
அணியாடும் மார்பழகில் ஆழ்ந்து!

180.
கொதித்த மனத்தைக் குளிரூட்டும் வண்ணம்
பதித்த கனிமுத்தப் பாவாய்! - உதித்த
மதியென மின்னும் மலர்முகம் கண்டால்
கதியென மின்னும் கவி! 


(தொடரும்)

vendredi 1 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 17]





காதல் ஆயிரம் [பகுதி - 17]

161.
ஈக்கள் பலவும் எழில்மலர் என்றெண்ணும்!
பூக்கள் பலவும் மனம்புழுங்கும்! – ஆக்கிடும்
பாக்கள் பலவும் படைத்த பயன்மேவும்!
ஏக்கம் பெருக்கும் எழில்

162.
என்னுள் இருக்கிறாய்! உன்னுள் இருக்கிறேன்!
இன்னும் எனையேன் வெறுக்கிறாய்! - கண்களால்
இன்னூல் மொழிகிறாய்! பொன்னூல் புனைகிறேன்!
மண்ணில் மணக்கும்நம் வாழ்வு!

163.
இறவா திருக்க இளைப்பார்! உலகில்
பிறவா திருக்கப் பிடிப்பார்! – மறையே
மறவா திருக்க மதி..தா. அவளின்
உறவோ டிருக்க உதவு!

164.
குறையாத செல்வம் கொடுவென்று கேட்பார்
மறையோதும் மாந்தர் மகிழ்ந்தே! – இறைவா!
நிறைவாக என்னவளை நெஞ்சுள் நிறுத்தி  
உறவாட வைப்பாய் உவந்து!

165.
ஒருபாகம் ஆளும் உமையாள்! மனமாம்
அரும்பாகம் ஆளும் மலராள்! – பெருமை
தரும்பாகம் ஆளும் தளிர்கொடியே! நீ..என்
பெரும்பாகம் ஆளும் பிறப்பு!

166.
காதி நிறத்துள்ளம்! கன்னல் மொழிவெல்லும்!
மோதிக் கயல்துள்ளும்! முத்தொளிரும்! - தூதெனச்
சோதி கவிதைகள் சொல்லும்!உன் பேரழகு
போதி மரமெனப் பூத்து!

167.
சாதி சமயங்கள் சாற்றும் தடைகளை
மோதி மிதித்து முறித்திடுவோம்! – நீதியொளிர்
ஆதித் தமிழ்நெறியில் ஆழ்ந்திடுவோம்! வாழ்வினில்
பாதி.நீ! பாதி...நான்! பாடு!

168.
பந்தாடும் வேளையிலே என்னுயிரைப் பந்தாடிச்
சிந்தாடும் சின்னவளே! சிந்தையை - உந்தியே
தந்தாடும் ஆசைகளைக் கொண்டாடத் தேன்குடமே!
வந்தாடு பக்கம் மகிழ்ந்து!

169.
மலராடும் சோலையில் மஞ்சள் வெயிலில்
நிலவாடும் வண்ண நினைவில் - நிலைமை 
தளராத மார்பில் தலைசாய்ந்து கண்ணே!
உளமார உண்பேன் உனை!

170.
பின்னிய மல்லிகை பேசுதே என்னிடம்!
மின்னிய மெல்லிடை மீட்டுதே! – கண்விசை
பன்னிய கூத்துக்கள் பற்றிப் படருதே!
புண்ணிய காதல் புனைந்து!


(தொடரும்)