dimanche 21 mars 2021

கிளிக்கண்ணி

 

செம்மொழிக் கிளிக்கண்ணி

 

அடி : ஆதி தாளம்

சீர் : மும்மை நடை

 

செந்தமிழ்த் தாய்மொழியைக் - கிளியே

சிந்தையில் நான்பதித்தேன்

சிந்தெழில் பாக்களையே - கிளியே

சீர்பெற நான்வடித்தேன்

 

நற்குறள் பொன்னெறியைக் - கிளியே

நாடிட வாழ்வுயரும்

பற்றுடன் தாய்மொழியைக் - கிளியே

பாடிடப் பேருயரும்

 

தேனகப் பாடல்களைக்  - கிளியே

தேர்ந்திட ஊர்..சிறக்கும்

வானருள் நன்மழையாய்க் - கிளியே

வண்டமிழ்ச் சீர்நிறைக்கும்

 

வன்புறப் பாக்களையே  - கிளியே

வாழ்வுற மாண்பொளிரும்

இன்புறக் கற்பியலைக - கிளியே

ஏந்திட அன்பொளிரும்

 

தார்மண வாசகத்தைக் - கிளியே

தாழ்ந்து பணிந்திடுவேன்

சீர்மணப் புகழ்ஆழ்வார் - கிளியே

செந்தாள் அணிந்திடுவேன்!

 

பெண்ணணிப் பாவலரைக் - கிளியே

பேணிய நன்மொழியாம்

கண்ணணிக் காவியங்கள் - கிளியே

காத்துள செம்மொழியாம்

 

 

நல்லருள் கம்பனையே - கிளியே

நாடிநாம் கற்றிடுவோம்

வெல்லருள் ஆற்றலினைக் - கிளியே

விஞ்சிடப் பெற்றிடுவோம்!

 

வள்ளலார் கோத்தமொழி  - கிளியே

வாழ்வியல் காத்தமொழி

உள்ளெலாம் இன்பமுறக் - கிளியே

ஓதிடப் பூத்தமொழி!

 

பாரதி வந்துலகில் - கிளியே

பல்வகைச் சிந்தளித்தான்

பாரிதில் பைந்தமிழே - கிளியே

பார்..சுவை என்றுரைத்தான்!

 

பண்ணொலிர் பாட்டரசன் - கிளியே

பாடிய அருஞ்சிந்து

மண்ணெணொளிர் வாழ்வணிந்து - கிளியே

வாழ்த்துமே புவிப்பந்து

 

பாட்டடரசர் கி. பாரதிதாசன்

21.03.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire