lundi 21 novembre 2022

கலிவிருத்தம் - 16


 

விருத்த மேடை - 80

 

கலிவிருத்தம் - 16

 

நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் 

 

பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதன்

ஆர்த்தா யாடர வோடன லாடிய

கூத்தா நின்குரை யார்கழ லேயல

தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே!

 

[திருநாவுக்கரசர், தேவாரம் - 6178]

 

பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை

முனியாய் நீயுல கம்முழு தாளினும்

தனியாய் நீசரண் நீசல மேபெரி

தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே

 

[திருநாவுக்கரசர், தேவாரம் - 6176]

 

மானே வாராய்

 

1.

மானே உன்விழி மன்னனை வாட்டுதே!

தேனே உன்மொழி செந்தமிழ் ஊட்டுதே!

வானே உன்னெழில் வன்வெறி மூட்டுதே!

கானே உன்மணம் காதலைக் கூட்டுதே!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

விருத்த மேடை கலிவிருத்தம் 1 இல் முதல் சீர், குறிலீற்றுமா வாகும். இதில் முதல் சீர் நெடிலீற்றுமா வாகும்.

நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022

samedi 12 novembre 2022

கலிவிருத்தம் - 15


 

விருத்த மேடை - 79

 

கலிவிருத்தம் - 15

 

மா + மா அல்லது விளம் + மா அல்லது விளம் + காய்

 

கண்ணர் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்றன்

திண்ணா கம்பிளக் கச்சரஞ் செலவுய்த்தாய்

விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே! - 1

 

இலங்கைப் பதிக்கன் றிறையா ய,அரக்கர்

குலங்கெட் டவர்மா ளக்கொடிப் புள்திரித்தாய்!

விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய

அலங்கல் துளப முடியாய் அருளாயே! - 2

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி]

 

பெண்ணே ஏன் பிரிந்தாய்?

 

மின்னும் விழிகள் மீனிடம் சரணாகும்!

பின்னும் கார்குழல் பெயர்ந்து முகின்மேவும்!

அன்னம் இடத்தில் அடிகள் உறவேற்கும்!

என்றன் இதயம் எங்குறும் ஏந்திழையே!

 

[பாட்டரசர்] 23.06.2022

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இந்தக் கலிவிருத்தம் நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு 12 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 13 எழுத்துகளும் பெறும்.

 

அடியின் முதல் மாச்சீர் வரவேண்டும். தேமா இரண்டு எழுத்துகளைப் பெறும். புளிமா 3 எழுத்துகளைப் பெறும்.

 

இரண்டாம் சீர் மூன்று எழுத்துகளையும், மூன்றாம் சீர் மூன்று எழுத்துகளையும் பெற்றுவரும். அவ்விடங்களில் புளிமா அல்லது கூவிளம் அல்லது தோமாங்காய் வரும்.

 

நான்காம் சீர் 4 எழுத்துகளைப் பெற்றுவரும். இவ்விடத்தில் புளிமாங்காய் அல்லது கூவிளங்காய் வரும்.

 

இவ்வகையில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
12.11.2022

lundi 7 novembre 2022

கலிவிருத்தம் - 14


 

விருத்த மேடை - 78

 

கலிவிருத்தம் - 14

மா + மா + மா + விளம்    

 

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்

திருவார் செம்பொன் பள்ளி மேவிய

கருவார் கண்டத் தீசன் கழல்களை

மருவா தவர்மேல் மன்னும் பாவமே!

 

[திருஞான சம்பந்தர் தேவாரம் - 261]

 

ஞானவொளி!

 

நெற்றி நடுவில் உற்ற பேரொளி

முற்றிக் கிடக்கும் மோகம் நீக்குமே!  
பற்றிப் படரும் பரமன் திருவருள்

வெற்றி யுலகை மேவிக் காக்குமே!   

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மா + மா + மா + விளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
07.11.2022

.

mardi 1 novembre 2022

என்னவள்

 


என்னவள்

 

கண்ணுள் இருக்கின்றாள் - மீட்டும்

பண்ணுள் இனிக்கின்றாள்!

விண்ணில் பிறந்தவளோ? - இந்த

மண்ணில் சிறந்தவளோ?

 

வஞ்சி பாடுகிறாள் - கனவில்

கொஞ்சி யாடுகிறாள்!

பஞ்சின் இனத்தவளோ? - இளம்

பிஞ்சின் மனத்தவளோ?

 

எண்ணங் கூட்டுகிறாள் - சுக

வண்ணங் காட்டுகிறாள்!

தண்ணந் தருங்கடலோ? - தேன்

கிண்ணம் இவள்உடலோ?

 

நாவில் களிக்கின்றாள் - தமிழ்ப்

பாவில் குளிக்கின்றாள்!

பூவில் வளர்ந்தவளோ? - என்

ஆவி கலந்தவளோ?

 

கொல்லை உழுகின்றாள் - காதல்

எல்லை தொழுகின்றாள்!

முல்லைக் கொடியவளோ - எனைக்

கொள்ளை யடித்தவளோ?

 

சிந்தை ஒளிர்கின்றாள் - பல  

விந்தை புரிகின்றாள்!

முந்து நலத்தவளோ - பாடும்

சிந்து வளத்தவளோ?

 

நெஞ்சம் படருகிறாள் - மலர்

மஞ்சம் தொடருகிறாள்!

கெஞ்சி மயக்குவதேன் - எழில்

விஞ்சி இயக்குவதேன்?

 

நாற்று நடுகின்றாள் - மடை

மாற்றி விடுகின்றாள்!

காற்றின் திருமகளோ - தண்

ணாற்றின் ஒருமகளோ?

 

எங்கும் அவள்..முகமே - சுவை

பொங்கும் அவள்..அகமே!

தங்கத் தேரவளோ - தமிழ்ச்

சங்கச் சீரவளோ?

 

துள்ளிக் குதித்திடுவாள் - மார்பில்
அள்ளிப் பதித்திடுவாள்!

பள்ளி தொடுத்திடுவாள் - என்னைத்  

தள்ளித் தடுத்திடுவாள்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.11.2022