mercredi 31 mars 2021

வழிநடைச்சிந்து

 வழிநடைச்சிந்து

 

ஆண்

 

கைத்தறிச் சேலைகட்டி வாடி - கண்ணே

கார்குழலில் வாசமலா்க் கட்டுப்பல சூடி!

பைத்தியம் ஆக்குமாசை கூடி - உன்றன்

பார்வையினால் பாடுகவே பாடல்பல கோடி

 

பெண்

 

கம்பனை விஞ்சுகின்ற கண்ணா - உன்றன்

காதல்மொழி கேட்டுக்கரை யாதவளும் பெண்ணா

நம்..பனைத் தோளுடைய மன்னா - என்றன்

நாடிநரம் புருகிடும் நல்லகவி சொன்னா

 

ஆண்

 

ஏரிகரைப் பாதைவழி செல்ல - அன்பே
என்னுடன் வந்திடுவாய் அன்னமென மெல்ல
வாரியுனை நானணைத்துக் கொள்ள - அங்கே
வண்ணமலர்ச் சோலையுண்டு மன்மதனை வெல்ல

பெண்

 

ஆழ்கிணறு பாயும்வயல் காடு - அங்கே

அல்லிமலர் வண்டுடனே ஆடும்உற வோடு

யாழ்வளைவு மங்கையுட லோடு - கொஞ்சி

ஈந்தஇசை கேட்டிடவே ஏங்கும்உயிர்க் கூடு

 

ஆண்

 

கத்தரிக்காய்க் கொல்லைதனில் அன்று - உன்றன்

கட்டழகில் காளையிவன் கண்மயங்கி நின்று

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் ஒன்று -  உன்றன்

தங்கவுடல் மின்னியதே  தண்ணிலவை வென்று!

பெண்

 

தென்னைமரச் சாலைதனை முந்து - பாடும்

சிந்தைதனில் பொங்கிவரும் சந்தமொலிர் சிந்து!

முன்னேவரும் ஐயன்கோவில் சந்து - மச்சான்

முக்கழகு முட்டுமெனை மோகநிலை தந்து

 

ஆண்

 

வந்தது..பார்  வாழைமரத் தோப்பு - வீசும்

வாடையென வாட்டுதடி வஞ்சியுன்..மா ராப்பு!

தந்தது..பார்  தாழைமனங் காப்பு - நீ..தான்

தாவிவந்து தாளமிடும் தங்கத்தமிழ் யாப்பு


பெண்

 

முட்டுவழிச் சாலையினைத் தாண்டி -  வாழ்வில்
மோதுவினை நீங்கிடவே முன்னவனை வேண்டி

எட்டுவழிச் சந்தையிலே தோண்டி - வாங்கி

ஏற்றிடுவாய் தலைமீதே என்னழகைத் தீண்டி

 

ஆண்

 

முத்துமாரி அம்மன்அரு ளாலே - வண்டு

முத்தமிட்டு மொய்க்குதடி முல்லைமலர் மேலே

பித்துமேறி வாடுமனத் தாலே -  உன்றன்

பின்னழகு தாக்குதடி மின்னலொளி போலே!

பெண்

 

நீர்பாயும் நெல்வயலைப் பாரு - வாய்க்கால்

நீந்திவரும் மீன்மகிழ நீயிடுவாய் சோறு

மார்பாயும் காதலெனும் ஆறு - மச்சான்

மதுபாயும் வண்டமிழை வாய்மணக்கக் கூறு

 

பாட்டரசர் கி பாரதிதாசன், 31.03.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire