dimanche 12 avril 2020

பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 166
  
பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா!
  
பன்னிரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வருவதாகப் பாடுவது பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
ஏழுருபென்? வாழிடமென்? ஏனமர்ந்தாய்? ஏகிடமென்?
கீழும்,பின் னும்,வழியும் சூழ்பெயரென்? - தாழகமென்?
வன்வாயில், பக்கம்,இடம் நன்முடிவு காண்பெயரென்?
கன்னல்மொழி காட்டும் கடை!
  
வெண்பாவில் உள்ள பன்னிரண்டு வினாக்களுக்குக் 'கடை' என்ற ஒரு விடை வந்தது.
  
1. எழனுருபு என்ன? - கடை
2. எங்கு வாழ்கிறாய்? - ஊர் எல்லையில் வாழ்கிறேன்.
3. ஏன் அமர்ந்துவிட்டாய்? - சோர்வாக உள்ளதால் அமர்ந்தேன்.
4. எங்குச் செல்கின்றாய்? - அங்காடி செல்கிறேன்..
5. கீழ் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
6. பின் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
7. வழி என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
8. தாழ்ந்தவனின் பெயர் என்ன? - கடையன்
9. கதவின் வேறு பெயர் என்ன? - கடை
10. பக்கம் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
11. இடம் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
12. முடிவு என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
  
ஏழனுருபு, எல்லை, சோர்வு, அங்காடி, கீழ், பின், வழி, தாழ்ந்தவன், வாயில், பக்கம், இடம், முடிவு எனப் பன்னிரண்டு பெயர்களையும் கடையென்ற சொல் தாங்கிவந்தது.
  
இவ்வாறு பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.04.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire