mercredi 1 mai 2019

விருத்த மேடை - 36


விருத்த மேடை - 36
  
அறுசீர் விருத்தம் - 36
[மா + மா + மா + மா + மா + காய்]
  
கிடந்த நம்பி குடந்தை மேவிக்
   கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
   எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை
   உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்
   நமோ..நா ராயணமே!
  
[பெரிய திருமொழி - திருமங்கையாழ்வார்]
  
என்னுயிர்ப் பெண்ணே!
  
பாடும் பெண்ணே! பார்வைக் குள்ளே
   சுற்றும் பம்பரமாய்
ஆடும் பெண்ணே! அகத்துக் குள்ளே
   திகட்டா ஆரமுதாய்
ஓடும் பெண்ணே! உணர்வுக் குள்ளே
   ஓங்கும் உயிர்உரமாய்க்
கூடும் பெண்ணே! குணத்துக் குள்ளே
   நீ..தான் கோபுரமே!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஓரடியில் முதல் ஐந்து சீர்கள் மாச்சீர்களாகவும், ஆறாம் சீர் காய்ச்சீராகவும் வரவேண்டும். இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியிலும் முதல்இரு சீர்கள் சேர்ந்து முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துக்கள் ஒன்றி வரவேண்டும். ஒன்று, மூன்று, ஆறாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
       
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire