dimanche 5 mai 2024

சாற்றுகவி

 

கலைமாமணி கோ. கலியபெருமாள் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சாற்றுகவி

 

கலைமா மணியார்! கனிவுடைக்..கோ

         கலிய பெருமாள்! தமிழ்த்தொண்டர்!

மலைமாங் கனியாய்ச் சுவையூற

         வடித்த இந்நுால் கவிக்கோட்டை!

சிலைமா வடிவாய்ச் சீர்மின்னும்!

         செம்மைத் தமிழால் ஊர்மின்னும்!

அலைமாக் கடலாய்ப் பொருளாழம்!

         ஆகா படித்து மகிழ்ந்தேனே!

 

கடமை மறவர்! திறனுடைக்..கோ

         கலிய பெருமாள்!  நற்கவிஞர்!

உடைமை உரிமை நெறியேந்தி

         உலகம் வாழக் கவிசெய்தார்!

அடிமைப் போக்கு நீங்கிடவும்

         அறிவாம் ஆற்றல் ஓங்கிடவும்

குடிமை யன்பைத் தாங்கிடவும்

         கொள்கை யூட்டும் இந்நுாலே!

 

கம்பன் இளங்கோ மரபில்..கோ

         கலிய பெருமாள் யாப்புற்றார்!

அம்மன் அருளை அகங்கொண்டார்!

         அல்லும் பகலும் தமிழ்கற்றார்!

எம்மண் புலவர் போற்றிடவே

         என்றும் எழுதிப் புகழ்பெற்றார்!

செம்பொன் னாக இந்நுாலைச்

         செய்தார் வாழ்க பல்லாண்டே!

 

 

கன்னல் புதுவை நகரின்..கோ

         கலிய பெருமாள்! தமிழ்நெஞ்சர்!

இன்னல் இல்லா வுலகத்தை

         இயற்கை செழிக்கும் இன்பத்தைப்

பின்னல் சரமாய் மனிதத்தைப்

         பேணிப் படைத்தார் விருத்தங்கள்!

உன்னல் யாவும் உயர்வென்பேன்

         ஓதும் உள்ளம் ஒளிபெறுமே!

 

கருணை கமழும் மனத்தர்..கோ

         கலிய பெருமாள்! கவிப்பித்தர்!

அருணை கமழும் எண்ணத்தால்

         அமுதக் கவிகள் படைத்திட்டார்!

சுருணை கமழும் அழகாகச்

         சொற்கள் சுழலும்! தேன்பொழியும்!

வருணை யம்மன் திருவாருளால்

         வடித்த இந்நுால் தமிழ்மழையே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

05.05.2024

 

 

சாற்றுகவி

 

மரபு பாவலர் மு. விசய சாமுண்டீசுவரி எழுதிய

புறநானுற்றுப் புதுமை நுாலுக்குச்

சாற்றுகவி

 

புறநா னுாற்றுப் புதுமையெனப்
         புனைந்த பாக்கள்! தேன்பூக்கள்!

மறநாப் புலவர் மாட்சியினை

         வல்ல தமிழர் ஆட்சியினை

அறநாத் தமிழின் நீட்சியினை

         அணிகள் மின்னும் காட்சியினை

விறனா கொண்டு படைத்திட்டார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

ஆரங் கொண்ட பேரழகாய்

         அளித்த பாட்டுக் கனிக்கூட்டு!

காரங் கொண்ட கருத்துக்கள்!

         கருத்தைக் கவரும் அருஞ்சொற்கள்!

ஈரம் கொண்ட நல்லடிகள்!

         இன்பத் தமிழின் மனைப்படிகள்!

வீரங் கொண்ட தமிழ்தந்தார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

சங்கத் தமிழின் புகழேந்தித்

         தந்த யாப்புத் தமிழ்க்காப்பு!

தங்கத் தமிழின் முக்கொடிகள்

         தரித்த இமயம் புகழ்கூறும்!

சிங்க மென்ன? தமிழ்த்தோள்கள்

         சிலிர்த்தால் வெற்றிப் பூக்கொட்டும்!

வெங்கண் வீரர் பேர்காத்தார்!

         விசய சாமுண் டீசுவரியார்!

 

மண்ணார் வாச மரபினிலே

         மலர்ந்த சீர்கள்! தமிழ்வேர்கள்!

