பாவலர் பயிலரங்கில்
ஐந்நுாறு விருத்தங்கள் பாடிப்
பாவலர் பட்டம் பெற்ற
.
பாவலர் நகுலா சிவநாதன்
பல்லாண்டு வாழ்க!
.
பாடு மரங்கில்
பற்றுடனே
...........பயின்றார்
நகுலா சிவநாதர்!
ஆடு மயிலின்
அழகாக
...........அளித்தார்
விருத்தம் ஐந்நுாறு!
காடு மணக்குங்
கவியெழுதிக்
...........களித்தார்
உள்ளங் குளிர்ந்திடவே!
நாடு போற்றும்
பாவலராய்
...........நன்றே
வாழ்க பல்லாண்டே!
.
ஓடி யோடித்
தமிழ்பேசி
...........உயர்ந்தார்
நகுலா சிவநாதர்
பாடிப் பாடிப்
பயிலரங்கில்
...........பட்டம்
பெற்று மிளிர்கின்றார்!
தேடித் தேடித்
தேனீக்கள்
...........சேர்க்கும்
மதுவாய்க் கவிதந்தார்!
கோடி கோடி சீர்சூடிக்
...........கொழித்து
வாழ்க பல்லாண்டே!
.
அகநுால் புறநுால்
ஆய்வுகளை
...........அளிக்கும்
நகுலா சிவநாதர்
முகநுால் போற்றும்
விருத்தங்கள்
...........முத்தாய்
மொழிந்து பெயருற்றார்!
மிகுநுால் புலமை
பொலிந்திடவே
...........வியன்னுால்
பலவும் படைத்துள்ளார்!
சுகநுால் பாடும்
பாட்டரசன்
...........சொன்னேன்
வாழ்க பல்லாண்டே!
.
சீரார் கல்விச்
சேவையினைச்
...........செய்யு
நகுலா சிவநாதர்
ஊரார் உறவார்
உவந்திடவே
...........ஓதி
யோதி உயர்வுற்றார்!
ஏரார் நிலத்துப்
பசுமையென
...........எழிலார்
சோலை வாசமெனப்
பேரார் பெருமை,
கவித்தலைமை
...........பேணி
வாழ்க பல்லாண்டே!
.
சொல்லும் பொருளும்
உரைக்கின்ற
...........துாய
நகுலா சிவநாதர்
அல்லும் பகலும்
இனமோங்க
...........ஆக்கந்
தீட்டி நலஞ்செய்தார்!
செல்லும் இடங்கள்
சீர்பாடும்!
...........செம்மைத்
தமிழோ தார்சூடும்!
வெல்லுங் கவிதைப்
பாட்டரசன்
...........விளித்தேன்
வாழ்க பல்லாண்டே!
.
பாட்டரசர் கி.
பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம்,
பிரான்சு
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம்,
பிரான்சு
27.06.2023