கலைமாமணி கோ. கலியபெருமாள் எழுதிய
விருத்தமாயிரம் நுாலுக்குச்
சாற்றுகவி
கலைமா மணியார்! கனிவுடைக்..கோ
கலிய பெருமாள்! தமிழ்த்தொண்டர்!
மலைமாங் கனியாய்ச் சுவையூற
வடித்த இந்நுால் கவிக்கோட்டை!
சிலைமா வடிவாய்ச் சீர்மின்னும்!
செம்மைத் தமிழால் ஊர்மின்னும்!
அலைமாக் கடலாய்ப் பொருளாழம்!
ஆகா படித்து மகிழ்ந்தேனே!
கடமை மறவர்! திறனுடைக்..கோ
கலிய பெருமாள்! நற்கவிஞர்!
உடைமை உரிமை நெறியேந்தி
உலகம் வாழக் கவிசெய்தார்!
அடிமைப் போக்கு நீங்கிடவும்
அறிவாம் ஆற்றல் ஓங்கிடவும்
குடிமை யன்பைத் தாங்கிடவும்
கொள்கை யூட்டும் இந்நுாலே!
கம்பன் இளங்கோ மரபில்..கோ
கலிய பெருமாள் யாப்புற்றார்!
அம்மன் அருளை அகங்கொண்டார்!
அல்லும் பகலும் தமிழ்கற்றார்!
எம்மண் புலவர் போற்றிடவே
என்றும் எழுதிப் புகழ்பெற்றார்!
செம்பொன் னாக இந்நுாலைச்
செய்தார் வாழ்க பல்லாண்டே!
கன்னல் புதுவை நகரின்..கோ
கலிய பெருமாள்! தமிழ்நெஞ்சர்!
இன்னல் இல்லா வுலகத்தை
இயற்கை செழிக்கும் இன்பத்தைப்
பின்னல் சரமாய் மனிதத்தைப்
பேணிப் படைத்தார் விருத்தங்கள்!
உன்னல் யாவும் உயர்வென்பேன்
ஓதும் உள்ளம் ஒளிபெறுமே!
கருணை கமழும் மனத்தர்..கோ
கலிய பெருமாள்! கவிப்பித்தர்!
அருணை கமழும் எண்ணத்தால்
அமுதக் கவிகள் படைத்திட்டார்!
சுருணை கமழும் அழகாகச்
சொற்கள் சுழலும்! தேன்பொழியும்!
வருணை யம்மன் திருவாருளால்
வடித்த இந்நுால் தமிழ்மழையே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு,
உலகத் தமிழ்ச் சிறகம்,
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,
பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.
05.05.2024