பண்ணார் தமிழர் பண்பாட்டைப்

         பசுமை படர்ந்த வரலாற்றைக்

கண்ணார் வண்ண ஓவியமாய்க்

         காலங் காக்கும் காவியமாய்

விண்ணார் முகில்போல் பொழிந்திட்டார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

ஓங்கு புலமை உரமோங்கி

         உதித்த பாடல்! தமிழ்க்கூடல்!

தேங்கு வளமை நிலமோங்கித்

         தென்றல் பொதுமை நிலையோங்கித்

தாங்கு வன்மை மனமோங்கித்

         தமிழ்த்தாய் தந்த குணமோங்கி

வீங்கு புகழால் வாழியவே

         விசய சாமுண் டீசுவரியார்!

 

விறல் + நா = விறனா

வெற்றி, பெருமை, வன்மையுடைய நாக்கு

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

05.05.2024

mercredi 1 mai 2024

தொழிலாளர் திருநாள்

 

தொழிலாளர் திருநாள் வாழ்த்து!

 

பாட்டின் அரங்க உழவர்களே!

       பகலும் இரவும் பைந்தமிழைத்

தீட்டும் வன்மை மறவர்களே!

       செந்தேன் மொழிசேர் மறத்திகளே!

நாட்டின் நிலையை மாற்றிடவே

       நன்றே கவிகள் படைத்திடவீர்!

காட்டின்  வளத்தைப் பாட்டுக்குள்

       சூட்டும் புலவன் வாழ்த்துகிறேன்!

 

காட்டு மேட்டை ஏர்..எழுதும்!

       கவிதை யேட்டைக் கோல்..எழுதும்!

வாட்டும் சூட்டைப் போக்கிடவே

       வளர்ந்த மரங்கள் நிழல்..எழுதும்!

கூட்டுப் புரியும் கொள்ளையரைக்

       குழிக்குள் போடத் தமிழ்..எழுதும்!

மீட்டும் இனிமை வேண்டுமெனில்

       வேர்வைப் பூக்கள் பூக்கட்டும்!

 

கன்னல் தமிழே முதலாகும்!

       கவிதை நம்மின் தொழிலாகும்!

இன்னல் புரியும் கொடுநரியை

       இன்றே விரட்டல் கடனாகும்!

தின்னல் ஒன்றே தொழிலாகத்

       திரிவோர் உலகுக் கிழிவாகும்!

உன்னல் யாவும் மொழிநலமே!

       உழைப்போர் திருநாள் வாழ்த்துக்கள்!

 

உன்னல் - நினைத்தல்  

       

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.5.2024

dimanche 28 avril 2024

தென்பசியார் பொன்விழா


தென்பசியார் வாழியவே!

 

எடுப்பு

 

தென்பசியார் வாழியவே! - என்றும்

இன்மொழியார் வாழியவே!

                                             [தென்பசியார்]

 

தொடுப்பு

 

விண்மழையார் வாழியவே! - சந்தப்

பண்மழையார் வாழியவே!

                                             [தென்பசியார்]

 

முடிப்பு

 

வண்ணமுடன் வாழியவே! வள்ளுவனார் தந்தபுகழ்

எண்ணமுடன் வாழியவே! எத்திசையும் ஏத்துகின்ற

அண்ணனுடன் வாழியவே! அருந்தந்தை கொள்கையிலே

திண்ணமுடன் வாழியவே! செந்தமிழின் சீர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

யாப்பேந்தி வாழியவே! எந்நாளும் கவிபூக்கும்

தோப்பேந்தி வாழியவே! தொன்மொழியாம் நம்மொழிக்குக்

காப்பேந்தி வாழியவே! கருத்தெல்லாம் வாழைதரும்

சீப்பேந்தி வாழியவே! தென்னவர்தம் பேர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

குடிசெழித்து வாழியவே! கொல்லைவளர் ஆலெனவே

அடிசெழித்து வாழியவே! அகத்துள்ளே அன்புமலர்க்

கொடிசெழித்து வாழியவே! அந்தமிழின் அரசோங்க

வெடிவெடித்து வாழியவே! வெல்தமிழின் ஏர்முழங்கித்

                                             [தென்பசியார்]

 

ஊர்போற்ற வாழியவே! உற்றாரும் கற்றாரும்

சீர்போற்ற வாழியவே! திசையாவும் பாடுதமிழ்

வேர்போற்ற வாழியவே! விந்தைமிகு பாட்டுலகில்

தார்போற்ற வாழியவே! தண்டமிழின் மண்முழங்கி

                                             [தென்பசியார்]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.04.2024