samedi 21 mars 2026

விருத்த மேடை - 101

 


விருத்த மேடை  - 101

 

கட்டளை அறுசீர் விருத்தம்

[நேர் : 19 எழுத்து, நிரை : 20 எழுத்து]

 

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

……. சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலகையொள் வாள்தண்டு

…… கொண்டுபுள் ளூர்ந்துலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

…… மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற

…… நானோர் குறைவிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

…… கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

…… ஒளிமணி வண்ணன்கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

…… அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

…… யானொரு முட்டிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

இல்லம் இனிக்க இளமை செழிக்க

…… இளையவள் வந்திடுவாள்!

வெல்லம் இனிக்க விருந்து மணக்க

…… வியன்கவி தந்திடுவாள்!

உள்ளம் இனிக்க உறவு கொழிக்க

…… உயர்மனை காத்திடுவாள்!

செல்லம் அவளின் சிறப்பை யுரைக்கச்

…… செகத்தினில் சொல்லிலையே!

 
[பாட்டரசர்] 20.03.2026

 

ஓரடியில் ஐந்து சீர்களைப் பெற்றுவரும் கட்டளைக் கலித்துறை இலக்கணத்தை ஒத்து, ஓரடியில் ஆறு சீர்களைப் பெற்றுவரும் கட்டளை அறுசீர் விருத்தம் இது. நேரசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 19 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 20 எழுத்துக்களையும் பெறும்.  ஒவ்வோர் அடியும் வெண்டளை பெறும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. அடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 6 ஆம் சீர் இடத்தில் மாங்கனியும், மாந்தண்பூ ஆகிய சீர்கள் அருகி வரும். மேலே இரண்டாம் விருத்தத்தில் தேமாந்தண்பூ  [வண்ணன்கண்ணன்] வந்துள்ளதைக் காண்க.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

20.03.2026

dimanche 15 mars 2026

விருத்த மேடை 100

 


விருத்த மேடை  - 100

 

அறுசீர் விருத்தம்

 

கட்டளை விருத்தம்

 

மற்றிருந் தீர்கட் கறியலாகா

………..மாதவன் என்பதோர் அன்புதன்னை

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்

………..ஊமைய ரோடு செவிடர்வார்த்தை

பெற்றிருந் தாளை ஒழியவேபோய்ப்

………..பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி

மற்பொருந் தாமல் களமடைந்த

………..மதுரைப் புறத்தென்னை உய்திடுமின்

 

[ஆண்டாள், நாச்சியார் திருமொழி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 617]

 

கலைமகள் தாயே! கவிக்கடலே!

………..கடையன் எனக்கும் அருள்தருவாய்!

தலைமகள் ஆன தமிழணங்கின்

………..தாள்கள் அளிக்கும் பொருள்தருவாய்!

அலைமகள் ஆகத் தொடர்ந்துவரும்

………..ஆக்கஞ் சிறக்கத் துணைபுரிவாய்!

மலைமகள் வன்மை மனமடைய

………..மலர்கள் துாவி யுனைத்தொழுதேன்!

 

[பாட்டரசர்] 13.03.2026

 

எழுத்தெண்ணிக்கை ஒன்றி வரும் பாடலைக் கட்டளைப் பெயரிட்டுச் சொல்லப்படும். மேலுள்ள அறுசீர் விருத்தத்தில் நிரையில் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்கள் வரும். நேரில் தொடங்கும் அரையடியில் 10 எழுத்துக்கள் வரும். ஒவ்வோர் அரையடியும் வெண்டளை பெறும். அரையடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் இரு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 3 ஆம் சீரிலும், 6 ஆம் சீரிலும் மாந்தண்பூ ஆகிய நாலசைச் சீர்கள் அருகி வரும்.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் நான்காம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

14.03.2026

mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026

jeudi 1 janvier 2026

புத்தாண்டு வாழ்த்து 2025

 


உலக உயிர்கள் உவப்புற

ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து

 

அன்பு நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க

இன்பக் கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை

தாங்கிய தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை

ஆங்கில ஆண்டே அருள்!

 

ஒற்றுமை யோங்க உலக உறவோங்க

நற்றுணை நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்

தந்துள மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை

வந்துள ஆண்டே வழங்கு!

 

விண்ணக ஞானம் விளைந்தோங்க, வள்ளலென

வண்ணக மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்

பண்ணகப் பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்

மண்ணக ஆண்டே மகிழ்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

01.01.2026