lundi 13 avril 2020

இருபொருள் அணி வெண்பா


வெண்பா மேடை - 168
  
இருபொருள் அணி வெண்பா
  
ஒரு சொல் இரு பொருள்கள் தரும் வண்ணம் அடைமொழியுடன் அமைவது இருபொருள் அணி வெண்பாவாகும்.
  
வெல்லும் கவியே! விலங்கென்றால் என்னென்பாய்?
கல்லும் நிறைந்த கடிமலை - செல்லா
விலங்காகும்! கொல்லும் வினைமிருகம் செல்லும்
விலங்காகும் என்றே விளம்பு!
  
விலங்கு என்ற சொல்லுக்கு மிருகம் என்றும், மலை என்றும் பொருள் உண்டு. பொதுவாக விலங்கு என்றால் எதைக் குறிக்கிறது என்று சொல்ல முடியாது. அசையும் விலங்கு என்றால் மிருகம் என்று சொல்லலாம். அசையா விலங்கென்றால் மலை என்று கூறிவிடலாம். அசையும் அசையா என்ற அடைமொழிகளைக் கொண்டு அத்தொடர் குறிக்கும் பொருளைத் தெளிவாக அறியலாம். மேலுள்ள வெண்பாவில் செல்லும் விலங்கு மிருகம் என்றும், சொல்லா விலங்கு மலை என்றும் பாடியுள்ளேன். இலக்கிய உலகிற்கு இவ்வகை என்றன் புதிய படைப்பாதகும்.
  
இவ்வாறு அமையும் 'இருபொருள் அணி வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire