jeudi 9 mai 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
முத்தமிழும் ஈபெல் கோபுரமும்
  
ஓங்கியே மின்னும்! உலகே வியப்பெய்தும்!
தாங்கியே மின்னும் தகையெழிலை! - வீங்கியே
வான்புகழ் மின்னும்! வளமின்னும்! முப்பகுப்பால்
தான்புகழ் மின்னும்! தனிஈபெல் - தேன்றமிழ்
ஒன்றென மின்னும் உயர்ந்து!
  
முத்தமிழ்
  
உயர்தனிச் செம்மொழியாய் மின்னும். உலகம் தமிழ்மொழியின் தொன்மையைக் கண்டு வியப்படையும். அன்பழகை, அருளழகை, அறிவழகைத் தாங்கியே மின்னும். விரிந்த புகழேந்தி மின்னும். வாழ்க்கை வளங்களை நல்கியே மின்னும். இயல் இசை நாடகமென முத்தமிழாய் மேன்மை மின்னும்.
  
ஈபெல் கோபுரமும் [Tour Eiffel]

நீண்ட உயரத்தைப் பெற்று மின்னும். உலகம் இதைக் கண்டு வியப்படையும். மிக்க அழகேந்தி மின்னும். உயர்ந்த புகழேந்தி மின்னும். பார்வையாளர்களிடம் பொருளீட்டி நாடோங்க மின்னும். முன்று தளங்களைப் பெற்றோங்கிப் பெருமை மின்னும்.
  
எனவே, முத்தமிழும் ஈபெல் கோபுரமும் ஒன்றென மின்னும் உயர்ந்து.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
09.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire