samedi 18 mai 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
நாயும் பூட்டும்
  
வன்வாயில் பற்றும்! மனைகாக்கும்! மேல்தொங்கும்!
நன்வாயில் நன்கேகும்! கோல்கொள்ளும்! - தன்கழுத்தில்
சங்கிலி தானணியும்! கூடேற்கும்! கை..இழுக்கும்!
இங்குநாய் பூட்டுக்[கு] இணை!
  
நாய்
  
வாயினால் கௌவும், வீட்டினைக் காக்கும். நம்முடைய மார்பில் கால்களை வைத்துத் தொங்கும். இல்லத்தின் வாசலில் இருக்கும். கோலைத் துாக்கி எறிந்தால் வாயால் கௌவி எடுத்துவரும். கழுத்தில் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும். கூண்டில் படுத்திருக்கும். வாரினால் கட்டி இழுத்துச் சொல்வார்.
  
பூட்டு
  
வாயால் பற்றிப் பூட்டும். வீட்டினைக் காக்கும். வீட்டின் வாயில் கதவில் தொங்கும். திறவுகோல் ஏற்கும். இரும்புச் சங்கிலியால் பிணைத்திருக்கும். பல வடிவக் கூட்டினைப் பெற்றிருக்கும். [சிறிய கூடுகளைப் பூட்டவும் பயன்படும்] பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பார்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
17.05.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire