mercredi 22 mai 2019

சிலேடை வெண்பா




சிலேடை வெண்பா
  
வஞ்சிப்பாவும் சோலையும்
  
பூவுறும்! துாங்கலுறும்! பொங்கும் புலமையுறும்!
நாவுறும் நற்கனிகள்! நீழலுறும்! - ஏவுறும்!
காய்தாங்கும்! மாவேலி காணும்! பொழிலுக்குத்
தாய்தாங்கும் வஞ்சி சமம்!
  
வஞ்சிப்பா
  
பூச்சீர்களைப் பெறும். துாங்கலோசையை ஏற்கும். இருசீர்களிலும் முச்சீர்களிலும் அமைவதால் புலமை பெருகும். கனிச்சீர்கள் காக்கும் [வஞ்சி உரிச்சீர் கனியாகும்]. நிழல் சீர்களைக் கொள்ளும். ஏகாரத்தில் நிறைவுறும். காய்ச்சீர்களைத் போற்றும். அடியின் ஈற்றில் மாச்சீர் வருவதில்லை. [மாவுக்கு வேலியிடும்]
  
சோலை
  
பூக்களைப் பூத்தாடும். தொங்குகின்ற விழுதுகளைப் பெற்றிருக்கும். உறங்கி ஓய்வெடுக்க இடமளிக்கும். கவிபாடப் புலமையை வழங்கும். காய் கனிகளைக் கொண்டிருக்கும். குளிர்ந்த நிழலைக் கொடுக்கும். அம்புடன் வேடர்கள் வருவார்கள். நீண்ட வேலியை ஏற்றிருக்கும்.
  
எனவே, பூமித்தாய் தாங்கும் சோலைக்குப் பூந்தமிழ்த்தாய் தாங்கும் வஞ்சிப்பா சமமாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
20.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire