jeudi 15 novembre 2012

கம்பன் கவியரங்கம் [பகுதி - 2]



கம்பன் அணிந்த அணி 
(தமிழ் - மானம் - மாண்பு - புகழ்)
(தலைமைக் கவிதை)

கம்பன் அணிந்த அணி - தமிழ்

அருங்கம்பன் அணிந்திட்ட அணியில் ஓங்கி
     அகிலத்தை மகிழ்விக்கும் தமிழைப் பாடப்
பெருங்கம்பன் தந்ததமிழ்ச் சிறப்பைச் சூடப்
     பெருமையுடன் பாமல்லன் வருகின் றார்!சீர்
தருங்கம்பன் பாட்டாக இவரின் சொல்லில்
     தமிழோங்கித் தளதளக்கும்! கேட்போர் கண்முன்
வரும்கம்பன் தமிழ்மாட்சி! சந்தம் சிந்த
     வந்தொளிரும் தமிழாட்சி! சுவைப்போம் நன்றே!

பாமல்லன் பாட வருகவே! - தமிழின்
மாமல்லன் என்றபுகழ் சூட வருகவே!


கம்பன் அணிந்த அணி - மானம்

தன்மானக் கவிக்கம்பன் சீரைப் பாடத்
     தமிழ்மானத் தாரகை!இன் னமுதச் செல்வி!
பொன்வானப் பொலிவுடைய அழகி! எங்கள்
     புகழ்ஈழ லினோதினியார் வருகின் றார்!நல்
வன்மானச் சொல்லேந்தி வார்க்கும் பாட்டில்
     மண்மானம் மணம்வீசும்! குயில்கள் பேசும்!
இன்வானத் தமிழ்மதியே எழுக இங்கே!
     இனமன உயர்கவியைப் பொழிக நன்றே!

மானப் பாட்டிசைக்க - ஒளிரும்
ஞானப் பாட்டிசைக்க! - முழுங்கும்
வானப் பாட்டிசைக்க - இனிக்கும்
கானப் பாட்டிசைக்க - வருக
லினோதினி பெண்மணியே! - தருக
கம்பன் அணிந்த அணியே!


கம்பன் அணிந்த அணி - மாண்பு

தமிழினத்தின் மாண்புகளைத் தொகுத்துத் தந்த
     தண்டமிழின் மகன்கம்பன்! அவனின் பாக்கள்
அமிழினத்தை நிகர்த்தனவாம்! அன்னோன் வாழ்வில்
     அணிந்திட்ட மாண்புகளைப் பாட உள்ளார்
நமதினத்தை உயர்த்திடவே உழைக்கும் வண்ணை!
     நனிநன்றி உரைக்கின்றேன்! என்றன் நெஞ்சம்
சுமையிடத்தை அடையாமல் காத்த நண்பா
     சுவையிடத்தைக் காட்டிடவே மேடை வாராய்!

வண்ணை வருகவே! - கவிப்
பண்ணை வருகவே!
மண்ணைக் குளிர்விக்கும் - தமிழ்ப்
பண்ணைப் பொழிகவே!


கம்பன் அணிந்த அணி - புகழ்

ஈடில்லாக் கம்பன்தன் புகழைப் பாட
     இன்பாhத்த சாரதியார் வருகின் றார்!வாழ்
நாடில்லா நிலையுற்றும் இராமன் நெஞ்சம்
     நடுநிலையில் மாறியதோ! கம்பர் பாட்டில்
பீடில்லா சொல்லுண்டோ? கற்போர் தம்மைப்
     பிடித்திழுக்கா வரியுண்டோ? நமக்கு நல்ல
மூடில்லாப் பொழுதினிலும் பார்த்தன் பாடல்
     மோகத்தை நன்கேற்றி ஆடச் செய்யும்!

பார்த்த சாரதியே பாட வருகவே! - கம்பன்
கோத்த புகழைச் சூடத் தருகவே!
                                     (தொடரும்)

2 commentaires:

  1. பாட வந்தோரை வரவேற்கும் கவிதைககள் இனிக்கின்றன

    RépondreSupprimer
  2. ஒவ்வொன்றையும் பற்றி அருமையான அழகான வர்ணிப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...
    த.ம. 2

    RépondreSupprimer