mercredi 8 mai 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
கடலும் விண்ணும்!
  
நீருண்டு! நீண்ட நிலையுண்டு! கோளுண்டு!
போருண்டு! போகும் பொறியுண்டு! - காருண்டு!
நீல நிறமுண்டு! மீனுண்டு! சூடுண்டு!
காலக் குளிருண்டு! காலையெழும் - கோலமுண்டு!
விண்ணில் கடலில் விளம்பு!
  
கோள் - பாம்பு, செவ்வாய், புதன் ஆகிய கோள்கள்.
  
கடல்
  
நீரிருக்கும். நீண்டு விரிந்திருக்கும். பாம்புகள் வாழும். கடலில் போர்கள் நடக்கும். கப்பலும், விசைப்படகுகளும் போகும். பேரிருள் மேவும். நீலநிறங் கொள்ளும். மீன்கள் வாழும். மேற்பரப்பு, சூரிய வெப்பத்தால் சூடேறும். அதன் ஆழத்திலும் மழைக்காலத்திலும் குளிரும். காலையில் பரிதி எழும் காட்சியைக் காணலாம்.
  
விண்
  
நீர் சுமந்த மேகம் நிறைந்திருக்கும். நீண்டு விரிந்திருக்கும். செவ்வாய், புதன் ஆகிய கோள்கள் சுற்றி வரும். வானில் போர் நடக்கும். மின்பொறிகள் செல்லும். பேரிருள் மேவும். நீலநிறங் கொள்ளும். விண்மீன்கள் இருக்கும். காலையில் சூரிய வெப்பம் விரிந்தோங்கும். இரவிலும் மழைக்காலத்திலும் குளிர் நிறைந்தோங்கும். காலையில் எழுகதிர் படர்ந்து அழகேந்தும்!
  
எனவே, ஆழ்கடலும் விரிவானும் ஒப்பாகும்.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
07.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire