lundi 20 mai 2019

சிலேடை வெண்பா




சிலேடை வெண்பா
  
வெண்பாவும் கள்ளும்
  
வெண்மையினால், ஏறுகின்ற மேன்மையினால், கட்டலினால்,
தண்மையினால், போதையினால், சாற்றலினால், - உண்மையினால்
கூடலினால், கூத்தாடிக் குன்றலினால், வெண்பா..கள்
பாடலினால் இங்கிணையாம் பார்!
  
வெண்பா
  
பெயரால் வெண்மையைப் பெற்றது, அன்றுமுதல் இன்றுவரை யாப்புலகில் முதன்மை கொண்டது, தண்டமிழின் வெண்டளையால் பின்னப்படுவது, கற்றோரை மயக்கமுறச் செய்வது, [சாற்றல் - செப்பல்] செப்பலோசையை உடையது, நீதிநெறி நுால்களை உற்றது, தமிழ்க்கூடலில் ஓங்கி ஒலிப்பது, நாடகத்தில் இடம்பெறுவது, ஈற்றடி குன்றுவது, திறனுடைய புலவோர் பாடுவது.
  
கள்ளு
  
வெள்ளைநிறங் கொண்டது. மரமேறி இறக்குவது. பாளையைக் கட்டிச் சுரப்பது. குளிர்ச்சி தருவது. போதை தருவது. மனத்தில் உள்ள உண்மையை மயக்கத்தில் பேசச்செய்யும். குடிக்கக் கூடுவார். குடித்துக் கூத்திடுவார். நிலை குன்றுவார். கத்திப் பாடுவார்.
  
எனவே வெண்பாவை, கள்ளை இங்கிணையாக உரைத்துள்ளேன். படித்துப்பார்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
19.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire