mardi 1 novembre 2022

என்னவள்

 


என்னவள்

 

கண்ணுள் இருக்கின்றாள் - மீட்டும்

பண்ணுள் இனிக்கின்றாள்!

விண்ணில் பிறந்தவளோ? - இந்த

மண்ணில் சிறந்தவளோ?

 

வஞ்சி பாடுகிறாள் - கனவில்

கொஞ்சி யாடுகிறாள்!

பஞ்சின் இனத்தவளோ? - இளம்

பிஞ்சின் மனத்தவளோ?

 

எண்ணங் கூட்டுகிறாள் - சுக

வண்ணங் காட்டுகிறாள்!

தண்ணந் தருங்கடலோ? - தேன்

கிண்ணம் இவள்உடலோ?

 

நாவில் களிக்கின்றாள் - தமிழ்ப்

பாவில் குளிக்கின்றாள்!

பூவில் வளர்ந்தவளோ? - என்

ஆவி கலந்தவளோ?

 

கொல்லை உழுகின்றாள் - காதல்

எல்லை தொழுகின்றாள்!

முல்லைக் கொடியவளோ - எனைக்

கொள்ளை யடித்தவளோ?

 

சிந்தை ஒளிர்கின்றாள் - பல  

விந்தை புரிகின்றாள்!

முந்து நலத்தவளோ - பாடும்

சிந்து வளத்தவளோ?

 

நெஞ்சம் படருகிறாள் - மலர்

மஞ்சம் தொடருகிறாள்!

கெஞ்சி மயக்குவதேன் - எழில்

விஞ்சி இயக்குவதேன்?

 

நாற்று நடுகின்றாள் - மடை

மாற்றி விடுகின்றாள்!

காற்றின் திருமகளோ - தண்

ணாற்றின் ஒருமகளோ?

 

எங்கும் அவள்..முகமே - சுவை

பொங்கும் அவள்..அகமே!

தங்கத் தேரவளோ - தமிழ்ச்

சங்கச் சீரவளோ?

 

துள்ளிக் குதித்திடுவாள் - மார்பில்
அள்ளிப் பதித்திடுவாள்!

பள்ளி தொடுத்திடுவாள் - என்னைத்  

தள்ளித் தடுத்திடுவாள்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.11.2022

 

  

 

Aucun commentaire:

Enregistrer un commentaire